அடுத்த பேரத்திற்கு இறங்கினேன். அதற்குள் டீச்சர் உள்ளே வந்து விட்டார்.. அவள் எதற்கும் மசியாமல், என் நோட்டை எடுத்து கொண்டு அவரிடம் ஓட...
சரி போ!! இன்னைக்கு ஆப்பு உறுதின்னு நான் நினைத்த பொழுது,
“நீங்க அங்குட்டு போனதும் என்னை நோட் இல்லைன்னு பொய் சொல்ல சொல்றான் டீச்சர்... பொய் சொன்னா தட்டு மிட்டாய் வாங்கி கொடுப்பேன்னு வேற சொன்னான் டீச்சர்”,
ஒன்று விடாமல் போட்டுக் கொடுத்து பெரிய ஆப்பாக்கி விட்டாள் முத்துச்செல்வி! அப்புறம் விஜி டீச்சர் பொங்கோ பொங்குன்னு பொங்கிட்டாங்க!
“எத்தனை பொய், என்ன திருட்டுத்தனம்! டீச்சர் பையனா இருந்துகிட்டு இந்த வேலை எல்லாம் செய்வேன்னு நினைக்கவே இல்லை பரத்!”
அன்னைக்கு டீச்சரிடம் அடி வாங்கியது கூட பெரிசா தோணலை! அவங்க அம்மாவை சொன்னது தான் மனசுலே எங்கோ அடி வாங்கினது. பாசம்ன்னா இது தானா?
அது நாள் வரை தேவையை பூர்த்தி செய்ய தான் அதிகமா அம்மாவை தேடி இருக்கேன்! நான் செய்தது அம்மாவோட மரியாதையை கெடுக்கும்ன்னு உணர்ந்து தேடியது அன்னைக்கு தான்!
என்னைப் பொறுத்தவரை அப்பா தான் ஹீரோ! அப்பாக்கு விமானப் படையில் வேலை. டெஹராடூன்ல இருந்தாங்க. வருஷத்துக்கு இரண்டு மூணு தடவை வந்துட்டு போவாங்க. அப்பா வந்துட்டா அவங்க பின்னாலே தான் சுத்துவேன்! அவங்க போனதும் அடுத்து அப்பா எப்போ வருவாங்கன்னு ஏங்க ஆரம்பிச்சிடுவேன்.
ஆனா, விஜி டீச்சர் அப்படி சொன்னதும் என்னாலே தாளவே முடியலை!
அழுகை அழுகையாக வந்தது. பெல் அடிச்சதும் அம்மாகிட்ட ஓடினேன்.
நான் செய்ததை சொல்லி, “நான் தப்பு செய்ததிலே உங்களுக்கும் கஷ்டம்...”ன்னு நான் அழுதேன்.
நான் சொன்னதும் அம்மா முகத்தில் அமைதி! அப்புறம் என்னை வாரி அணைத்து, என் கண்ணீரை துடைத்து விட்டு,
“பொய் சொன்னா கஷ்டம் உனக்கு தான் கண்ணா! அம்மாக்கு இல்லை! தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னை சுடும் நீ படிச்சது தானே!”
அம்மா என்ன சொன்னாலும், திருக்குறள் வந்து விடும்! வாழ்வியலுக்கு அது ஒரு வழிகாட்டி பின்னர் அனுபவத்தில் கண்ட உண்மை!
என்ன இருந்தாலும், ஆறுதலும், அக்கறையும், அறிவுரையும் அன்பில் தோய்த்து கொடுக்கும் அன்னைக்கு இணையாகுமோ எந்த ஏடும்???
அம்மாகிட்ட பேசிட்டு, எல்லா கவலையும் மறந்து பறந்து திரும்பும் போது, ஸ்கூலுக்கு வெளியே தட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டிருந்த முத்துச் செல்வியை பார்த்துட்டேன். என்னை எப்படி கோல் மூட்டி விட்டாள்? இவளை ஏதாவது செய்யணும்ன்னு நான் நினைக்கிற நேரம் பார்த்தது மணி அடிக்க..
நான் வகுப்புக்கு வேக வேகமாக ஓட.. அவளும் என் பின்னாலே ஓடி வந்தாள். அப்போது “பொத்”தென்று விழுகிற சத்தம்! சட்டென்று திரும்பி பார்த்தேன்!
அவள் கீழே விழுந்து கையில் இருந்த தட்டு மிட்டாயும் மண்ணாகிப் போயிருந்தது!
அதைப் பார்த்தவுடன் என் மனசுலே அப்படி ஒரு பரவசம்! கடவுளா கொடுத்த வாய்ப்பு!!!! அவள் முன்னாடி போய் கை கொட்டி சிரித்தேன்!
“வேணும் வேணும் நல்லா வேணும்!! முட்டை செல்வி! குட்டை செல்வி!!”
நான் சீண்ட சீண்ட, அழுது கொண்டே எழுந்தவள்,
“நீ தான்டா புழுகு மூட்டை பரத்! புண்ணாக்கு மூட்டை பரத்!”
பதிலுக்கு சண்டைக்கு வந்தாள்... அன்றிலிருந்து எனக்கு அவள் முட்டை! அவளுக்கு நான் புண்ணாக்கு!
அவளோட பழக ஆரம்பித்த முதல் நாள் மூக்கை உறிஞ்சிகிட்டு என் கூட சண்டைக்கு வந்ததை இப்போ நினைத்தாலும் இனிக்குது! ஆனா.....
அவளைக் கடைசியா பார்த்த அந்த நாள்! அவள் கதறல்!! அத்தனை நினைவையும் அனுபவிக்க விடாம அழுத்துது!
பூப்பெய்தி ஒரு மாசம் கூட ஆகாதவளை என் கண் முன்னே கதற கதற இழுத்துட்டு போனானுங்களே!!!
“பரத்!! காப்பாத்து பரத்!! என்னை காப்பாத்து பரத்!!!!”,
ஹைய்யோ என் முட்டையின் குரல் இன்னும் செவிப்பறையில் மோதி மோதி எதிரொலிக்குதே!
உன்னை காப்பாத்த முடியாத. கையாலாகாதவனா போயிட்டேனே! இப்பவும் என் கண்ணுக்குள்ளே தான் நிக்குறா! நீ கிடைச்சிட்டா இனி உன்னை விட மாட்டேன்! விடவே மாட்டேன்! என் கண்ணுக்குளே வைச்சுக்குவேன்!
மனம் தவித்த தவிப்பில், என் கண்ணுக்குளே வெள்ளம் வந்து விட்டதை நான் உணரும் வேளையில்,
‘யாரும் பார்க்கிறதுக்கு முன்னே துடை’, என் தன்மானம் கட்டளையிட்டது!