அதைப் பிரித்துப் படிக்கையில் எனது முதுகிலிருந்து வேர்வை வெளியேறியது தெரிந்தது.
அதில் கூறியுள்ள விஷயம் பின்வருமாறு (ஆங்கிலத்தில் உள்ளதன் தமிழாக்கம்):
உங்களை விரைவில் சந்திக்க வேண்டும் - முக்கியமான பிரச்சனை – உடனே கீழ்கண்ட விலாசத்திற்கு வரவும்!
ஸ்ரீமான் சுபேதார் சுப்பையா பிள்ளை ஹோட்டல், நெ. 10, சாரதி தெரு (பூவரச மரத்தருகில்),
நுங்கம்பாக்கம், சென்னை”
விடுநர்,
ஸ்ரீமான் சங்கரநாரயணன்
நுங்கம்பாக்கம் என்ற பெயரைப் பார்த்தவுடன், எனது இதயத் துடிப்பு பன்மடங்கு பெருகியது. அன்று நடந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவிற்கு வந்தன.
ஆனால், யார் இந்த சங்கரநாராயணன்? இவருக்கும் இந்த நுங்கம்பாக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பெண் யார்?
“ஆனது ஆகட்டும்! என்ன தான் நடக்கும் என்று பார்த்துவிடலாம்!” என்று என்னுடைய சட்டையை மாட்டிக் கொண்டு நான் நுங்கம்பாக்கம் சென்றேன். அங்கே, சங்கர நாராயணன் என்பவர் முதல் மாடியில் ஐந்தாவது அறையில் தங்கியிருப்பதாக அங்கிருந்த மனிதர் சொன்னார். அவர் சொன்னபடியே அங்கே நான் சென்று பார்த்தேன்.
அவர் மெல்ல கதவைத் திறந்தார். திறந்தவுடனேயே என்னை உள்ளே தள்ளி, கதவை வெளியிலே சாத்தித் தாழ்ப்பால் போட்டுவிட்டார். நான் சுதாரிப்பதற்குள்,
“என்ன ஐயா? இங்கே பாரும்!”
என்று என் முகத்தை நேரே நிறுத்தினார். அங்கே, ஒரு பெண் படுத்திருந்தாள்.
நான் அவரிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்க்கிறேன், அதிர்ச்சி அடைகிறேன்!
இவள் தானே அந்தப் பெண்!
நான் திரும்பி, பின்னால் நின்ற அந்த சங்கர நாராயணனைப் பார்த்தேன். எனது பார்வையின் மூலமாகவே நான் கேட்க நினைத்த கேள்வியை அவர் புரிந்து கொண்டார் போல, பின்வருமாறு கூறலானார்:
“என் பெயர் சங்கரநாராயணன். இவள் என்னுடைய மகள் ஆஷா. நான் சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் ஸ்ரீலங்காவில் செட்டில் ஆகிவிட்டேன். நான் பெரிய தானிய வியாபாரி. என்னுடைய மனைவி காலஞ் சென்று விட்டாள். எனக்கு பல லட்சம் (இன்றைய நிலையில் பல கோடி) மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. அதை அபகரிக்க பல பேர் முயற்சி செய்து தோற்றார்கள்…”
“நிறுத்துங்கள் அப்பா!” என்றது அந்தப் பெண்ணின் குரல். நானும் அவரும் திரும்பினோம். அந்தப் பெண் சொல்லலானார்:
“என்னுடைய அழகையும் எங்களுடைய சொத்தையும் களவாடியே தீர வேண்டும் என்று ஒருவன் இருந்தான். அவன் பெயர் தியாகு. என் தந்தையாரின் நண்பருடைய மகன். என் மீது காதல் கொண்டு, வேண்டுமென்றே என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தான். மேலும், நான் உங்களுடைய எழுத்துக்களுக்குப் பெரிய ரசிகை. இங்கு பிரசுரமாகும் பல பத்திரிக்கைகளிலிலும், பல்வேறு நாடகங்கள் மூலமாக, என் உள்ளத்தை நீங்களும் உங்கள் தமிழும் கொள்ளை கொண்டுவிட்டன. ஒரு முறை நீங்கள் ஸ்ரீலங்கா வந்த போது, அந்த செய்தியறிந்து நான் உங்களைப் பார்க்கச் சென்றேன். நீங்கள் கடற்கரைக்குச் சென்றதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். எனவே நான் அங்கே வந்த போது. அந்தத் தியாகுக் கயவன் வந்து விட்டான். அவனைக் கண்டு அஞ்சி, நான் மீண்டும் சென்று விடுவது என்று தீர்மானம் செய்தேன். அப்போது தெய்வ சித்தமாக என் தந்தை அங்கு வர, அவருடன் நான் சென்றுவிட்டேன். ஆனால் தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைக் காதலித்துக் கொண்N;ட வந்தேன். அப்போது தான், என் தந்தை எனக்குத் தெரியாமல் எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். புதிதாய் வந்த மாப்பிள்ளையிடம், அவன், நான் என்னமோ பெரிய கொலைகாரி என்னும் படியாக அவர்களிடம் கதை விட்டிருக்கிறான். அவர்கள் அதை நம்பி என் தந்தையிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்புறம் தான் என் தந்தையிடம் நான் அந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே ஆத்திரப்பட்டு என்னை கடிந்து கொண்டார். மேலும், அவனுக்கே என்னைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். அதனால், நான் கடிதம் எழுதி வைத்துவிட்டு தமிழகத்திற்கு ஓடி வந்து விட்டேன்…” எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது. பிள்ளையாரைப் பிடிக்க குரங்கு வந்து மாட்டிய கதையாக, இது என்ன கூத்தோ என்று எனக்கு குழப்பம் தான் மிஞ்சியது.
அந்த சங்கரநாரயணன் தொடர்ந்தார்:
“இது தெரிந்ததும் நான் போலீஸில் புகார் அளித்தேன். புகார் அளித்து விட்டு, நான்கு நாட்கள் கழித்து, எனது சொந்தப் படகில் தமிழகம் வரத்திட்டமிட்ட போது, ஒரு கள்ளத் தோணியின் மூலமாக அவன் தமிழகம் வந்ததாக செய்தி வந்தது. எனவே, நான் மீண்டும் என்னுடைய இல்லத்திற்கு வந்து சில ஆயுதங்களை எடுத்துக் கொள்கிறேன், ஒரு தபால் வந்தது. அதில், என் மகள் கைப்பட எழுதிய கடிதம் கிடக்க, அதனுடன் நான் நுங்கம்பாக்கம் வந்து பார்க்கிறேன், இவள் விஷம் சாப்பிட்டிருக்கிறாள்! நான் பதறிப் போய் மருத்துவரை அழைத்து வந்தேன். நல்ல வேளை, கொஞ்சமாகவே அருந்தியிருந்ததால் மருந்தின் மூலமாகவே சரி செய்து விட்டார்கள்!”