அதுவரை நடந்தது எல்லாம் கூட சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கடுத்ததாக அவனை நோக்கி வர இருந்த சுனாமி அலையை பற்றி அவன் அறியவில்லையே அப்போது?
மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. அது அவனை பழைய நினைவுகளிலிருந்து தரை இறக்கியது.
‘ஹ.. ஹரிஷ்...’ அனு மெல்ல அழைக்க
‘ம்?’ அவன் சட்டென நின்று திரும்பி அனுவின் முகம் பார்க்க, கரைந்தது அவன் மன இறுக்கம். அவள் கன்னங்களில் இருந்தது கண்ணீர் துளிகளா? மழை நீர் துளிகளா? புரியவில்லை அவனுக்கு.
அப்பா என்ன பேசி இருப்பார் என ஓரளவு யூகிக்க முடிந்திருந்தது அவனால். ‘நீ நிஜமாவே ஜெயிச்சிட்டேடா கண்ணா’ என்று அவர் சொன்ன தருணத்திலேயே பாதி புரிந்திருந்தது அவனுக்கு. அவர்களை விட்டுவிட சொல்லி இருப்பார் அவர் கண்டிப்பாக.
சிறு வயதிலிருந்து தூக்கி வளர்த்த சொந்தங்களை தூக்கி எறிவது அப்படி ஒன்றும் எளிதல்ல. அனுவுக்கு நிச்சயாமாக ஒரு பெரிய வலியாகத்தான் இருக்கும். எல்லாமே புரியத்தான் செய்தது ஹரிஷுக்கு. யோசனையுடன் அவன் அவள் முகம் படிக்க
‘மழை பெருசாகுது ஹரிஷ். அடுத்த வாரம் நீ மேட்சுக்கு சவுத் ஆப்ரிக்கா போகணும்தானே.. கோல்ட், ஜுரம் ஏதாவது வந்திட போகுது. எங்கேயாவது ஓரமா நிக்கலாம்.’
அவளை பார்த்துக்கொண்டே அவளை நோக்கி கை நீட்டினான். அவள் புரியாமல் பார்க்க
‘கை பிடிச்சுக்கோ. அப்படியே மழையிலே ஓடிப்போய் அங்கே ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு. அதுக்குள்ளே நின்னுக்கலாம்’
அவள் சின்ன புன்னகையுடன் அவன் கை பற்றிக்கொள்ள ‘இல்ல வேண்டாம் உனக்கு மயக்கம் ஏதாவது வரப்போகுது’ திடீரென நினைவு வந்தவனாக அவனே சொல்ல
‘அதெல்லாம் வராது. நாம ஓடலாம்’ கெஞ்சலாக கேட்டாள் அவள்.. அந்த நேர இறுக்கம் தளர இருவருக்கும் அது தேவையாகவே இருந்தது.
‘ம்? சரி வா பார்ப்போம்’ அவன் சொல்ல இருவரும் கைகோர்த்துக்கொண்டு முகத்தில் அடிக்கும் சாரலை எதிர்த்து சந்தோஷமாய் ஒரு நிமிட ஓட்டம். சத்தியமாய் இந்த மனநிலையில் இப்படி ஒரு உற்சாகத்தை அவள் எதிர்ப்பார்க்கவில்லைதான்.
அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவளும் ஓடி நிறையவே மூச்சு வாங்கி யாருமே இல்லாத அந்த பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் நுழைந்து அங்கிருந்த நீரில் சற்றே சறுக்கி தடுமாறி, சட்டென அவளை தாங்கி சமாளித்தவனின் அணைப்புக்குள் வந்திருந்தாள் பெண். அவள் முகத்தில் வழிந்திருந்த நீரை தனது விரல்களால் துடைத்தான் ஹரிஷ்.
இருவர் விழிகளும் ஒன்றுக்குள் ஒன்று கரைந்துக்கொண்டே இருந்தன. வாய்திறந்து எதுவுமே பேசிக்கொள்ளவில்லை இருவரும்.
‘எல்லாவற்றையும் மறக்கத்தான் முயல்கிறேன் உனக்காக. முடியவில்லையே பெண்ணே! அன்று காவல் நிலையத்தில் கூப்பிடுங்கள் என் தோழியை .அவள் எனக்கு எதிராக எதுவும் சொல்ல மாட்டாள் என்றேனே தைரியமாய். ஆனால் என் நம்பிக்கைகளை தவிடு பொடியாக்கி என்னை நோக்கி நீண்டு குற்றம் சாட்டிய அவள் விரல்களை இன்னமும் மறக்க முடியவில்லையே என்னால்! எத்தனை முயன்றும் அவளை மன்னிக்க முடியவில்லையே என்னால்!’ அவன் உள்ளம் தனக்குள்ளே புலம்பிக்கொண்டே இருக்க
எது புரிந்ததோ, என்ன தெரிந்ததோ அவன் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டு அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள் அனுராதா!
தொடரும்...
{kunena_discuss:1147}