“நான் உருகி, உருகி உங்களை விரும்பியது உங்களுக்கு கதையா தெரியுதா? என்றாள் உத்ரா.
“இல்லைடா, நமக்கே தெரியாமல், ஒருவர் நம்மை விரும்பி இருக்காங்கன்னு தெரியும் போது, அப்படி ஒரு பரவசமா இருக்குடா. இது எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து உன்னை எப்படி ராணி மாதிரி பாத்துக் கொள்வேன் தெரியுமா. சரி நீ சொல்லுடா” என்றான்.
உத்ராவும் சொல்ல ஆரம்பித்தாள். “நீங்க ஐ.ஐ.டி யில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த பொழுது , எல்லோரும் நம்ம கிராமத்துக்கு பங்குனிப் பொங்கல் கொண்டாட , சென்றிருந்தோம். அங்கு உங்களோட பெயரியப்பா தான் ஊர் தலைவரா இருந்தார்.” என சொல்லிக் கொண்டே அதை நினைத்து பார்க்க ஆரம்பித்தாள்.
அழகாபுரம், பெயருக்கு ஏற்றாற் போல், அழகிய கிராமம். சிறிய கிராமமும் கூட. அபியின் பெரியப்பா பெயர் ராஜ சேகர். அந்த பெயராலோ என்னவோ எப்பொழுதும் தன்னை ஒரு ராஜாவாகவே கற்பனையில் இருப்பவர். ஊரில் உள்ள அதிக அளவு நிலங்களை வாங்கி குவித்து வைத்து இருப்பவர். அவருக்கே ஊர் திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் பரிவட்டம் கட்டுவார்கள்.
அந்த வருடம், திருவிழா நேரத்தில் அந்த ஊரில் இருந்த இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து, “யாராவது சாதனை புரிந்தவருக்கே பரிவட்டம் கட்ட வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த வருடம் அதிக மகசூல் பார்த்த விவசாயிக்கே கொடுக்க வேண்டும்” என்று குரல் கொடுத்தனர்.
இது வரை பரிவட்ட மரியாதை கிடைக்காத, அந்த ஊர் மற்ற பெரியவர்களும், அதை ஒப்புக் கொண்டனர். அதனால் சற்குணம் என்ற விவசாயிக்கு அந்த வருடம் பரிவட்டம் கட்டப்பட்டது. இளைஞர்களும் மகிழ்ந்தனர். அவர்களுக்கு பின் நின்று இதை நடத்தியது அபி தான் என்று அன்று இரவு அந்த ஊரில் இருந்த ஒரு தோழியின் மூலம் தெரிந்தது உத்ராவிற்கு.
மறு நாள் கோபத்தில் இருந்த ராஜசேகர், அவரது தந்தை ஊருக்கு கொடுத்த கிணற்றில் யாரும் தண்ணீர் இறைக்க கூடாது என்று கூறி மூடி போட்டிருந்த அந்த கிணற்றிற்கு பூட்டு போட்டு பூட்டி விட்டார்.
ஊருக்குள் அந்த கிணற்றில் தான் நல்ல தண்ணீர் கிடைக்கும். எல்லார் வீட்டிற்கும் குடிப்பதற்கு அதில் இருந்து தான் தண்ணீர் எடுப்பார்கள். அதையே பூட்டி விட்டதால் எல்லோரும் தண்ணீருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போனார்கள். அந்நேரம் அங்கு வந்த அபி, பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து அந்த பூட்டை உடைத்து கிணற்றை திறந்து விட்டான்.
கோபப் பட்ட ராஜசேகரிடம், “ உங்களுக்கு அப்பா கட்டிய கிணறு என்றால் எனக்கு என் தாத்தா கட்டியது. அதனால் உங்களுக்கு பூட்டும் உரிமை உள்ளது என்றால் எனக்கு அந்த பூட்டை உடைத்து திறந்து விடும் உரிமை உள்ளது.” என்று கூறி அவரையே வாயடைக்க வைத்து விட்டான்.
அபி விவசாயிகளுக்காக பேசியது அன்று உத்ராவை அவன் மீது மிக மரியாதை கொள்ள வைத்தது. அதை நினைவு கூர்ந்த பொழுது....
