இருவரும் பேசிக் கொண்டிருந்த போது சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்த ஜோடியை முதலில் பார்த்தது சௌபர்ணிகா தான்... பார்த்ததும் அவள் முகத்தில் அதிர்ச்சி தோன்றியது... ஆணும் பெண்ணும் ஒன்றாக காபி ஷாப் வருவதை தவறாக சொல்ல முடியாது ஆனால் அவர்கள் இருவரின் இடையே இருந்த நெருக்கம் அவர்களின் உறவை எடுத்து சொல்வதை போலிருந்தது...
சௌபர்ணிகாவின் கவனம் வேறு பக்கம் இருப்பதை உணர்ந்து அந்த பக்கம் பார்த்த கஸ்தூரி தலையில் இடியே விழுந்து விட்டது போல் அதிர்ந்து போனாள்!
அங்கே வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது அவளுடைய கணவன் குமரனே தான்...
நம்ப இயலாமல் அவள் பார்த்திருக்க, உள்ளுணர்விலோ என்னவோ குமரனும் இவர்களின் பக்கம் பார்த்தான்... அவனின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது...
அவசரமாக எழுந்த கஸ்தூரி, ஒரு வினாடி தயங்கி விட்டு,
“சௌபர்ணிகா, நீ நாம ரெகார்ட் செய்ததை எல்லாம் ஆபிஸ் எடுத்து போய் என்னுடைய ரூம் டேபிளில் வை... நான் நாளைக்கு பார்க்கிறேன்... நான் இதற்கு மேல் இன்னைக்கு ஆபிஸ் வர மாட்டேன்...” என்றாள்.
சௌபர்ணிகாவிற்கு அப்போதும் அங்கே இருந்து கிளம்ப தயக்கமாக இருந்தது... அவள் தயங்கியபடி நிற்கவும், கஸ்தூரி அவளை ஒரு பார்வை பார்த்தாள்... அதையே கட்டளையாக ஏற்றுக் கொண்டு அலுவலகம் வந்து கஸ்தூரி சொன்னதை செவ்வனே செய்த சௌபர்ணிகாவிற்கு மனதினுள் புயல் அடித்துக் கொண்டிருந்தது. கஸ்தூரியை விட பத்து வயது சிறியவள் என்ற போதும், கஸ்தூரியின் நிலையை சௌபர்ணிகாவால் உணர முடிந்தது...
மனதினுள் பாரத்துடனே வீடு வந்தவளை கோமதி ஆர்வத்துடன் வரவேற்றாள்.
“உனக்கு விஷயம் தெரியுமா, அந்த கஸ்தூரியோட புருஷனுக்கு ஒரு கீப் இருக்காளாம்...