யாழினியின் அருகில் விட்டுவந்த தன் குழந்தை அங்கே வந்து புதியவன் கைகளில். அவன் அருகில் நின்ற மற்றவன் குழந்தையை வைத்திருந்தவன் தோளில் தட்டுவது தெரிகிறது. குழந்தையுடன் நின்றவன் சுற்றி பார்வையை சுழலவிட மீண்டுமாய் தலையை உள்ளிளுத்துக்கொண்டே யோசித்தான் பார்த்தீபன். எப்படி சாத்தியம்? ஆனால் முதலில் குழந்தையை தான் காப்பாற்றவேண்டும். ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம். இருவரை தான் தனிஒருவனாக சமாளிப்பது கஸ்டம். ஆனால் காப்பாற்றியே ஆகவேண்டும்.
மெல்ல தலையை நீட்டிபார்த்தபோது குழந்தையைவைத்திருந்தவனோ அல்லது அவனுடன் நின்றிருந்தவனோ அங்கு இல்லை. சுற்றிவர கண்களை சுழலவிட்டபோது வாயில் அருகில் நின்றிருந்தவன் சற்றுத்தள்ளியிருந்த ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தான். உள்ளே குழந்தையின் முனகல் ஒலியும் அதைத்தொடர்ந்து அதட்டல் பேச்சும் கேட்டது.
அடுத்த சிலநிமிடங்களில் சாத்தியிருந்த கதவினை வேகமாகத்திறந்து கொண்டு வேங்கையாய் உள்ளே பாய்ந்தான் பார்த்தீபன் . அந்த நேரத்தில் அங்கு புதியவன் ஒருவன் நுழையவும் ஆத்திரமடைந்தவன் தன்னை நோக்கி வந்த பார்த்தீபனின் காலில் தன் காலால் ஒரு உதைவிட்டான். சோர்ந்துபோயிருந்த பார்த்தீபன் சுருண்டு வீழ்ந்தான். கையில் இருந்த கல் பார்த்தீபன் அருகில் வீழ்ந்தது. அந்த புதியவன் வீழ்ந்து கிடந்த பார்த்தீபன் மேல் ஏறியமர்ந்து முகத்தில் குத்த ஆரம்பித்தான். அடியை வாங்கிக்கொண்டே அருகில் கிடந்த கல்லை எடுத்து தன் மேல் இருந்தவனின் நெற்றியைப்பதம் பார்த்தான்.
. அடியின் வேகத்தில் தள்ளாடியபோதும் அவன் பார்த்தீபனை தாக்க முயன்றான். உணவைக்கண்ணால் கண்டே ஒருவாரம் ஆகியிருந்த அவன் உடலிற்கு தன் கையில் சிக்கியவனை அடிக்க எங்கிருந்து பலம் வந்ததோ அடித்து கடித்து என தன்னால் இயன்றவரை முயன்று தாக்கினான். அடிவாங்கியவன் சரிந்துவீழ்ந்தபின்னும் இருந்த கோபத்தையெல்லாம் மொத்தமாய் சேர்த்து உதைத்துக்கொண்டேயிருந்தான் சில நிமிடங்களுக்க முன்பே தன் கையால் இறந்துபோனவனை.
அடியின் பலமா அல்லது அடிவாங்கியவனின் கெட்டநேரமோ. ஏதோ ஒன்று காரணமாய் அமைந்துவிட அடிவாங்கியவன் இறந்து விட்டான். அவன் இறப்பை அவனின் நின்றுபோன இதயத்துடிப்பு உறுதி செய்தது. தான் ஒரு கொலைகாரன் என்ற எண்ணம் வேதனை தந்தாலும் குழந்தையைக்காப்பாற்றிய நிம்மதி அவனுள் எழ ஆரம்பிக்க அடுத்த பிரச்சனை வந்து சேர்ந்தது.
தந்தையைக்கண்டதும் குழந்தை அழ ஆரம்பித்தாள். விபரீதம் ஏதும் நிகழும் முன் குழந்தையைக் காப்பாற்றியிருந்தாலும் பயந்திருந்த குழந்தை வீரிட்டாள்.. அவள் அழுகை வெளியே நிச்சயம் கேட்க்கும். என்ன சமாதானம் செய்தும் அவள் அழுகை நின்றபாடில்லை. குழந்தையின் அழுகையை நிறுத்த பார்த்தீபன் முயன்று கொண்டிருந்த வேளை கதவு தட்டும் சத்தம் கேட்டது. பார்த்தீபனின் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. உள்ளிருந்தபடியே கதவையும் இறந்து கிடப்பவனையும் மாறிமாறிப் பார்த்தான்.
