கணவரின் மீது வைத்திருந்த அன்பை அவ்வப்போது மேஜை மீது இருக்கும் அந்த புகைப்படத்தில் நிலைத்திருக்கும் அவளின் பார்வையிலும், ஒவ்வொரு நாளும் காலையில் வரும் அந்த தொலைபேசி உரையாடலின் போது அவளின் கண்களில் மின்னும் சந்தோஷத்திலும் பார்த்து அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது...
🌼🌸❀✿🌷
ஒன்றிரண்டு முறை கஸ்தூரியை சித்தப்பாவின் வீட்டின் அருகிலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை ஆச்சர்யமாக பார்த்தவளிடம்,
“என்னோட சித்தப்பா வீடு இங்கே இதே அப்பார்ட்மென்ட்டில் தான் இருக்கு மேடம்... க்ரவுண்ட் ப்ளோர்... அவர் பேர் நந்தகோபால்...” என்று விளக்கமளித்தாள்.
“ஓ!” என்றதற்கு மேல் கஸ்தூரி எதுவும் சொல்லவில்லை.
சித்தியும் அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் மற்ற சில பெண்களும் அவளை பற்றி பேசுவது கஸ்தூரிக்கும் தெரிந்திருக்குமா என்று சௌபர்ணிகா மனதில் கேள்வி எழுந்தது...
கோமதி அவ்வப்போது கஸ்தூரி பற்றி சௌபர்ணிகாவிடம் பேச்சை எடுப்பாள். சித்தி கஸ்தூரியை பற்றி வம்பு பேச தான் கேட்கிறாள் என்பது தெரிந்த படியால் வேறு ஏதேனும் சொல்லி பேச்சை மாற்றுவாள் சௌபர்ணிகா...
மூன்று மாதம் ஓடி சென்றது... சௌபர்ணிகாவின் பயிற்சி முடியும் நேரமும் வந்தது... சௌபர்ணிகாவின் மனதில் மூன்று மாதங்கள் கஸ்தூரியுடன் பணி புரிந்தது சந்தோஷத்தை கொடுத்த போதும், ஒரு முறை கூட அவளின் பாராட்டை பெறாதது மனதினுள் வருத்தத்தை கொடுத்தது... ஆனால் அதை எல்லாம் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அந்த கட்டுரைக்கு தேவையான இறுதி கட்ட விபரங்களை அழகாக தொகுத்து கஸ்தூரியிடம் கொடுத்தாள்.
“ஓகே! இந்த வீக்கோட உன்னுடைய ட்ரெயினிங் முடியுதுல? நான் நாளைக்கு பார்த்து சொல்றேன்...”