“என்னாச்சு கீர்த்தி?! ஏன் இப்படி சிரிக்கிற?”
“சொர்ணாக்கா சொன்னத நினைச்சு சிரிச்ச, மங்கா”
‘அய்யோ பாவ! நாம நினைச்சது சரிதா போலு… சொர்ணாக்காங்கிறா சிரிச்சங்கிறா’ பதட்டமானாள் மங்கா.
“என்னாம்மா சொல்லுற கீர்த்தி? எனக்கு ஒன்னுமே புரியல.. உனக்கு உடம்புக்கு சரியில்லையா?” அவளின் நெற்றியில் கை வைத்து உடல் சூட்டை சோதித்துப் பார்த்தாள் மங்கா.
மங்காவின் பேச்சும் செயலும் கீர்த்தியின் சிரிப்பை கட்டுபடுத்தின. “எனக்கு ஒன்னுமில்ல, மங்கா. நான் நல்லாயிருக்கேன்” மங்காவின் கைகளை பற்றினாள் கீர்த்தி.
“அப்புறம் ஏன் கீர்த்தி… ஒரு மாதிரி பேசி சிரிச்ச?”
“அய்யோ மங்கா! சுலோசனா எங்கிட்ட சொன்னத கவனிச்சீங்களா?” மறுபடியும் சிரிக்க துவங்கினாள்.
“கேட்டேனே! அதுக்கென்ன இப்போ?” கீர்த்தியின் கேள்வியில் மங்காவின் பதற்றம் குறைந்து குழப்பம் அதிகரித்தது.
“அதுக்கென்னவா?” கட்டுபடுத்த முடியாமல் கீர்த்தி சிரித்ததில் அவளின் கண்களிலிருந்து சில் கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தன.
இவ்வளவு நேரம் நடந்தவற்றை அமைதியாக பார்த்திருந்த சுகுணாவின் பொறுமை பறந்தது. “என்னன்னு சொன்னா நாங்களும் சிரிப்போமே”
“உங்களுக்கு சொல்லாமலா! கண்டிப்பா சொல்லுறேன். ஆனா அதுக்கு முன்னாடி நா கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க”
“சரி கேளு!” மங்காவும் சுகுணாவும் ஒருசேர சொல்லிவிட்டு அவளின் கேள்விக்காக காத்திருந்தனர்.
“எங்கிட்ட சுலோசனா என்ன சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனா?”
“என்ன கீர்த்தி? மறுபடியு அதையே கேட்டுக்கிட்டு” சலித்து கொண்டாள் மங்கா.
“நீங்க என்னன்னு சொல்லுங்க, மங்கா”
காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுகுணா. “இங்கென்ன கொரங்காட்டமா காட்டுறாங்கன்னு நின்னு பார்த்திட்டிருக்க… ஒழுங்கா போயி தீஸிஸ் முடிக்கற வேலையப் பாருன-னு சொன்னாங்க”
“இதுல சிரிக்கற மாதிரி என்ன இருக்கு கீர்த்தி” என்று கேட்டாள் மங்கா.
வயிற்றை பிடித்து சிரித்தபடி “சுலோசனா அப்படி சொன்னப்போ இங்க யாரெல்லா இருந்தோ?”
“நாம எல்லாருந்தா இருந்தோம்”
“நான் வேடிக்கைப் பார்த்திட்டுருந்தேன்னா… கொரங்காட்ட காட்டினது நீங்க ரெண்டு பேரும்னா… கொரங்கு யாரு?” உரக்க சிரித்தாள் கீர்த்தி.
தங்களை குரங்காட்டி என்று கீர்த்தி சொன்னதை நினைத்து கோப பட்டவர்கள் சுலோசனாவை குரங்கு என்றபோது சிரிப்பு அவர்களையும் தொற்றி கொண்டது.
“சொர்ணாக்காவை கொரங்கா கற்பனை பண்ணி ஆடவிட்டதும்… என்னால முடியல மங்கா” தோட்டத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தும் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் தவித்தாள் கீர்த்தி.
அதை கற்பனை செய்து பார்த்த மற்ற இருவரும் சிறிது நேரம் சிரித்தனர்.
வாஞ்சையோடு கீர்த்தியின் தலையை தடவிய மங்கா, “நீ இப்படி சிரிச்சு நா பார்த்ததே இல்ல கீர்த்தி… நீ எப்பவும் இதே மாதிரி சிரிச்சுக்கிட்டே இருக்கனு”
மங்காவின் அன்பில் நெகிழ்ந்த கீர்த்தி, “இது காமெடி சீன்.. இதை இமோஷ்னல் சீனாக்காதீங்க மங்கா” என்று சொன்னாலும் நீண்ட நாளுக்கு பிறகு அவளுக்கு கிடைத்த அன்பினால் உணர்ச்சி வசப்பட்டாள். அதை மறைக்க விரும்பியவள் பேச்சை திசை திருப்பி
“சுலோசனாக்கு நா வச்சிருக்க பேரு எப்படி?” தன் டீஷர்ட்டின் காலரை தூக்கிவிட்டு கொண்டாள்.
“அது என்ன பேரு?”
“சொர்ணாக்கா” பெருமையாக தலையை சற்று சரித்து மங்காவை நிமிர்ந்து நோக்கினாள்.
“சுலோசனாம்மா, உன்னைவிட எப்படியு பதினஞ்சு வருஷமாவது வயசுல மூத்தவங்க… அவங்களை நீ மரியாதையாதா கூப்பிடறதில்ல… பத்தாததுக்கு இப்படி சொர்ணாக்கான்னு பேரு வக்கிறதெல்லா சரியில்ல, கீர்த்தி” கண்டிப்புடன் வந்த மங்காவின் வார்த்தைகள் கீர்த்தியின் அடிமனதிலிருந்த கேள்வியை மேலெழுப்பியது.
அந்த கேள்வியையும் மங்காவின் அறிவுரையையும் ஒதுக்கியவள் “தேங்க்ஸ் மங்கா!”
“எதுக்கு தேங்க்ஸ் சொல்லுற கீர்த்தி”
“ரொம்ப போர் அடிச்சதேன்னுதா அந்த புக்ஸ் பார்க்கலாம்னு போனேன்… ஆனா சொர்ணாக்காகிட்ட மாட்டிக்கிட்டே… அவ எங்கிட்ட கேள்வி கேட்ட போது என்ன சொல்றதுன்னே தெரியல… சரியான நேரத்துக்கு வந்து என்னை காப்பாத்திட்டீங்க”