ககன், ‘என்ன இது.. இந்த காவ்யாங்கற பொண்ணு மட்டும் தான் பேசிட்டே இருக்கா... பர்த்டே பாப்பா பேசவே இல்லையே... ஏன் அப்படி...?! கொஞ்சம் முன்னாடி அந்த பொண்ணு கேக் கொண்டுவந்தப்போ வாயத்திறந்து தேங்க்ஸ் சொன்னமாதிரி இருந்தது... ஆனா அந்த மியூசிக் சத்தத்துல ஒண்ணுமே கேட்கல.. அதோட உதய் வேற என்னை டிஸ்டிரக்ட் பண்ணிட்டான்.. ஸ்டுபிட் பெல்லோ..(!?) சரி போனாபோகுது.. இப்போவாவது இந்த பொண்ணு பேசும்னு பார்த்தா, துளிகூட சத்தமே வரலையே... குரலை கேட்டாதானே இது சிக்னல் பொண்ணுதானான்னு தெரியும்... தேவுடா... அந்த பிறந்தநாள் பாப்பாவை பேசவெச்சிடு... ப்ளீஸ்...’ என்று நீளமாக மனதிற்குள் பேசி, வேண்டுதல் வைக்கும் வரையிலும் கூட... அந்த பாப்பா பேசவே இல்லை... ஏன்?
சற்றே நெருங்கி தாரா என்கிற பாப்பாவிடம் சென்றால், காவ்யாவின் கோபம், முறைப்பு எல்லாவற்றையும் தூசியாக தட்டிவிட்டு, நிஜமாகவே கனவில் மிதந்துக்கொண்டிருந்தாள். அதற்கு காரணம், காவ்யாவின் அனுமானப்படி ‘அந்த சிக்னல்காரன்’ இல்லை.. அவளின் கையில் இருந்த அந்தப் பொருள்தான்.. தாராவுக்கு மிகவும் பிடித்தது... அவளது உறவுகளும் நட்புகளும் அதை வைத்து பேரம் பேசினால் உடனே மடிந்துவிடுவாள்... அந்த பொருளுக்கு அவ்வளவு சக்தி.. அதுதான்... ‘ஒயிட் சாக்லேட்’ (white Chocolate).!!!
எப்பொழுதுமே ஒயிட் சாக்லேட் சாப்பிடும்போது மிகவும் ரசித்து.. பொறுமையாக.. அணுஅணுவாக ருசிப்பவள், தாரா... இன்று அதில் அங்கங்கே இருந்த உலர்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அவளை கட்டிப்போட... கனவுலகத்தில் மிதப்பவள் போன்றே அதை கண்ணால் ரசிப்பதும்.. பின் சிறிது சிறிதாக ருசிப்பதும்.. மறுபடியும் கண்ணால் ரசிப்பதும்... ருசிப்பதுமாக இருந்தாள்... இதில் அவளின் முதுகுக்கு பின்னால் நின்று காச்...மூச்சென்று கத்திக்கொண்டிருந்த காவ்யாவை எங்கிருந்து கவனித்தாள்...!!
அதுதான் தாராவிடம் அவளுக்கே மிகவும் பிடித்த குணம்.. பிடித்த வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டால், பக்கத்தில் பால் பாயசமே வைத்தாலும் கண்டுக்கொள்ள மாட்டாள்.. அந்த வேலையை முடித்தால்தான் அவளின் கவனம் மாறும்.. இது பல நேரத்தில் நன்மையாக பட்டாலும், பலருக்கு பலவிதத்தில் சென்று தாக்கும்..!! இப்பொழுது காவ்யாவிற்கு தாக்குவது போல்..!
பொறுமை இழந்த காவ்யா, தாராவின் தோளை பிடித்து திருப்புவதற்கும்.. அதே அளவு பொறுமையுடன்... எழுந்து நின்ற ககன், அவர்கள் பக்கம் பார்ப்பதற்கும் சரியாக இருக்க... கையிலும் வாயிலும் சாக்லேட்டுடன் நின்றுகொண்டிருந்தாள், நட்சத்திரங்களோடு போட்டியிடும் வகையில் மினுமினுத்த கண்களுடன்.
