“நீலத்திரைக் கடலோரத்திலே நின்று தவம் செய்யும் குமரிப் பெண்ணே!
யாரை நினைத்து நீ ஏங்குகின்றாய் - இந்த மர்மத்தை என்னிடம் சொல்லிடம்மா!” என்று நான் பாடி, ஜாடையாக அவளுடைய விவரங்களைக் கரக்க நினைத்தேன். இருப்பினும் அவள் பிடித்து வைத்த பிள்ளையார் போல் அமர்ந்து கடலையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. அது ஏதோ ஒரு யுகம் கடந்தது போல் இருந்தது.
நானாயிருந்தால் நடந்தே ரயில்வே ஸ்டேஷன் போயிருப்பேன். கூடத்தான் அவளிருக்கிறாளே? நான் ஒரு அடி எடுத்து வைத்தாலும் பார்வையாலே அளக்கும் அவளை விட்டுவிட்டு போகவும் மனதில்லை. அவளிடம் மனது செல்லத் துடித்தது| அதை தாரை வார்க்கவும் மனதில்லை.
இந்நிலையில், நாலணாவிற்கு ஒரு ரிக்ஷா வண்டியை ஏற்பாடு செய்து, நாங்கள் தொடர்வண்டி நிலையம் சென்றோம். நாங்கள் செல்லவும், ரயில் வரவும் சரியாயிருந்த காரணத்தால், வேகமாக சென்று ரயிலில் ஏறினோம். அப்போது ஏதோ போராட்டம் (வேறென்ன? சுதந்திரப் போராட்டம் தான்!) நடக்கிறபடியாலும், அப்போது பெரிய ஸீஸன் இல்லாதபடியாலும் இரண்டாம் வகுப்புப் பெட்டி காலியாயிருந்தது.
நாங்கள் இருவரும் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்தோம். ஒரு மணிநேரம் பிரயாணப்பட்ட பிற்பாடு, ரயில் ஏதோ பேர் தெரியாத இடத்தில் நின்றது. அது என்ன ஊர் என்பதை தெரிந்து கொள்வதற்காக, நான் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். ஒரு ஐந்து நிமிட தேடுதலுக்குப் பிறகு, கார்டிடம் கேட்பது என்று முடிவு செய்து திரும்பினேன், அங்கே அந்தப் பெண் இல்லை!
எனக்குக் குலை நடுங்கி விட்டது! ஆம்! அந்தப் பெண் அங்கு இல்லை. அவள் எனது பாதுகாப்பை நாடி வந்த போதே ஏதோ பிரச்சனை என்று நினைந்திருந்தேன். அது உண்மை தான் போல என்பது போல் ஆகிவிட்டது இப்போது!
அவளைத் தேடுவதென்று கண நேரத்தில் நான் எழுகிறேன், அங்கே ஒரு மனிதர் வந்து நின்றார்.
அவர், பார்ப்பதற்கு, பிரிட்டிஷாரின் ரகசிய காவல் இலாகா (சி.ஐ.டி) ஆபீஸர் போல் இருந்தார். ஆறடி உயரம், நீளமான கருப்பு நிற ஓவர்கோட், தலையில் தொப்பி, கண்களில் காந்தி கண்ணாடி (அதுவும் கருப்பு நிறத்தில்), வாயிலே பைப் என்று கம்பீரமாக வந்து நின்ற அந்த மனுஷன், நிச்சயம் வேலையின்றி வந்திருக்க மாட்டார் என்று தோன்றியது.
அவர், என்னிடம்,
“ஓய்! நில்லும்!” என்றார். நான் அவருடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து நின்றேன்.
“இங்கே, இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வந்தாளா?” என்று கேட்டார். அப்போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவல்லை.
அப்போது தான் நான் கவனித்தேன், அவள் கழிவறைக்குள் இருந்தபடி எனக்கு சைகை காட்டிக் கொண்டிருந்தாள்!
“இல்லை. இந்தப் பெட்டி காலியாயிருக்கிறதே என்ற ஆசையில் இங்கு வந்தேன்.
நீஙக்ள பெண்கள் கோச்சில் சென்று தேடலாமே?” என்றேன். அவர் என்னை ஒரு பார்வையால் அளந்து விட்டு, நேராகப் போய்விட்டார்.
அவர் போனது உறுதியானதும், கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டு, வெளியே வந்தாள் அந்தப் பெண். வந்து முன்னர் அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்தாள்.
வண்டி நகர ஆரம்பித்தது. நான் மெல்ல,
“பெண்ணே? அந்த மனுஷர் யார்?” என்று கேட்டேன். நிச்சயம், எனக்குப் பொறுமை குறைந்து கொண்டு தான் வந்தது.
அவளோ,
“இப்போ எதுவும் கேட்காதீர்கள். பிறகு எல்லா விஷயத்தையும் சொல்கிறேன்!” என்று சொல்லிவிட்டு வெளியே பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
அந்த பாழாய்ப் போன ரயிலை உருட்டிக் கொண்டு, மறுநாள் காலை நாங்கள் மதராஸ் வந்தடைந்தோம்.
சென்ட்ரலில் இறங்கிய பிறகு, அவள்,
“நான் நுங்கம்பாக்கத்தில், சாரதி தெருவில் உள்ள லாட்ஜில் இருப்பேன். நான் கடிதம் அனுப்பிய பிற்பாடு நீங்கள் என்னைப் பார்க்க வாருங்கள்!” என்று கூறி, மறுமொழி சொல்லும் முன் கூட்டத்தினின்றும் மறைந்தாள். எனக்கு அந்தக் கவலை அப்போது அடியோடு மறந்து போனது – ஆம்! என் பெட்டிகளுள் ஒன்று காணவில்லை. அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன், அதே மனிதர் – அந்த ஓவர்கோட் அணிந்தவர் – வந்தார்.
“உங்களுடன் ஒரு பெண் நின்று பேசிக் கொண்டிருந்தாளே?” என்று கேட்டார். நான் ஆமோதிப்பது போல் தலையாட்ட, அவள் சொன்னது பற்றிய சேதிகளைக் கேட்டார். அவர் யார் அதைக் கேட்க என்று சொல்ல வந்தேன், அவர் பேண்டில் சொருகியிருந்த ரிவால்வர் அதைச் சொல்ல விடாமல் தடுத்தது. நான் உடனே,
“திருவல்லிக்கேணியில் நல்ல ஓட்டல் உண்டா? என்று கேட்டார்கள்!” என்றேன். அவர்,
“நீர் என்ன சொன்னீர்?” என்று கேட்டேன். நான்,