என் பக்கத்தில் இவனா? அதற்கு இவனுக்கு என்ன தகுதியிருக்கு? அவன் இவளை பார்ப்பதை உணர்ந்தவள் அந்நாளின் நினைவுகள் மேலிட புழுவாகத் துடித்தாள்.
எத்தனை முறை சொன்னாலும் புரிஞ்சிக்காத அப்பா, அம்மா, அண்ணன். இவங்கெல்லா பத்தாதுன்னு இந்த உறவுக்காரங்க வேற…. இவங்களுக்கு அன்னைக்கு தப்பா தெரிஞ்ச இவன், இன்னைக்கு மட்டும் நல்லவனாயிட்டானா?
ஒப்புகொள்ள மறுத்தது பெண்ணின் மனம். இவளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தின் விளைவாக கிடைத்த அவமானங்களையும் கீழ்ப் பார்வைகளையும் தன் குடும்பத்தின் மாற்றத்தையும் இத்தனை மாதங்களாய் நெஞ்சுக்குழியில் அமிழ்த்தியவள்… காரணவாதியின் கையால் மாங்கல்யம் என்ற அழுத்தம் கூட எரிமலையாய் வெடித்தாள்.
மனதின் சீற்றத்தை சிவந்த முகம் பிரதிபலிக்க கழுத்தருகே வந்த தாலிக் (தூக்கு) கயிற்றை தட்டிவிட்டபடி எழுந்தாள்.
“என்னடி பண்ற?” பதற்றமும் அதட்டலுமாய் கேட்டார் அவளின் அம்மா.
அவள் பார்வையின் அனல் வீச்சை தாங்காது அம்மா அமைதியானார். வாசலருகே இருந்த அப்பா மணமேடையை நோக்கி ஓடினார். திருமணத்திற்கு வந்தவர்கள் தங்களுக்குள் சலசலத்தனர். ஆவேசமாக மணமேடையிலிருந்து கீழிறங்கியவளை எதிர்கொண்டான் அண்ணன்.
“உனக்கு எ….”
கையமர்த்தி அண்ணனின் பேச்சிற்கு தடையிட்டவள்
“நீங்கெல்லா நிறைய பேசிட்டீங்க… இப்போ நான் பேசுறேன்”
அதிகாரமாய் ஒலித்த குரலில் எல்லோரும் அமைதியானர்.
“நான் என்ன தப்பு பண்ணேன்? பொண்ணா பொறந்ததா? யாரோ ஒருத்தன் என்னை காதலிக்கிறேனு சொல்லிட்டு என் பின்னாடி சுத்தினான். காதலை ஏத்துகலைன்னதும் அவனோட ஈனப்புத்தி என்னோட பெண்மையை களவாடிடுச்சு. இது எப்படி நடந்தது, நான் என்ன நினைக்கிறேன்னு கூட யோசிக்காம எல்லோரும் வாய்க்கு வந்ததையெல்லா பேசி என்னை அவமானபடுத்தினீங்க. அந்த யாரோ ஒருத்தன் திருந்திட்டதா சொன்னதும் அதை நம்புறீங்க…. அவனுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுறீங்க… நான் இந்த கல்யாணத்தை வேணாம்னு சொன்னதும்… அவனைப் போல நல்லவனே இல்லைன்னு அட்வைஸ் வேற… என் முடிவிலிருந்து மாறாததால என்னை உருட்டி மெரட்டி மணமேடைக்கு கூட்டி வரீங்க…”
“…………”
“இவளொரு பொண்ணு… இவளால என்ன செய்ய முடியும்? நாம சொல்லுறத கேட்டுதா ஆகனும்னு உங்க எல்லாருக்கும் ஒரு தலைகணமிருக்கு”
“இப்படியெல்ல பேசதடா! எந்த பொண்ணுக்கும் நடக்க கூடாதது உனக்கு நடந்துடுச்சு. ஒரு பொண்ணை பெத்தவனா கலங்கி நின்னப்போதா அவரே மனசு திருந்தி இந்த கல்யாணத்துக்கு முன்வந்தாரு… உறவுக்காறவங்க சொல்படி உன்னோட நல்லதுக்காகதான் இவ்வளவும் பண்ணினோம்”
“அப்பா சொல்லுறது நிஜம்! ஒரு புறம் சமுதாயம் மறுபுறம் நீ வீட்டுல முடங்கி கிடக்கிறத பார்க்க சகிக்க முடியாம இருந்த போது இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவும், அண்ணனா முன்ன நின்னு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணின”
“திரும்ப திரும்ப உங்க தரப்பை மட்டுமே யோசிக்கற உங்களால என்னை புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா? நீங்க…நான் என்ன நினைக்கிறன்னு கேட்கவுமில்லை… அப்படி கேட்கனும்னு நினைக்கவுமில்லை. சமுதாயமும் உறவுக்காரவங்களையும் மட்டும் நினைச்சு நீங்க செய்தது எல்லாமே ஒரு கொலைக்கு சமம். காதலென்ற பேருல அவன் என்னோட பெண்மைய கொன்னுட்டான். பாசமென்ற பேருல நீங்க என்னோட மனச கொன்னுட்டீங்க. இருக்கட்டும்… உங்களை பொறுத்த வரைக்கும் இந்த சுலோசனா செத்துட்டவளாவே இருக்கட்டும்”
ஆக்ரோஷமாய் வெடித்த எரிமலையின் குழம்பாக சுடும் உண்மைகளை அங்கிருந்தோரின் நெஞ்சங்களில் பாய்ச்சியவள் விறுவிறுவென மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.
“எங்கம்மா போற?” அழுதுகொண்டிருந்த அம்மா கேட்கவும்
“உங்க மகள் செத்துட்டாளே… அவளோட இறுதி ஊர்வலம் நடக்குது… என்ன ஒரே ஒரு வித்தியாசம்; பிணத்தை நாலு பேரு தூக்கலை… உங்களோட சமுதயத்துல எல்லா பொண்ணுங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கறதில்லையே… அதான் பிணமே நடந்து போகுது”
அம்மாவின் கண்ணீர் மழை, எரிமலையின் சீற்றத்தை குறைக்க முடியாமல் தோற்றது.
சுலோசனாவின் இறந்த காலம் இடியாய் இதயத்தில் இறங்க… இங்கே கீர்த்தியின் கண்களிலும் இரக்க மழை.
சிறிது நேரத்திலேயே, தன் இயல்புக்கு திரும்பியிருந்த கீர்த்தி