துணையாக இருப்பது என்று ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருப்பது போல் தான் இருந்தது அவளுக்கு...
இப்படி எதுவுமே செய்யாதிருந்தால் சரிபட்டு வராது என்று தான் பிரீதா தானாகவே செல்லம்மாவின் அனுமதியோடு தோட்டத்தை சீர் செய்து செடிகள் வளர்க்க தொடங்கியதே!
இந்த வாழ்வும் கூட அவளுக்கு வினய்யின் உதவியினால் கிடைத்தது தான்... மனம் தானாக மீண்டும் வினய்யிடம் சென்றது.
வினய் அவள் கல்லூரி இறுதி ஆண்டிற்காக ப்ராஜக்ட் செய்ய சென்ற நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருந்தான். மிகவும் கண்டிப்பானவன் என்று பெயர் வாங்கியவனின் டிபார்ட்மெண்டில் தான் அவள் ப்ராஜக்ட் செய்ய வேண்டி இருந்தது.
அந்த இரண்டு மாதங்களில் தினம் தினம் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தாலும் கூட, ஒரு சில முறை தான் இருவரும் பேசி இருக்கிறார்கள்...
அவளுடைய ப்ராஜக்ட் வேலையை முடித்து, ரிப்போர்டை அவனுடைய அப்ரூவலுக்கு அனுப்பினால், வினய் அதில் சின்ன ஒன்றிரண்டு பிழைகளை கண்டான்... அதை மறைக்காமல் அவனுடைய அப்ரூவல் ரிப்போர்ட்டில் எழுதி அவளிடம் தரவும் செய்தான்...
அவ்வளவு தான் பிரீதாவிற்கு அழுகை வராத குறை தான்! இதை அப்படியே கொண்டு சென்று கல்லூரியில் தந்தால் அவளுக்கு பாதி மதிப்பெண் கூட தர மாட்டார்களே! சின்ன பிழைகள் என்ற போதும், ப்ராஜக்ட் செய்த நிறுவனத்திலேயே ரிப்போர்ட்டில் அப்படி பிழைகள் இருப்பதாக சொன்னால், கல்லூரியில் என்ன மதிப்பெண் கிடைக்கும்?
அவனிடம் நிலைமையை விளக்கினால், ஒரு புன்னகையோடு,
“பிரீதா, உங்களை பற்றி நல்ல ரிமார்க் தானே கொடுத்திருக்கேன். ரிப்போர்டில் இருந்த சின்ன காஸ்மெடிக் மிஸ்டேக்ஸ் பற்றி தானே சொல்லி இருக்கேன். அதெல்லாம் பெரிய விஷயமா இருக்காது.”