“போர் எல்லாம் இல்லை சித்தி... கொஞ்சம் ப்ரிபேர் செய்யனும்... ரொம்ப ஆர்வத்தோடு வந்திருக்கேன்.. மூணு மாசம் இன்டர்ன்ஷிப் தான், ஆனாலும் நல்லா செய்யனும்...”
“உனக்கென்ன சௌபி நீ நல்லா தான் செய்வ...” என்ற கோமதி, ஒரு சில வினாடிகள் இடைவெளி விட்டு,
“ஆமாம் நீ அந்த கஸ்தூரியோடவா மூணு மாசம் வேலை செய்ய போற?”
சௌபர்ணிகாவின் கண்கள் பளிச்சிட்டன...
“ஆமாம் சித்தி உங்களுக்கு அவங்களை தெரியுமா? அவங்களோட கூட வேலை செய்ய இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை...”
சௌபர்ணிகாவிற்கு சிறு வயது முதலே பத்திரிக்கை துறையில் ஆர்வம் அதிகம். அதிலும் கஸ்தூரியின் கட்டுரைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்... பெண்கள் பற்றி கஸ்தூரி எழுதும் கட்டுரைகள் படித்து தான் அவளுக்கு அந்த துறையில் ஆர்வம் வந்தது என்று சொன்னாலும் கூட மிகையில்லை...
அவளின் ஆர்வத்தை அவளின் பெற்றோரும் தடுக்கவில்லை... பள்ளி படிப்பு முடித்து பி.எஸ்.ஸி விஷுவல் கம்யுனிகேஷன் தேர்வு செய்து படித்தாள். கல்லூரி இறுதி ஆண்டில் நடைபெற்ற மாநில அளவிலான மாணவ பத்திரிக்கையாளர் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றாள்.
அதற்கு பரிசாக நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற சென்னையை தலைமையகமாக கொண்ட அந்த பத்திரிக்கை குழுமத்தில் மூன்று மாதம் பயிற்சி பெறும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது. அந்த பத்திரிக்கை குழுமம் பல வகையான இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது... சௌபர்ணிகா, மனதில் தன்னுடைய முன் மாதிரியாக நினைத்திருந்த கஸ்தூரி பொறுப்பேற்றிருந்த பெண்சக்தி வார இதழில் பயிற்சி பெற விரும்பினாள்... அதுவே அவளுக்கு கிடைக்கவும் செய்திருந்தது...