“ஹாஹா… சாருக்கா… உங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் வந்துட்டாங்க போல…” என விக்கி சிரிக்க, கௌஷிக்கின் பார்வை இப்போது விக்கியிடம் திரும்பியது…
“சொல்லமறந்துட்டேன் பாருங்க சார்… சாருக்காவும் உங்களைப் போலத்தான்… எதையுமே வேண்டாம்னு சொல்லமாட்டாங்க… அதுவுமில்லாம அவங்களோட ஃபேவரிட் தயிர்சாதம் தான்..”
விக்கி இரண்டாவது சொன்ன வார்த்தையினை எப்பொழுதோ புரிந்து கொண்டான் கௌஷிக்…
தனக்குப்பிடித்தமான ஒன்று தனக்குப்பிடித்தவர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பது ஒரு தனி சந்தோஷம்… அதனை எளிதில் வார்த்தைகளில் விவரித்திட முடியாது…
அவள் தனது உணவினை எடுத்து அவனிடம் கொடுத்தபோதே அவன் அதனை புரிந்தும் கொண்டான்…
இப்பொழுது விக்கி சொன்ன முதல் வார்த்தை அவன் செவிகளில் விழுந்திட, தன்னைப்போலவே அவளும் இருப்பதை எண்ணி உள்ளம் உவகைப்பட, சாரு ஆர்டர் செய்த உணவும் வந்திட்டது…
“பாருங்க சார்… இங்க இவ்வளவு பேசிட்டிருக்கோம்… இது எதுவுமே என் காதுல கேட்கலைன்னு ஒருத்தன் தின்னுட்டிருக்கான் சார்… பாருங்க…”
விக்கி தீபனைக் கைகாட்டி கூறிட, அவனோ, “போடா…” என்பது போல் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட, விக்கி, சாரு, கௌஷிக் மூவரும் புன்னகையுடன் உணவை உண்ண ஆரம்பித்தனர் இனிதே…
விக்கி சாப்பிட்டு முடித்த போது அவனுக்கு ஒரு போன் கால் வர, அவனும் அதனை காதுக்கு கொடுத்தபடி, “எக்ஸ்கியூஸ்மி…” என்றபடி நகர,
தீபனும் நன்றாக ஒரு வெட்டு வெட்டுவிட்டு நிமிர, விக்கியைக் காணவில்லை…
என்ன ஏது என்று சாருவிடம் அவன் வினவ, “அவனுக்கு போன் வந்துச்சு தீபா… அதான் பேச போயிருக்கான்…” என்றாள் அவளும்…
“சரி இருங்க… நான் வந்துடுறேன்…” என்றவன் கௌஷிக்கிடமும் ஒரு தலையசைப்புடன் சொல்லிவிட்டு விக்கியைத் தேடிச்செல்ல, இருவருமே இப்பொழுது செய்வதறியாது ஒருவரை ஒருவர் எப்படி பார்ப்பது என தவித்திருந்தனர்…
அதனைக் கலைப்பது போலேயே, அப்போது அங்கே வருகை தந்தனர் இருவர்…
“ஹலோ கௌஷிக்… எப்படி இருக்குறீங்க?...” என அவனின் கைகளை குலுக்கியபடி வந்தார் அவனின் தொழில் நண்பர் ஒருவர்…
“ஹலோ மகேஷ் சார்… ஐ அம் குட்… நீங்க?..” என புன்னகையுடன் அவனும் கூறிட, “இது என் வொய்வ்ஃப்…” என மகேஷ் தன் அருகில் இருந்த பெண்மணியை அறிமுகப்படுத்திட,
புன்னகையுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தான் அவனும்…
அந்த பெண்மணியின் கண்கள் சாருவின் பக்கம் சென்று நின்றிட, அதனை கவனித்தவன், “இவங்க சாரு…” என அறிமுகப்படுத்திட, அவளும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்…
“கௌஷிக் கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போல…” மகேஷ் சிரித்துக்கொண்டே கூற, இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர் சட்டென…
சாருவின் கன்னத்தில் அவளையும் மீறி செம்மையானது ஏறிட, அதனை அவள் அவனிடத்தில் மறைக்க முயன்று தோற்றிட்டாள் பாவம்…
“சாரு… நீங்க ப்ளே பேக் சிங்கர் தான?... இப்போ கூட டீ அட்ல நீங்க இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கீங்கல்ல?...”
