அலைபேசியில் அவன் எண்ணை அழுத்தியவள், அவனுக்கு அழைப்பு செல்வதற்கு முன்னரே, அலைபேசியின் அழைப்பை துண்டித்துவிட்டாள்.. இருந்தும் அவனுக்கு அழைப்பு போயிருந்தது… அங்கே அவனும் இவளை நினைத்தப்படியே தூங்காமல் விழித்திருந்தான்… கங்காவின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்ததை பார்த்து மகிழ்ச்சியானவன், திரும்ப அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
அலைபேசியை கையில் வைத்தப்படியே, குழப்பத்தோடு அமர்ந்திருந்தவள், அலைபேசி அடித்ததும், அதில் தெரிந்த துஷ்யந்தின் பெயரை பார்த்தவள், “ச்சே என்ன செஞ்சு வச்சிருக்கேன் நான்..” என்று மனதோடு புலம்பினாள்.. அவனது அலைபேசி அழைப்பை அவள் ஏற்கவேயில்லை.. அது முழுவதுமாக அடித்து நின்றது.. பின் திரும்பவும் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.. இந்த முறை அதை ஏற்று காதில் வைத்தாள்.
“எதுக்கு கங்கா போன் பண்ணியிருந்த..?”
“நான் ஒன்னும் போன் பண்ணல.. தானா கைப்பட்டு உங்களுக்கு கால் போயிருச்சு..”
“ஓ அப்படியா..!!” என்று சிரித்தவன், “நீ எதுக்கு போன் செஞ்சன்னு நான் சொல்லட்டுமா?” என்றான்.
“எதுக்கு?”
“நான் ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தேனா? இல்லை எங்கேயாச்சும் குடிச்சிட்டு விழுந்திருக்கேனா? இல்லை நீ பேசினதையே நினைச்சுக்கிட்டு காரை கொண்டு போய் எங்கேயாச்சும் மோதிட்டேனா? அப்படிங்கிற கவலை தானே உனக்கு..??”
“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க..?”
“உன்னோட பயத்தை தான் நான் சொன்னேன்.. முன்ன எனக்கு உன்னோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம இருந்தது.. ஆனா இப்போ உன்னோட காதலை நான் புரிஞ்சிக்கிட்டேன்… உன்கூட நான் நிறைய வருஷம் வாழ்னும்னு நினைக்கிறேன்.. அதனால எனக்கு ஒன்னுமே ஆகாது..”
“இன்னும் கூட உங்க உளறலை நிறுத்தலையா?”
“உளறலா.. இப்போ தான் நான் உன்னை புரிஞ்சிக்கவே ஆரம்பிச்சிருக்கேன்.. இதோ இப்போக் கூட எனக்காக யோசிக்கிற.. கவலைப்பட்ற.. இதுக்கு பேர் காதல் தானே?”
“கண்டிப்பா இல்ல.. இது உங்க மேல வச்சிருக்க அக்கறை, இந்த அக்கறைக்கு காரணம் நன்றியுணர்ச்சி.. இப்போ நானும் என்னோட தங்கையும் உயிரோட இருக்கோம்னா, அது உங்களால தான்… அந்த நன்றியுணர்ச்சி தான், இப்படி அக்கறையா வெளிப்படுது..”
“அப்படின்னா.. இப்போ நான் இந்த நிலைமைல இருக்கறதுக்கும் நீதான் காரணம்.. நீ மட்டும் இல்லன்னா, நான் மண்ணோட மண்ணா போயிருப்பேன்.. அதனால நானும் உனக்கு நன்றிக்கடன் பட்ருக்கேன்னு வசனம் பேச மாட்டேன்… ஏன்னா நீ செஞ்சதை வெறும் அக்கறையா நான் பார்க்கல… அதுல இருக்க உன்னோட அன்பையும் நேசத்தையும் தான் நான் பார்க்கிறேன்.. அப்பவும் சரி, இப்பவும் சரி, உன்னோட நீ காட்ற இந்த நேசம் தான் என்னை உயிரோட நடமாட வைக்குது… நடுவுல கொஞ்சம் குழப்பத்துல அதை நான் சரியா புரிஞ்சிக்கல.. ஆனா இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.. நீ காட்ற அந்த நேசம் சீக்கிரமாகவே எனக்கு தடைப்படாம கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு… அந்த நாள் தூரத்திலே இல்லை கங்கா..” என்று அவன் சொன்னப்போது, எங்கே இன்னும் அவனை பேசவிட்டால், அவளின் மன உறுதி கொஞ்சம் கொஞ்சமாக இலகி போகுமோ என்று பயந்து அலைபேசியை அணைத்தாள். அவளின் நிலையை புரிந்துக் கொண்டவனின் உதடுகளில் புன்முறுவல் வந்து ஒட்டிக் கொண்டது.
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}