தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 01 - கார்த்திகா கார்த்திகேயன்
"மணி எட்டரை ஆக போகுது. இவளை இன்னும் காணும்", என்று நினைத்து கொண்டு அந்த பொறியியல் கல்லூரி மரத்தடியில் அமர்ந்திருந்தாள் காவ்யா.
அப்போது ஹாஸ்டலில் இருந்து கையில் ஒரு நோட்டுடன் ஓடி வந்தாள் கலைமதி.
"எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது? ஊருல இருந்து நீ இன்னும் ஹாஸ்டலுக்கு வரலையோன்னு நினைச்சேன்", என்றாள் காவ்யா.
"அப்பதே வந்துட்டேன் காவ்யா. எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தேன். அதான் லேட் ஆகிட்டு", என்று அழகாய் புன்னகைத்தாள் கலைமதி.
"சிரிச்சே மயக்கிருவியே. வீட்ல இருந்து எண்ணத்தை எடுத்துட்டு வந்துருக்க போற? எடுத்து வைக்க இவ்வளவு நேரம்னு சொல்ற? சாயங்காலம் போய் எடுத்து வைக்கலாம்ல?"
முகத்தில் இருந்த புன்னகை துணி கொண்டு துடைத்து போல மறைந்து போனது கலைமதிக்கு.
"இப்ப காவ்யா கிட்ட எப்படி விசயத்தை சொல்ல?", என்று முழித்தாள் கலைமதி.
"இப்ப எதுக்கு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிச்சிட்டு இருக்க? சரி வா கிளாஸ்க்கு போவோம்"
"ஹ்ம்ம் சரி காவ்யா"
இருவரும் வகுப்பறையில் அமர்ந்திருந்தார்கள். இப்போது இவர்கள் படிப்பது மூன்றாம் ஆண்டில் இரண்டாவது செமஸ்டர்.
இருவரும் பேசி கொண்டிருக்கும் போது தான் கலைமதி கழுத்தில் இருந்த புது செயின் காவ்யா கண்ணில் பட்டது.
"என்ன மதி இது? புது செயின் மாதிரி இருக்கு.
"நீ இது வரைக்கும் தங்கம் போட மாட்டியே", என்று கேட்டு கொண்டே அவளை பார்த்தவள் கண்கள் இப்போது முழுவதுமாக மதியை அளவிட்டது. அவள் காதில் கையில் எல்லாவற்றிலும் தங்கம் தான் இருந்தது.
"ஐயோ கேட்டுட்டா. எப்படி ஆரம்பிக்க?", என்று பயந்து திரு திரு என்று விழித்தாள் கலைமதி.
"நான் கேட்டுட்டே இருக்கேன். நீ முழிச்சிட்டு இருக்க? வளையல் கம்மல் எல்லாம் தங்கத்தில் இருக்கு. எதுவும் ஜேக் பாட் அடிச்சிட்டா மதி? உங்க சித்தி தான் இதை எல்லாம் உனக்கு தர மாட்டாங்களே. அவங்க பொண்ணுக்கு தான கொடுப்பாங்க. எல்லாமே புதுசா வேற இருக்கு. உங்க அப்பாவுக்கு, உங்க சித்தியை மீறி எப்படி வாங்கி போட தைரியம் வந்துச்சு?"
....
"ஏய் லூசு நான் கேட்டுட்டே இருக்கேன். நீ எங்க கனவுலகத்துல இருக்க? சொல்லு மதி"
"அது அது வந்து....", என்று இழுத்தாள் கலைமதி.
"எதுக்கு மதி இப்படி இழுக்குற?"
"ஒன்னும் இல்லை காவ்யா. அது வந்து.."
"சரி கழட்டி தா. மாடல் பாத்துட்டு தரேன்"
"இல்லை கழட்ட கூடாது. இப்படியே வேணா பாரு", என்று சொல்லி அதை சுடிதாரில் இருந்து வெளியே எடுக்கும் போது, ப்ரொபஸர் வந்து விட்டதால், இவர்கள் பேச்சு தடை பட்டது.
மதியை விசித்திரமாக பார்த்தாள் காவ்யா.
அந்த வகுப்பு முடிந்த பிறகு, மதியை பார்த்தாள் காவ்யா. அவ பார்வையை உணர்ந்து சுற்றும் முற்றும் தலையை திருப்பி பார்த்து விட்டு அந்த செயினை வெளியே எடுத்தாள் கலைமதி.
அவள் செய்கையை பார்த்து கொண்டிருந்த காவ்யா "இவ என்ன திருடிட்டு வந்த மாதிரியே ரியாக்சன் கொடுக்குறா", என்று நினைத்துகொன்டே அவளை பார்த்தாள்.
மதி வெளியே எடுத்த செயினை பார்த்த காவ்யா அடுத்த நொடி "ஐயையோ", என்று கதியே விட்டாள்.
பக்கத்தில் உள்ளவர்கள் திரும்பி பார்க்கும் அபாயம் இருப்பதால், உடனடியா அந்த செயினை சுடிதாருக்குள் போட்டு விட்டாள் கலைமதி.
அதிர்ச்சியில் சிலை போல் அமர்ந்திருந்தாள் காவ்யா.
"என்ன டி ஆச்சு?", என்று கேட்டு கொண்டே அவளை உலுக்கினாள் கலைமதி.
"இதை நான் கேக்கணும். உனக்கு என்ன டி ஆச்சு?"
"எனக்கு என்ன?"
"என்ன நக்கலா? இது என்ன செயின்? சாதாரண செயின் இல்லை. தாலி செயின், இதை எதுக்கு போட்டுருக்க? என்ன நடந்துச்சு?"
"நீ சொல்ற மாதிரி, இது தாலி தான் காவ்யா"
"என்ன டி சொல்ற? நாலு நாள் லீவ்க்கு தான டி போன? இப்ப கழுத்துல தாலியோட வந்திருக்க?"
"டென்ஷன் ஆகாம பொறுமையா கேளு காவ்யா. நானே அந்த பதட்டத்தில் இருந்து வெளியே வரலை. அப்புறம் சொல்ல போறதை கேட்டு கோப படாத. எனக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா?"
"இந்த கண்ணுல ஒண்ணுக்கு போற வேலையை வச்சிக்கிட்ட கொன்னுருவேன். ஒழுங்கா சொல்லு மதி. எனக்கு இங்க ரத்த அழுத்தம் எகுறுது"
அவள் சொல்வதற்குள் வகுப்புக்கு அடுத்த ஆசிரியர் வர இவர்கள் பேச்சு தடை பட்டது. காவ்யாவின் மனதில் பாரம் ஏறி அமர்ந்தது.