அவளைப் பற்றி தெரிந்ததால், தன்னையே நொந்தபடி தலையில் அடித்துக்கொண்டு.. வந்த சிரிப்பை அடக்கியவாறு அமர்ந்துவிட்ட காவ்யாவின் செயலை புரியாமல் ஒரு நொடி பார்த்துவிட்டு, மறுபடியும் அவளின் தனி உலகிற்கு சென்ற தாராவை கண்ட ககனின் இதயம், ஐந்தாறடி தொலைவில் நின்றிருந்த அவளிடம் சென்று தொபுக்கடீர் என்று விழுந்துவிட்டது...
மின்விளக்கின் பளீர் வெளிச்சத்தில் விளங்காத அவளின் தோற்ற அழகு இந்த மங்கலான விளக்கொளியில், அவள் தேவதையென விளங்கியது. டான்ஸ் ஹாலின் உள்ளேயே இப்பொழுதா எப்பொழுதா என்று வழுக்கிக்கொண்டு இருந்த ககனின் இதயம்.... இதோ இந்த நொடியில், சராசரியான உயரம்.. பூசினார் போன்ற உடல்வாகு.. உச்சந்தலைக்கு கொஞ்சம் கீழே கேஷுவல் கொண்டையாக சுருட்டப்பட்ட முடி... மினுமினுத்த ப்ரௌன் கண்கள்... திருத்தப்படாத புருவம்.. சாக்லேட் உபயத்தால் பளபளத்த உதடுகள்.. பீச் நிற மாக்சி... கையில் சாக்லேட்.. என்றிருந்த அவளின் தோற்றத்தில், ஒரேடியாக சறுக்கிக்கொண்டு சென்றுவிட்டது.. இவள் தான் இந்த ஜென்மத்தில் தன் இணை என்ற உறுதியான முடிவுடன்...!!
கொஞ்ச நேரம் முன்னால், ‘இவளா? அவளா? இவளையும் அவளையுமா? அப்படிப்பட்டவனாநான்?!’ என்று ககனின் மூளையை கசக்கி பிழிந்து அவனைப்பற்றி அவனுக்கே தாழ்வான எண்ணத்தை வரவைத்த சிந்தனைகளை தூர விரட்டியது.. இப்பொழுதுள்ள அவனின் திண்ணமான உள்ளம். இவள் தான்.. இவள் மட்டுமேதான் என்ற உறுதியே அது.!
‘அப்போ.. அந்த சிக்னல் பொண்ணு..?! அவளோட மதுரமான குரல்...??!! ஒரு மாசமா மறக்க முடியலன்னு சாயிந்தரம் தானே புலம்பின...?’ என்று வீறுகொண்டு எழுந்த மனசாட்சியை, ‘நீ வேணா பாரேன்... இவளும் அவளும் ஒருத்திதான்னு கூடிய சீக்கரம் தெரியவரும்... அப்போ உன் மூஞ்சிய கொண்டு எங்க வெச்சிப்ப..?!’ என்று உறுதியுடன் பதில் கேள்வி கேட்டான். ‘அதை அப்போ பார்த்துக்கலாம்... ஒருவேளை இவ வேற அவ வேறயா இருந்தா உன்மூஞ்சிய நீ எங்க வெச்சிப்ப??’ என்று எள்ளி நகையாடியது அவனின் மானமுள்ள மனசாட்சி.. அதற்கு ககனும் ‘அதை அப்போ பார்த்துக்கலாம்..’என்று அசால்டாக அடக்கினான்.
அவன் நினைத்தது போலவே இருவர் அல்ல ஒருவர் தான் என்று தெரியவந்தால் இன்னும் என்ன என்ன பேசுவனோ அவனின் மானமுள்ள மனசாட்சியை.....!?!