“அது பற்றிய அவ்வளவு அறிவு தமக்கு இல்லையென்று சொல்லிவிட்டேன்!” என்று சொன்னேன். அவர் ஏதோ யோசித்தார். பின்னர்,
“நீங்கள் இனிமேல் அந்தப் பெண்ணை சந்திக்கவுள்ளீர்களா?” என்று கேட்டார். நான் மறுத்தேன்.
“ஐயோ சார் எனக்கே ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. நீங்கள் யார்? அந்தப் பெண் யார்? ஏன் இப்படி அவளைப் பின் தொடர்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர்,
“வாருங்கள்! நிறைய சொல்ல வேண்டும்!”
என்று சொல்லிக் கொண்டே என்னை ஒரு டீக்கடைக்கு அருகில் அழைத்துச் சென்றார். இரண்டு காபி ஆர்டர் செய்துவிட்டு, அருகில் இருந்த பெஞ்சில் என்னை உட்கார வைத்து அவரும் அமர்ந்தார்.
பின்னர் ஒரு கதையைச் சொன்னார். நேயர்களுக்காக அந்தக் கதை அவர் கூறியபடியே பின்வருமாறு:
“ஸார்! என் பெயர் தியாகராஜன். தியாகு என்பார்கள். நான் ஒரு போலீஸ் அதிகாரி| நாகப்பட்டினத்தில் பணியாற்றி வருகிறேன். நான், ஒரு முறை சுற்றுலாவிற்காக, ராமநாதபுரம் மற்றும் ஸ்ரீலங்கா சென்றிருந்தேன். அப்போது, ஸ்ரீலங்காவிலே, ஒரு கொலைகாரியைப் பற்றிய செய்தி வந்தது. அது ஒரு விசித்திரமான கேஸ். ஒரு பெண்ணுக்கு – அவள் பெரிய வியாபாரி ஒருவரின் மகள் என்று கேள்வி - தன் தந்தையைத் தவிர்த்த பிற ஆண்களின் மீது தீராத வெறுப்புணர்வு போல. அதனால் அவள் பல்வேறு சமயங்களில் பல்வேறு ஆண்களைத் தன் அழகால் சிக்கவைத்து, அவர்களைத் ஒரு பாழடைந்த இல்லத்திற்கு சுகானுபவம் காண அழைத்துச் சென்றிருக்கிறாள். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்ற அத்தனை ஆண்களையும் சுட்டுக் கொன்று, அவர்களுடைய பிரேதங்களை, அருகில் இருந்த பூவரச மரங்கள் நிறைந்த காட்டில் புதைத்திருக்கிறாள்.
இந்நிலையில், அவளிடம் தப்பி, தற்போது சித்த சுவாதீனம் இல்லாத (மனநலம் பாதிக்கப்பட்ட) ஒருவன் உளறியதை வைத்து அவளுடைய அடையாளத்தைக் காவல் இலாகா வரைந்து விட்டது. நான் என்னுடைய நண்பர் ஒருவர் அங்கேயிருந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்ப்பதால் நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அப்போது ஒரு வியாபாரி தன்னுடைய மகள் காணாமல் போய்விட்டதாகவும், அவள் எழுதிய கடிதத்தில் தாம் தமிழகம் செல்லவிருப்பதாக எழுதியுள்ளதாகவும் கூறினார்.
எனக்கென்னமோ இந்தப் பெண்ணிற்கும் அந்தக் கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றியது. நான் அந்தத் தொழிலதிபரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரிடம் அவர் மகளின் போட்டோ ஒன்றை வாங்கினேன். பின்னர், அதைப் பத்திரப்படுத்திக் கொண்டு, நான் எனது நண்பன் மூலமாக வரையப்பட்ட படத்தை வாங்கிப் பார்த்ததில், நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகப் பட்டது. எனவே, இவளைப் பிடித்து, சரிவர விசாரித்தால் உண்மை தெரியும் என்பதற்காகவே, அவசர அவசரமாக ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்தேன். அப்போது, ரயில்வே ஸ்டேஷனில் அவள் ஏதோவொரு கோச்சில் ஏறுவதாக தெரிந்தது (அவள் நாங்கள் ஏறவிருந்த எங்கள் பெட்டியைத் தாண்டி இரண்டு கோச் தள்ளி ஏறினாள்). அவளைப் பின்தொடர்ந்தும் அவள் சிக்கவில்லை. அதனால் தான் மதராஸில் இறங்கி, இங்குள்ள போலீஸ் இலாகாவினர் (காவல் துறையினர்) மூலமாக கண்டறியலாம் என்பதற்குள் நான் உங்களுடன் அவள் பேசுவதைப் பார்த்தேன். நான் ஓடோடி வருவதற்குள் அவள் தப்பித்து விட்டாள்!” சொன்ன அவருக்கு மூச்சு வாங்கிற்றோ இல்லையோ, எனக்கு நன்றாகவே மூச்சு வாங்கியது. பின்னே? ராமநாதபுரத்திலிருந்து, நான் ஒரு கொலைகாரியுடன் தனியாக அல்லவா வந்து கொண்டிருந்தேன்? அதுவும் அவள் என்னை வந்து சந்திக்கச் சொன்னது? ஐயகோ! சாரதி தெருவில் வேறு ஒரு பூவரச மரம் இருக்கிறதே? எனக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டதைப் பார்த்த அவர் சொன்னார்,
“ஸார்! நீங்கள் கவலைப்பட வேண்டாம். போலீஸ் துறை அவளை நிச்சயம் பிடித்துவிடும். இந்தக் காலத்தில் பெண்களைக் கூட நம்புவதற்கில்லை!” என்று கூறிக்கொண்டே எழுந்தார்.
“அப்போ நான் கிளம்புகின்றேன். அதிர்ஷ்டம் இருந்தால் திரும்பவும் சந்திப்போம்!” என்று கூறி விடைபெற்றார். அதன் பிறகு நான் அங்கிருந்து கிளம்பி மயிலாபூரில் இருந்த எனது வீட்டிற்கு வந்து விட்டேன். அன்றிலிருந்து ஆறாம் நாள், நான் கொஞ்சம் குதூகலமாக இருந்த நாள்.
என்னுடைய “ஓட்டைப் பாத்திரம்” கதைக்கு கல்கி பத்திரிக்கை நூறு ரூபாய் சன்மானம் வழங்கியிருந்ததால் அந்த குஷி எனக்கு ஏற்பட்டிருந்தது.
கதை எழுதுவதும், அதை அனுப்புவதும், பத்திரிக்கைகள் அதை ஏற்பதும், அவர்கள் தகுதிக்கேற்றபடி அவர்கள் சன்மானம் வழங்குவதும் வாடிக்கை தான். ஆனால் இது கொஞ்சம் அதிகப்படியான குதூகலத்தைத் தந்தது போல இருந்தது.
அன்று மதியம் ஒரு மணி இருக்கும். அப்போது எங்கள் வீட்டில் யாரும் இல்லாத சமயம். நான் திண்ணையில் சாய்வு நாற்காலியைப் போட்டு, அதில் அமர்ந்து எனக்கு நானே விசிறிக்கொண்டு, அடுத்த கதைக்கான கருவை சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
தபால்களே பெரும்பாலும் வரும் எனக்கு அன்று வந்த தந்தி கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது (தந்தி என்பது பெரும்பாலும் இறப்பு, கடுமையான நோய், போரில் வீரமரணம் போன்ற துக்க நிகழ்வுகளைத் தெரிவிக்க அனுப்புவது).