“நீயும் வந்திருந்தாயாட ஊருக்கு அப்பொழுது என்று ஆச்சரியமாகக் கேட்டான் அபி.
“தெரிந்து இருந்தால் மட்டும் என்ன, என்னோடு டூயட்டா பாடி இருக்கப் போறீங்க, அதே ஒழுங்கா படி என்று கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி ஒரு ஆலோசனை வழங்கி இருப்பீங்க” என்று அலுத்துக் கொண்டாள் உத்ரா.
“இன்று முதல் ஐயாவோட ரொமான்ஸ் அத்தியாயத்தை பார்த்து, நீயே அசந்து போகப் போற பார்” என்று குறும்பாகக் கூறினான் அபி.
பேசியபடி வந்ததில் நேரம் போனதே தெரியாமல், நாராயணா மந்திரை அடைந்தனர். முதல் முறை என்பதால் உத்ரா வாயடைத்துப் போனாள் அந்த கோவிலைப் பார்த்து. மிக அழகாக முழுவது வெள்ளை பளிங்கினால் கட்டப் பட்டு இருந்தது. கோவிலின் வெளிப்புற சுவர் முழுவதும் சிற்பக் கலையால் செதுக்கப்பட்டு, நுணுக்கமான வேலைப்பாடுகளால் ஜொலித்து கோவில்.
கோவிலின் உட்புறம், தரை முழுவதும், கோலம் போட்டது போன்ற வடிவில், வெள்ளை பளிங்கு கல்லில் நேர்த்தியாக, வேறு வேறு நிறத்தில் இருந்த பளிங்கு கற்களால், செதுக்கி இறந்தார்கள். அங்கிருந்த தூண்களும், வெள்ளை நிறத்தில் இருந்ததோடு, அதன் மேல் வெளிச்சம் படும் படி விளக்குகள் அமைத்து, அந்த இடத்தையே ஒளிர வைத்து இருந்தனர்.
அதில் மயங்கி இருந்த உத்ராவிடம், “ இங்கேயே இரு உத்ரா, ஒரு பொருளை எடுத்து வர மறந்து விட்டேன். இதோ வருகிறேன்” எனக் கூறி கிளம்பினான் அபி.
உத்ராவும், மற்ற சந்நிதிகளை ஒவ்வொன்றாக, பார்க்கத் துவங்கினாள். அங்கிருந்த சுவாமி சிலைகளும், வெள்ளை பளிங்கு கற்களாலேயே வடிவமைக்கப்பட்டு இருந்தது. பிரசாதக் கடையும் நம் ஊரில் உள்ளது போல் சிறியதாக இல்லாமல், அதுவே மினி சூப்பர் மார்கெட் போல் இருந்தது. பிரசாதத்தை சாப்பிட தனியாக் மேஜை, நாற்காலியுடன் கூடிய சாப்பாட்டு அறையும் பெரியதாக இருந்தது.
அனைத்தும் பார்த்து முடித்தும், அபி வராததால், வெளியே வந்து பார்த்தாள் உத்ரா. அங்கு பெரியதாக அழகான தெப்பக் குளம் ஒன்று இருந்தது. அதில் கோவிலின் பிம்பம் பட்டு அழகாக காட்சி அளித்தது. அனைத்தையும் பார்த்து மன நிறைவாக இருந்தது உத்ராவிற்கு.
அப்படியே அபியை தேடி கார் பார்கிங் வந்த பொழுது, காருக்கு அருகில் அபி, ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் நின்று பேசிக் கொண்டு இருந்தது தெரிந்தது. அருகில் நெருங்கிய நேரத்தில் அந்தப் பெண் அபியிடம் “ஐ லவ் யூ சித்” என்று கூறியதை கேட்ட உத்ராவிற்கு கோபம் வந்தது என்றால், “ சாரி காப்ரிலா “ என கூறி அவளை அணைத்த அபியின் செயலில் மயக்கமே வந்தது.
யார் அந்த காப்ரிலா? அடுத்த அத்தியாயத்தில்......
தொடரும்...
{kunena_discuss:1170}