“யாழினி என்ன பண்ணுறா?”
“நடிக்கிறா”
“மாமா?”
“வேற என்ன சொல்ல சொல்லுற? என்னைப் பார்த்தா நல்லா இருக்குற மாதிரி நடிக்கிறா.. அவ அழுகுற சத்தம் எனக்குகேட்குது.. நான் என்னனு கேட்டா ஒன்னுமே இல்லைனு சாதிக்கிறா. நேத்து நடு ராத்திரியில அவன் பேர கத்தி பாதி தூக்கத்துல எந்திரிச்சு அழுவுறா தமிழ்.இதெல்லாம் நான் ஏன் பார்த்துட்டு உயிரோட இருக்கேன்னு தெரியல..”
“அய்யோ.ஏன் மாமா இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“பின்ன என் கோபத்துக்கு கூட பயப்படாதவளை வேற என்ன செய்யட்டும் தமிழ்? புகழ் அவ வாழ்க்கையில இப்போதானே வந்தான்?? அப்படி என்ன ஒரு நட்பு? எல்லாத்தையும் மறக்குற அளவு?”
“மாமா..”
“என்ன வேணும்னாலும் பண்ணு தமிழ்.பழைய யாழினி எனக்கு வேணும்.. நைட்டு அவ தூங்குறதுக்கு ஊசி ஏதாச்சும் போடு .. அவ கதறுவதை கேட்க முடியல தமிழ்”
“மாமா.. இப்படியே பேசினா உங்களுக்கு தான் ஊசி போடுவேன்.. நான்தான் வந்துட்டேன்ல? அவளை நான் வெளில கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன் மாமா..”
“கூட்டிட்டு போப்பா”
“பக்கத்துல இல்ல மாமா..கொஞ்சம் தூரமா. ரெண்டு மூணு நாள் தங்குற மாதிரி இருக்கும்.. நீங்களும் வரதுனாலும் எனக்கு சம்மதம்தான்.” பழைய மோகனாக இருந்திருந்தால் நிச்சயம் இதற்கு இசைந்திருக்க மாட்டார். ஆனால் இன்று? ஒரு பெருமூச்செரிந்துவிட்டு,
“ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்றார். அவரை தோளோடு அணைத்து கொண்டான் தமிழ். “இன்னும் ரெண்டு நாளில் என்ன நாள் வரும்னு உங்களுக்கு தெரியும்ல மாமா? இந்த நேரத்துல அவ இங்க இருந்தால் தேவை இல்லாததை யோசிப்பா.. சோ நான் என்கூட கூட்டிட்டு போறேன்”
“சரிப்பா”. மோகனிடம் அனுமதி வாங்கியவன் யாழினியை தயாராக சொல்லிவிட்டு அவளுக்கு உடைகளை எடுத்து வைத்தான். அவளை சம்மதிக்க வைப்பது அவனுக்கு அத்தனை சுலபமாகவில்லை. ஆனாலும் அவன் அதை செய்துதான் ஆக வேண்டும்!தன்னவளை விதியானது வருத்துவதை தடுத்தே ஆக வேண்டும் என்ற வேட்கையில் இருந்தான் தமிழ். எல்லா நேரமும் மதியால் விதியை வெல்ல முடிகிறதா என்ன?
தமிழின் காரில் வழக்கம்போலவே மௌனத்தின் சிகரமாக இருந்தாள் யாழினி. அவளுக்குள் இப்படி ஒரு அமைதியான சுபாவம் இருப்பதே தமிழுக்கு சில நாட்களாகத்தான் தெரிகிறது. கடைசியாக எப்போது இப்படி எல்லாம் இருந்திருப்பாள்? ஒரு வேளை தன் தாயின் இழப்பின்போது? தெரியவில்லை அவனுக்கு!
ஆனால் இந்த மௌனம் அவனுக்குகொஞ்சம் இனிக்கவில்லை. “இவ அமைதியா இருக்கும்போது நதி மாதிரி இருக்கா”என்று சொன்னதெல்லாம் மறந்தே விட்டிருந்தான் போலும்.
ஈரமான ரோஜாவே
என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்? போதும்..
ஏங்காதே ..என் அன்பே ஏங்காதே!
“இவனுங்க வேற நேரம் கெட்ட நேரத்துல சிட்டிவெஷன் சாங் போடுவானுங்க”என்று வானொலியை மனதிற்குள் சபித்தான் தமிழ். அவனது எரிச்சலையோ, வானொலியில் ஒலித்த பாடலையோ யாழினி கவனிக்கவில்லை என்பது அவளின் முகபாவத்திலேயே தெரிந்தது. என்ன நினைக்கிறாள்?என்பதை கூட சொல்லமாட்டுறாளே என்று மருகினான் தமிழ்.
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லை என்றால் ஒரு சாபமிடு..பொன்னாரமே..
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து!
கன்னத்தில் ஏதோ ஊர்வது போல இருக்க சட்டென ப்ரேக் போட்டான் தமிழ். அவசரமாக கன்னத்தை அவன் தட்டிவிட, ஈரமே அவன் அழுததற்குன் சாட்சியானது. “அழறேனா?”தனக்கு அவன் வெகுண்டெழுந்த நேரம் யாழினியும் நடப்புக்கு வந்தாள்.
“எ.. என்னாச்சு?”
“ஒன்னுமில்லடா..”
மீண்டும் மௌனம்! ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது போல திரும்பி கொண்டாள் யாழினி.