‘அதுக்காக பெரியம்மாவுக்கு தெரியாம..’
‘தெரியாம நான் ஓடிப்போக சொல்லலைமா. தெரிய வேண்டிய நேரத்திலே தெரியட்டும்னு சொல்றேன். அவங்க ரெண்டு பேரும் அவங்க சுயநலத்துக்காக உன்னை ஹரிஷ்கிட்டேர்ந்து தள்ளி வைக்கறாங்கமா. எனக்கு மனசு கேட்கலை. என்னாலே அதை எப்பவும் ஒத்துக்க முடியாதுமா ‘ ஆற்ற மாட்டாமல் சொன்னார் பெரியவர்,
‘பெரியப்பா?’ அவள் தலைக்குள்ளே இன்னமும் அதிகமாக குழப்ப மேகங்கள் ‘எனக்கு நீங்க சொல்றது சத்தியமா புரியலை..’
‘அது.. வந்து அனு..’ ஏதோ சொல்ல வந்தவர் நிறுத்தினார். ‘இல்லமா இப்போ வேண்டாம். நீ முதல்லே உன் மனசு சொல்றதை கேட்டு ஹரிஷுக்கு பதில் சொல்லு. கல்யாணம் அப்படிங்கற ஸ்டேஜ் வரும் போது பெரியப்பாவே உனக்கு எல்லா விஷயமும் சொல்வேன்’ என்றார் தீர்மானமாக
‘பெரியப்பா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு’
‘எந்த குழப்பமும் இல்லை. ஹரிஷ் ரொம்ப நல்ல பையன்மா. பொய்யில்லை, திருட்டுத்தனம் இல்லை. அவன் நேரடியா வந்து என்கிட்டே பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சது. உன்னை சந்தோஷமா பார்த்துப்பான். இத்தனை பேருக்காக யோசிக்கறே. அவனை பத்தியும் கொஞ்சம் யோசி.’ எழுந்துவிட்டார் பெரியப்பா.
‘பெரியப்பா எப்பவும் உன் நல்லதுக்கு மட்டும்தான் சொல்வேன்’ அவர் சொல்ல அவரையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களில் கொஞ்சமாய் நீர் சேர்ந்தது நிஜம்.
‘நிஜமா நல்ல பையன்மா. ஏமாத்திடாதேமா அவனை’. சரியா? கன்னம் தட்டினார் பெரியப்பா. குட் நைட் இப்போ நிம்மதியா தூங்கு’ நகர்ந்தார் அவர்.
‘ஆமாம். ரொம்பவும் நல்லவன்தான். காலில் விழுந்து பெரியப்பாவை கவிழ்த்து வைத்திருக்கிறான்’ சொல்லியபடி தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அவன் வேண்டாம் என்றால் நான் போய் விட வேண்டும். வாவென்றால் வந்து விட வேண்டுமோ? ஒன்றும் வேண்டாம். எனக்கு அவனை பிடிக்கவில்லைதான்.’
அப்படியே இரண்டு நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லைதான். கைப்பேசியில் இருந்த அவனது புகைப்படத்தைதான் கண்கள் தேடின.
‘ரொம்ப சாரி அனும்மா.. அப்போ உன்னை பிடிக்கலைனு சொன்னது ரொம்ப தப்பு. இப்போ ரொம்ப பிடிச்சிருக்கு அனும்மா.’ சொன்னானே அவன். ‘இன்னமும் ஏன் பழைய விஷயங்களை பிடித்துக்கொண்டே இருக்கிறேனாம்? மனதின் ரகசியமான பிரதேசம் அவனுக்காக பரிந்துக்கொண்டு வர அவன் புகைப்படத்தை விரல்களால் வருடினாள் அவள்.
‘அவங்க சுயநலத்துக்காக உன்னை ஹரிஷ்கிட்டேர்ந்து தள்ளி வைக்கறாங்கமா!!!’ என்னவோ சொன்னாரே பெரியப்பா ‘என்ன ரகசியமாம் அது? யோசிக்க யோசிக்க தலை கனப்பது போலே இருந்தது.
எந்த முடிவுக்கும் வர முடியாதவளாக குழம்பி தவித்து எப்போது உறங்கினாள் என்றே தெரியாமல் உறங்கிப்போனாள் அனுராதா.
அவளது சனிக்கிழமையின் பொழுது முழுவதுமே அவ்வபோது எட்டிப்பார்த்த அவனது நினைவுகளுடன் விமானத்தில் கரைந்து போனது.
ஞாயிற்றுகிழமை மதியம் அவள் சென்று இறங்கியது கோவை விமான நிலையம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த விமானம்.
‘இது ஹரீஷின் ஊர்தானே.?’ தன்னாலே ஒரு புன்னகை எழுந்தது அவள் முகத்தில். ‘ஒரு வேளை வந்து நிற்பானோ என் முன்னால்? நினைக்கும் போதே சில்லென்று சிலிர்த்தது அவளுக்கு.
‘செய்தாலும் செய்வான் அவன். என் பயண திட்டத்தை அவன் தெரிந்துக்கொண்டிருந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லைதான்’ அவன் புன்னகை முகமே கண் முன்னே வந்து வந்து போனது.
‘நான் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டேனாம் அது என்ன அப்படி ஒரு நம்பிக்கையாம் என் மீது? இதோ சொல்லப்போகிறேன் பார். இப்போது அவனை அழைத்து உன்னை பிடிக்கவில்லை என்று சொல்லப்போகிறேன் பார்.’ சொல்லிக்கொண்டாள்தான். ஆனால் விரல்கள் கைப்பேசியை தொடக்கூட மறுத்தன.
‘கையிலே சாக்லேட்டோட மேடம் என் முன்னாடி வந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாங்க’ அவன் வார்த்தைகள் காதில் ஒலிக்க கால்கள் தன்னாலே அந்த சாக்லேட் கடை நோக்கி நடக்க ஒரு பெரிய டைரி மில்க் சில்க் வாங்கிக்கொண்டாள் அனுராதா.
அவன் திடீரென என் முன்னால் வந்து நின்றால் கொடுக்க வேண்டாமா என்ன?’ வெட்க சிரிப்பு பூத்தது. ‘இதுதானடி நிஜம்’ அவளது மனம் அவளை இடித்தது.’ உதடுகள் ஆயிரம் சொல்லலாம். இவருக்கு பிடிக்குமா? அவருக்கு பிடிக்குமா என யோசிக்கலாம். ஆனால் எப்போதும் அவனை எனக்கு பிடிக்கும்தான்.
சந்தித்துக்கொள்ளலாம்! எந்த எதிர்ப்பு வந்தாலும் சந்தித்துக்கொள்ளலாம்! அவனிடம் சரியென்று சொல்லிவிடலாம். மனதார ஒரு முடிவுக்கு வந்திருந்தது மனம். அவன் வந்துவிடுவான் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் அவளது விழிகள் அவனை தேடிக்கொண்டே இருந்த நேரத்தில்.....
தொடரும்...
{kunena_discuss:1147}