2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்! - உஷா
டாக்டர். பரத் திலகம்!
This is entry #149 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்
எழுத்தாளர் - உஷா
பேச்சு வழக்கில் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு பகிருங்கள் உங்கள் கருத்துக்களை!
“முத்து செல்வி கிடைப்பாளா???”
ஆயிரமாவது முறை என் மூளையில் கேள்வி எழுகிற மறு நொடியே கிடைத்து விடாமல் போய் விடுவாளோ??? என மனம் பல்லாயிரம் முறை விம்மி வெடிக்கிறதே!!!
ஒரு பாவமும் அறியாத அந்த முகம்!! பிஞ்சு முகம்!!! அவளுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது! இல்லை.. என்ன ஆனாலும்.. நீ எந்த நிலையில் இருந்தாலும் என்னோடு கூட்டி வந்திடுவேன்! உனக்காக.. உன்னை நினைத்து தானே என் வாழ்க்கையை இப்படி செதுக்கி இருக்கேன்!
எனக்குள் நான் சொல்லி கொண்டாலும்...
“முத்துச் செல்வி கிடைப்பாளா???”
மறுபடியும் ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்க வைக்குதே நிஜத்தை உணர துடிக்கும் அறிவு!!!
என் மனமெல்லாம் அவளிடம் வியாபித்து கிடக்க...
“ஸார் பேக் பாக்தா”,
அந்த முரட்டு குரலில் நிகழ்வுக்கு வந்தேன்! விமான பாதுகாப்பு அதிகாரி! பையை ஸ்கேனிங் மிஷின் சோதனைக்கு அனுப்புமாறு பெங்காலியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
பையை அவர் சுட்டிய இடத்தில் வைத்து விட்டு, நானும் பாதுகாப்பு சோதனையை முடித்து விட்டு, போர்டிங் கேட் எதுவென்று பார்க்கலாமென அங்கே மிளிர்ந்த LED விமான அட்டவணை பலகையைப் பார்த்தேன்.
அதில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட்ட “நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் டொமெஸ்டிக் ஏர்போர்ட்”டிற்கு கீழே டம் டம், கொல்கத்தா என்ற பொடி எழுத்துக்களைப் பார்க்கும் பொழுதே என் முகம் ஒரு முறுவலை ஏந்தி நின்றது!
முன்னர் டம் டம் ஏர்போர்ட் என்பது இதன் பெயர்!
‘கல்கத்தாவில் உள்ள டம் டம் விமான நிலையத்துக்கு டம் டம் டமாரம்ன்னு நினைவு வைச்சுகோங்க.. மறக்கவே மறக்காதுன்னு விஜி டீச்சர் சொல்லி கொடுத்த பாடம் தான் நினைவுக்கு வந்தது! விஜி டீச்சர் அம்மாவோட ஃப்ரண்ட்!
அம்மா தலைமை ஆசிரியராய் இருந்ததில் இது ஒரு வசதி! வருஷா வருஷம் திட்டம் போட்டு எனக்கேத்த வாத்தியார்கிட்ட தள்ளி விட்டுடுவாங்க.
“போன வருஷம் பொன்னுசாமி ஸார்கிட்ட ஒழுங்கா வீட்டுப்பாடம் எழுதாம டிமிக்கி கொடுத்தேல.. அதான் இந்த வருஷம் விஜி க்ளாஸ்ல போட்டு இருக்கேன்! வீட்டு பாடம் மட்டும் எழுதாம போய் பாரு!”
அம்மா இதை சொன்னபோ நான் நம்பலை! சும்மா பூச்சாண்டி காண்பிக்கிறாங்க... நம்ம வீட்டு வர்றப்போலாம் விஜி டீச்சர் எவ்வளோ பாசமா பேசுவாங்கன்னு நினைத்தேன்!
அப்படி தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுசும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துட்டு.. வீட்டு பாடம் எழுதவே மறந்து போனேன்!
வீட்டு பாட நோட்டை காலையில் வந்ததும் டேபிளில் அடுக்கி வைக்கணும். ஒன்னும் எழுதாம நான் எப்படி வைப்பேன்?
டீச்சர்கிட்ட, கையை கட்டி நின்னுகிட்டு மிகப் பாவமா முகத்தை வைச்சிட்டு, நோட்டை வீட்டில் வைச்சிட்டேன் டீச்சர்ன்னு பொய் சொன்னதும்,
அவங்க ஒரு நொடி என் முகத்தைப் பார்த்துட்டு அடுத்து,
பொம்பளை பிள்ளைங்க வரிசையில்...
முதல் ஆளா கருப்பா... ஒல்லியா.. குட்டையா சிவப்பு ரிப்பன்ல கட்டின எலி வால் சைஸ் இரட்டை சடையோட இருந்தவளை பார்த்து,
“முத்துச்செல்வி அவன் பையைப் பாரு”
இப்படி ஒரு குண்டை தலையில் தூக்கி போடுவாங்கன்னு நினைக்கவே இல்லை நான்! மிரண்டு போய்.. முத்துச்செல்வியை பார்த்தேன்!
“சரிங்க டீச்சர்”
மண்டை மண்டையை ஆட்டினாளே பார்க்கணும்... தலையே உருண்டு விழுந்திடும் போல இருந்தது!
முத்து செல்வி கூட சேர்ந்து.. அதாவது ஒரே செக்ஷன்ல படிக்கிற சந்தர்ப்பம் இதுவரை அமையலை! ஆனால், பார்த்திருக்கிறேன்! அதுவும் மதிய வேளையில், பள்ளிக் கூடத்தின் வெளியே தட்டு மிட்டாய் வாங்குவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்!
இப்போழுது டீச்சர் சொன்னதும் அத்தனை வேகமா ஓடி வந்து என் பையை உருட்டினாள். நல்ல காலமா யாரோ டீச்சரை பார்க்க வர... அவங்க அதை கவனிக்க போனப்போ.. நான் நைசா..
“டீச்சர்கிட்ட இல்லைன்னு சொல்லிடேன் ப்ளீஸ்”, அவகிட்ட குனிஞ்சு இரகசியமா கெஞ்சினேன்.
நிமிர்ந்து என்னை பார்த்தவள்.. முடியாதுன்னு தலையை உலுக்கினாள்.
“உனக்கு தட்டு மிட்டாய் கூட வாங்கித் தர்றேன்”