வெளியே நிற்பவன் உள்ளே வந்தால்….. மீண்டும் அவன் எண்ணம் மனைவி மக்கள் என செல்ல கதவு தட்டும் ஓசையும் அதிகரித்தது. பார்த்தீபனின் நல்லநேரம் கதவு தட்டும் ஓசை அதிகரிக்கவும் குழந்தை அழுகையை நிறுத்தியது. குழந்தையின் அழுகை நிற்கவும் சற்றுநேரம் கதவு தட்டும் ஓசையும் நின்றது. வந்தவன் என்ன நினைத்தானோ திரும்பிச் சென்றுவிட்டான். அவனின் காலடி ஓசை நிற்கும்வரை கதவினருகிலேயே சென்று காத்திருந்தான் பார்த்தீபன்.
நேரம் கடந்துகொண்டே சென்றது. குழந்தையிடம் நடந்ததைக் கேட்டான் பார்த்தீபன். குழந்தை தன் மழலை மொழியில் நடந்ததைச் சொன்னது. யாழினி அருகில் இருந்த குழந்தையை பலவந்தமாக கடத்திக் கொண்டுவந்திருக்கிறான் அவன். விதி பார்த்தீபனையும் இங்கே இழுத்தவந்திருக்கிறது.
நேரம் நள்ளிரவைத் தொட்டுவிடத்துடித்துக் கொண்டிருந்தது. இத்தனை நேரத்தில் குழந்தை தோளிலேயே தூங்கிவிட்டாள். லேசாய் கதவைத்திறந்து பார்த்த பார்த்தீபன் கண்ணில் ஆபத்திற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை . நள்ளிரவு நேரம் என்பதால் அங்கிருந்தவர்கள் நித்திரையில் இருந்தனர். எனவே கொஞ்சம் தைரியமாகவே அந்த இடத்தை விட்டு வெளியேற நினைத்தான். அந்த இடத்தில் இருந்த ஒரு உணவுப்பொட்டலமும் அதே பையினுள் சிலபழங்களும் கண்ணிலபட அவற்றை எடுக்கலாமா வேண்டாமா என தயங்கியவன் மகளின் பிஞ்சு முகமும் யாழினியின் மயங்கிய நிலையும் அவன் மனதை மாற்ற அதையும் எடுத்துக்கொண்டு குழந்தையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் பார்த்தீபன். இரத்தம் படிந்த கைளில் இரத்தம் படியாத ஒரு சில உணவுப்பொட்டலங்கள்.
மகளைக் காக்க இங்கு அவனை அழைத்துவந்து உதவிசெய்த விதி சதிசெய்ய நினைத்தது. எங்கோ வெளியில் சென்றிருந்த இருவர் இந்த இருப்பிடங்களுக்குள் நுழையவும் பார்த்தீபன் வெளியேறவும் சரியாய் இருந்தது. நேருக்கு நேர் பார்த்துவிட்டாலும் அவர்களின் கைக்கெட்டும் தூரத்தில் பார்த்தீபன் இல்லை. அங்கிருந்த மங்கலான வெளிச்சத்திலும் குழந்தையுடன் நிற்கும் தன்னை நோக்கி அவர்கள் ஓடிவருவது தெரிந்தது. அடுத்தென்ன ஓட்டம்தான்.
இப்போது…….
தன்னுயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பார்த்தீபனிடம் அவனுயிரை எடுக்கவேண்டும் என்ற எண்ணம் துரத்துபவர்களிடம். ஓடிஓடி ஒரு காட்டினுள் உட்புகுந்துகொண்டனர். நால்வரும். பார்த்தீபனுக்கும் அவனைத்துரத்தி வந்தவர்களுக்குமான இடைவெளி ஓரிரு அடிகள் மட்டும்தான் இருந்தது. அந்த நேரத்தில் எங்கிருந்து வந்ததோ அந்த இடி அங்கு வீழ்ந்தது.