பிரீதா அந்த புகைப்படத்தையே பார்த்தபடி இருப்பதை கண்ட விஜி,
“என்ன பார்க்குறீங்க பிரீதா, என் அண்ணன் பயங்கர ஸ்மார்ட்டா இருக்கான்னா? அவன் பார்க்க தான் அப்படி ஆனால் சரியான ப்ராடு!”
பிரீதா ஆச்சர்யமாக பார்த்தாள்.
“ஹா ஹா... என்னடா இப்படி சொல்றேன்னு பார்க்குறீங்களா? வேற என்ன செய்வது உண்மையை தானே சொல்ல முடியும்! அவன் ஒரு சரியான குரங்கு... பயங்கரமா கோபம் வரும்... கன்னாபின்னான்னு கத்துவான்... தண்ணி, சிகரெட் எல்லாம் உண்டு... ஆனாலும் என் அண்ணன் ஆச்சே அவனை பற்றி நான் தப்பா சொல்ல முடியுமா, ரொம்ப நல்லவன்...” என்றாள் விஜி புன்னகையோடு.
அவளின் விளையாட்டு பேச்சில் எது உண்மை எது பொய் என்று புரியாமல் குழம்பினாள் பிரீதா...
ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது! அவனுக்கு இன்னமும் திருமணமாகவில்லை...
ஏனோ திடீரென மனதினுள் ஒருவித மகிழ்ச்சி பரவுவதை பிரீதாவால் தடுக்க முடியவில்லை...
இரண்டு வருடங்களுக்கு முன் அவள் அவனிடம் பேசிய விதத்திற்கு அவன் அவளுக்கு உதவி செய்ததே பெரிது... அதன் பின் ஒரு முறை கூட என்ன எது என்று அவன் கேட்காமல் இருப்பதில் இருந்தே அவன் மனதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது...
இது எல்லாம் தெரிந்திருந்தாலும் புரிந்திருந்தாலும் கூட அவள் மனதில் அவனுக்கு இன்னமும் திருமணமாகவில்லை என்ற செய்தி ஒரு விதமான இன்ப உணர்வை தந்தது...
“உங்க அண்ணா இங்கே வரலையாங்க விஜி?” மனதில் ஏற்பட்டிருந்த படபடப்பை வெளிக் காட்டதிருக்க முயன்றபடி கேட்டாள் பிரீதா.