அந்த பெண்மணி மகிழ்ச்சியுடன் கேட்டிட, அவள் “ஆம்…” என்றாள் மெதுவாய்…
“ஹௌ ஸ்வீட்… உங்க இரண்டு பேர் ஜோடி பொருத்தமும் செம போங்க… அப்படித்தானங்க…”
அவர் தன் கணவரையும் உடன் அழைத்துக்கொண்டு கேட்டிட, அவரும் ஆம் என்றார்….
“அந்த அட் ல இரண்டு பேருக்கும் எப்படி அவ்வளவு கெமிஸ்ட்ரி வந்துச்சுன்னு யோசிச்சுப்பார்த்துட்டே இருந்தேன்… இப்போதான் புரியுது… ரியலாவே ஆஃப் ஸ்கிரீன்ல கெமிஸ்ட்ரி இருக்கும்போது ஆன் ஸ்கிரீன்ல வர்றதுக்கு என்னன்னு?..”
கௌஷிக்கை பேசவே விடாது அவர்கள் இருவருமே கேள்வி கேட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருக்க, அவனுக்கோ தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது…
தான் எதுவும் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவளிடத்தில் எழக்கூடுமே என்ற எண்ணம் அவனுக்குள் எழ, அதையும் விட இப்படி பொது இடத்தில் அவர் இவ்வாறு இணைத்து பேசியதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற எண்ணமும் அவனுக்குள் எழாமல் இல்லை…
“சரி கௌஷிக்… நாங்க கிளம்புறோம்…” என இருவரும் விடைபெற்று செல்ல, அவன் இப்போது நேரடியாகவே அவளைப் பார்த்திட்டான்…
“சாரி… அவங்க ஏதும் தெரியாம பேசிட்டு போறாங்க… அவங்க பேசினதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்…”
அவன் திணறாமல் கேட்டுவிட, “அவங்க பேசினதுல தப்பு எதும் இல்லை… இரண்டு பேரும் ஒன்னா அட் பண்ணியிருக்குறோம்… இப்போ இரண்டு பேரையும் ஒன்னா வச்சு பார்த்தா, யாரா இருந்தாலும் சட்டுன்னு இப்படிதான் கேட்கத்தோணும்… எண்ணவும் தோணும்… அதனால நீங்க மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டாமே… ப்ளீஸ்…” என்றாள் அவளும் சட்டென…
முதலில் அவளது குரலில் இருந்திட்ட தெளிவானது பின்னர் கெஞ்சுதலாக வந்து நின்றிட, அவனால் அதற்கு மேலும் அவளைக் கெஞ்சவிட முடிந்திடவில்லை…
“தீபன் எப்போ வருவார்?...” அவன் என்ன பேச என்று தெரியாது தீபனைப் பற்றிக் கேட்டிட,
“தெரியலை… விக்கியைத் தேடி போனான்…” என்றாள் அவளும் அவன் கேட்ட கேள்விக்கு பதில் தரும் விதமாய்…
அந்நேரம் தீபனின் செல்போன் சிணுங்கிட, எடுத்து பேசியவளின் முகத்தில் கோபம் மின்னிட, அக்கோபத்தை தனக்குள் அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தவளிடம்,
“என்னாச்சு?..” என அவன் பதட்டத்துடன் கேட்டிட,
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் லேசாக கலங்கியிருக்க, பதறிப்போனான் கௌஷிக் சட்டென…
“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”
{kunena_discuss:1162}