“இதுலே நான் நினைக்க என்ன இருக்கு? உனக்கு இல்லதா உரிமையா.. ? பொண்ணு, புள்ளைக்கு பிடிச்சா நடத்திடலாம்..”
“புள்ளைங்களுக்கு ஏற்கனவே பிடிச்சிருக்கு போலே.. என் மவன் எங்கிட்ட வந்து கயல் புள்ளைய பத்தி சொன்னான்.. முறை இருக்கிறதாலே சரின்னு தோணிச்சு.. ஆனால் எப்படி நேரா வந்து கேக்கன்னுட்டு, ஆள் மூலமா கணேசன் கிட்டே கேட்டேன்.. உங்கள கேட்டு சொல்லுறதா சொன்னான்.. இன்னைக்கு நீங்க வாரதாவும் சொன்னான்.. சரின்னுட்டு நானே நேர்லே உங்கள பார்த்து , பேசிட்டு போலாம்ன்னு வந்தேன்.. அத்தை..”
“நல்லது .. சீக்கிரம் கல்யாணம் முடிச்சிரலாம்..”
அப்போ வேலன் வந்து “அம்மா, நம்ம ரெண்டு பிள்ளைங்க கல்யாணத்தையும் ஒரே நாளிலே நடத்திடலாமா? “
“வேணாம்யா.. ஒன்னு போலே நடந்தா கண்ணு படும்.. அடுத்த அடுத்த முஹூர்தத்துலே வசிக்கலாம்”
“அப்போ கயலுக்கு மொத முடிச்சிட்டு, மலருக்கு பண்ணிடலாம் “ என வேலன் சொல்ல,
“அது எப்படிலே.. மூத்தவ மலர் தான்.. அவளுக்கு முடிச்சிட்டு கயலுக்கு பண்ணலாம்” என கணேசன் கூறினார்.
“இல்லன்னே.. நீங்க மூத்தவுக.. உங்க பொண்ணுக்குதான் மொத முடிக்கணும்”
“இல்லலே.. வயசுலே மூத்தவ மலர் .. “ என வாதாட,
“ரெண்டு பேரும் நிறுத்துங்கலே.. நம்ம ஜோசியர் கிட்டே போய் புள்ளைங்க நட்சதிரம் சொன்னா , அவர் சொல்லுவார் எந்த முஹூர்த்தம் யாருக்குன்னு, அதும்படி வச்சுக்கிடலாம்..” என இப்போது அனைவரும் ஒத்துக் கொண்டனர்.
கணேசன் தாய்மாமனிடம்
“ஐயா.. உன் பேரன் வந்துருக்க்காகளா?”
“இதோ கூப்பிடுதேன் அத்தை.. “ என்றவன் தன் பேரனை அழைத்து அறிமுகபடுத்த, அவர் கயலுக்கு ஏற்ற வகையில் இருப்பதை உணர்ந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
கயலுக்கு பார்த்தவரின் பெயர் பார்த்திபன் என்றும், அவரும் டிகிரி முடித்து, அவர்கள் தொழிலை பார்த்துக் கொள்வதாகவும் கூற, எல்லோருக்கும் சந்தோஷம்.. அங்கே பந்தியில் இருந்த, செழியன், மலர், கயல் எல்லோரையும் அழைத்தவர், அவர்களை அறிமுகபடுத்த, கயல் விழிகளில் ஒரு வெட்க மின்னல் வந்து சென்றது.
அன்று திருப்தியாக சாமி கும்பிட்டு அவரவர் வீட்டிற்கு திரும்பியவர்கள், அடுத்த நாள் முஹூர்த்தம் குறிக்க சென்றனர். அவர் ரெண்டு மாதத்தில் ஒரு வார இடைவெளியில், இரு தேதிகள் சொல்ல, அதில் முதலில் கயல், பார்த்திபனுக்கும், இரண்டாவதில் மலர், செழியனுக்கும் குறித்துக் கொடுக்க, ஒப்புக் கொண்டனர்.
அன்று இரவு மலர் வீட்டினர் ஊருக்கு திரும்புவதை பற்றி பேச்செடுக்க, செழியன் அம்மா, ஆச்சியிடம் முஹூர்த்த புடவை எப்போ எடுப்பது என்று கேட்டார்.
அப்போது ஆச்சி “ஐயா... வேலா.. இன்னைக்கு நாள் நல்லா இருக்கு.. முஹூர்த்த புடவை நம்ம பக்கம் திருநெல்வேலி ஆர்.எம்.கே.வி. லே எடுக்கிறதுதான் வழக்கம்.. அத மட்டும் இங்கன எடுத்துட்டு , மத்த ஜவுளி எல்லாம் ஊர்லே போய் எடுத்த்க்கிடலாம் ? என்ன சொல்லுத?” என்று வினவ,
“சரிம்மா.. ஆனா அது மாப்பிள்ளை வீட்டிலே தானே எடுக்கணும்” என
பார்வதியோ “நாங்களும் இன்னைக்கு இங்கனதானே இருக்கோம்.. இப்படியே எல்லோரும் போயி எடுத்துட்டு வந்துடலாம்...”
“கயலுக்கு?” என்னும்போதே
கணேசன் வீட்டிலும் பெரியவர்கள் அங்கிருந்ததால், அவர்களும் எடுத்து விடலாம் எனக் கூற, எல்லோரும் திருநெல்வேலி சென்றனர்.
பார்த்திபனும் நேராக கடைக்கே வர, எல்லோருமாக சேர்ந்து புடவை எடுத்து விட்டு, அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தனர்..
மறுநாள் அவரவர் ஊருக்கு சென்று விட, வேலன் திருமணத்திற்கு பதினைந்து நாட்கள் முன்னதாக ஊருக்கு வந்துவிடுவதாக சொல்லி சென்றார்.
விடுமுறை முடிந்து காலேஜ் சென்ற செழியன், மலர், இருவரும் நேருக்கு நேர் பார்த்தபோது சற்று நேரம் மகிழ்ச்சி கூடியது.. முதலில் காலேஜ் பிரின்சிபால் அறைக்கு சென்று செழியன் விஷயத்தை சொல்லி விட்டு வர, மலர் அவர்கள் எச்.ஓ.டிக்கு சொன்னாள்.
செழியன் டிபார்ட்மென்ட் அறைக்கு வர, மற்ற லெக்சரர்ஸ் எல்லோரும் அவனை கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கினர்.. மலரையும் அவ்வப்போது கிண்டல் செய்ய, இருவரும் வெட்கப்பட்டது பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
பிறகு அவர்கள் கிளாஸ்க்கு செல்ல, செழியன் முயன்றாலும், அவன் மனதின் சந்தோஷம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அவர்கள் வகுப்பு பசங்கள் எல்லாம் சற்று நன்றாக பழகுபவர்கள். அதில் ஒருவன் எழுந்து
“சார், உங்க முகத்தில் பல்பு பிரகாசமா எரியுதே.. என்ன விஷயம் சார்.. ? கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா?’”