அமேலியாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவளை கட்டியணைத்து ஆறுதல் கூறினாள் மேகலா. பின்பு அங்கிருந்து விடைபெற்று சென்றாள். அமேலியா செய்வதறியாது நின்றாள். அவளை சில நொடிகள் நோக்கிவிட்டு கனத்த இதயத்தோடு அங்கிருந்து நகர்ந்தான் வசந்த். ஜெஸிகா அமைதியாக அமர்ந்திருந்தாள். இது போல் செண்டிமெண்ட் சூழலை அவள் சந்தித்தது இல்லை. அவளுக்கு இது புதுமையாக இருந்தது.
ஜன்னல் வழியே வசந்தின் கார் செல்வதை வேதனை ததும்பும் விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அமேலியா.
வசந்தும் மேகலாவும் எதுவும் பேசாமல் காரில் பயணித்தனர். தங்களுக்கு சொந்தமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டதாய் அவர்கள் உணர்ந்தார்கள். அமேலியா தங்கள் வாழ்வில் வந்து சில மாதங்களே ஆன போதிலும் தங்களுக்கு தெரியாமலேயே குடும்பத்தில் ஒருத்தியாக அவள் மாறியிருப்பது அவர்களுக்கே புதுமையாக இருந்தது.
"என்ன அக்கா பேசாம வர?"
"ரொம்ப கஷ்டமா இருக்குடா?"
"எனக்கும் தான்"
"உனக்குமா? அப்படியென்ன உனக்கு கஷ்டம்?"
"அது.. அது... வந்து..." வசந்த் தடுமாறினான்.
"என்ன?"
"நீ வருத்தப்படுறியே, அதை பார்த்து தான் எனக்கும் கஷ்டமா இருக்கு"
"நான் எதுக்கு வருத்தப்படுறேனு சொல்லு"
"அமேலியாவை நெனச்சி தான?"
"இல்லையே"
"வேற என்ன உனக்கு கஷ்டம்?"
"உன்னை தனியா விட்டுட்டு இந்தியாவுக்கு போறோமே"
"கிண்டல் பண்ணாத அக்கா"
மேகலா சிரித்தாள். அவளது சிரிப்பு சிறிது நேரத்திலேயே மறைந்தது. "அமேலியாவை விட்டுட்டு போறது எனக்கு மனசே கேக்கலைடா. நம்ம ஃபேமிலியோடவே இருந்துட்டு ஜெஸிகா கூட எப்படி இருக்க போறாளோ. ஜெஸிகாவுக்கு ரொம்ப கோவம் வருமா?"
"கோவம் வரலைன்னா தான் ஆச்சர்யம். அதுவும் ஆம்பளைங்க மேல எப்பவும் கொலைவெறியோடவே இருப்பா"
"ஐயோ! நம்ம மேல இருக்க கோவத்துல அமேலியாவை காயப்படுத்திடபோறா"
"அது ஒண்ணும் பிரச்சனையில்லை"
"எப்படி சொல்லுற?"
"ஜெஸிகா பேசுறது தான் அமேலியாவுக்கு சுத்தமா புரியாதே"
"இருந்தாலும் அமேலியா மனசுக்குள்ள வேதனைப்படுவா". மேகலா அமேலியாவை எண்ணி மனதிற்குள் துயரப்பட்டாள்.
கார் சாலையின் ஓரத்தில் நின்றது. "அக்கா, நீ டாக்சில போயிடு எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு"
"சரிடா"
மேகலா காரில் இருந்து கீழே இறங்கினாள். கார் புறப்பட்டது.
வசந்தின் மனம் முழுவதும் அமேலியாவே நிரம்பியிருந்தாள். அவளை பிரிந்து வந்தபோது அவன் இதயத்தில் குண்டூசியால் குத்தியதை போல் உணர்ந்தான். 'அந்த வலி, அந்த வலிக்கான அர்த்தம், எதற்காக என் மனம் துயரப்பட்டது, என் மனது கட்டுப்பாட்டை இழந்து தவிக்கிறதே, இதற்கு பெயர் என்ன?'. அவனால் பதில் கண்டுபிக்க முடியவில்லை.
அமேலியாவை மீண்டும் பார்க்கும்படி அவன் மனம் அவனை துன்புறுத்தியது.
தொடரும்...
{kunena_discuss:983}