ஹேய்...கம் ஆன்... அனு.. .இதெல்லாம் ஒரு சாப்பாடா??? நான் சாப்பாடு ஆறிப்போயிருந்தா கையாலேயே தொட மாட்டேன்... இன்னைக்கு வேறே வழி இல்லை. காலையிலே சாப்பிடலை எக்ஸாம் எழுதணும் அதான்.’
எப்படி உடைத்தேன் அவள் மனதை! அவன் முன்னால் தூக்கி எறியப்பட்ட காய்ந்த தோசையை சாப்பிட்டபோது ஏனோ அனு அவன் மனதிற்குள் வந்து வந்து போனாள். அவள் அன்று மருத்துவமனையில் கொடுத்த முத்தம் கூட நினைவிலாடியது.
‘நான் என் வாழ்க்கையில் தவற விட்ட அருமையான விஷயங்களில் அனுவுக்குத்தான் முதலிடமோ?’ கேள்வி கேட்டுக்கொண்டான் தனக்குள்ளே. மெதுமெதுவாய் அவனது மனதிற்குள் அனு குடியேறிய தருணம் அதுவே.
அதே நேரத்தில் அவனது கைப்பேசிக்கு பலமுறை அழைத்தும் அது எடுக்கப்படாமல் இருக்க, பதறி துடித்துப்போனார் அவன் அப்பா. எப்படியோ அந்த கைப்பேசி இருக்கும் இடத்தை ஓரளவு கண்டுபிடித்து நெருங்கி இருந்தனர் ஷங்கரின் வீட்டை.. அதற்குள் இரவு ஆகி இருந்தது. ஹரிஷை அடித்து ஓய்ந்து வீடு வந்து சேர்ந்திருந்தான் ஷங்கர். அவன் மனதிற்குள் ஒரு குரூரமான திருப்தி என்றுதான் சொல்ல வேண்டும்.
அதற்குள் ஹரிஷ் ஷங்கரால் கைது செய்யப்பட்ட செய்தியும் அவரை அடைந்திருக்க நேராக அவன் வீட்டை அடைந்தார் சுவாமிநாதன். முதலில் எதிர்பட்டவர் பெரியப்பா.
‘இன்ஸ்பெக்டர் ஷங்கர் பையனா?’ சுவாமிநாதன் யோசனையுடன் கேட்க
‘ஆமாம்’ என்றபடி அவர் யாரென தெரிந்துக்கொண்டு அவரை வீட்டுக்குள் வரவேற்றார் பெரியப்பா. அங்கே இருந்தனர் ஷங்கரும், லோசனாவும்.
‘ஓ... ஹரிஷ் அப்பாவா?’ என்றபடியே கால் மேல் கால் போட்டு அமர்ந்தார் லோசனா.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலெல்லாம் நின்றதே இல்லை. சுவாமிநாதன். உடல் பற்றி எறிவது போல் ஒரு உணர்வு அவருக்கு. ஆனாலும் மகன் என்ன செய்தான்? எதற்காக இந்த கைது நடவடிக்கை? எதுவுமே புரியாத நிலையில் அங்கே நிற்கவே வேண்டியிருந்தது அவருக்கு.
‘மிஸ்டர் ஷங்கர் என் பையன் இப்போ எங்கே இருக்கான் அதை முதலிலே சொல்லுங்க’ என்றார் சற்றே நிதானமாக. என்ன பண்ணான்னு நீங்க அவனை அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கீங்க?
‘ம்? அவனுக்கு ரொம்ப திமிருன்னு அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கான்’ இது லோசனா. சுள்ளென்று பொங்கியது சுவாமிநாதனுக்கு. இருப்பினும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு ஷங்கரின் பக்கம் திரும்பினார்
‘மிஸ்டர் ஷங்கர் நீங்க யாருகிட்டே விளையாடுறீங்கன்னு தெரியுமா?’ என்றார் சற்றே சூடாக. ‘இப்போ முதல்லே என் பையன் எங்கேன்னு சொல்லுங்க’
‘நீங்கதான் அவ்வளவு பெரிய ஆளாச்சே. நீங்களே அவன் எங்கேன்னு கண்டு பிடியுங்களேன்’ இதுவும் லோசனாதான். அவர் சொல்ல ஷங்கர் சிரிக்க எழுந்தே விட்டார் சுவாமிநாதன்.
‘சரி நான் பார்த்துக்கறேன்.’ சில நொடிகள் எல்லார் மீதும் பார்வையை கனல் பார்வையை சுழற்றிவிட்டு நகர்ந்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே ஹரிஷ் இருக்குமிடத்தை அடைந்திருந்தார் சுவாமிநாதன். உடலில் அங்கங்கே ரத்தம் வழிய கிடந்த மகனை பார்த்து துடித்துப்போனார் தந்தை. அங்கே இருந்த காவலர்கள் அனைவரும் இவர்களையே ஏளன பார்வை பார்த்திருக்க என்றுமே அழாத மனிதரின் கண்களில் கண்ணீர் மழை.
‘என்னடா? என்னடா பண்ணே? குரல் நடுங்க கேட்டார் அப்பா.
‘நான் ஒண்ணும் பண்ணலைப்பா’ என்றான் பேசவே முடியாத காற்றாக ஒலித்த குரலில். சில நொடிகளே இருந்தது அந்த தவிப்பு. அதன் பின் நிமிர்ந்தார் மனிதர்.
‘கவலை படாதே. கவலையே படாதே. அப்பா இருக்கேன்’ என்றவர் அதன் பின் மடமடவென செயல்பட்டார். பொழுது விடிந்து சில மணி நேரங்களில் வெளியே வந்திருந்தான் ஹரிஷ். அவன் வந்த பிறகுதான் நடந்தது முழுவதும் தெரிந்துக்கொண்டார் தந்தை.
நிஜமாகவே அந்த பந்தை அடித்தவனை தேடிப்பிடித்தார்.. அவன் தந்தை தொழில் முறையில் இவருக்கு நல்ல நண்பர் என்பது கொஞ்சம் இவருக்கு உதவியாகவே இருந்தது. சில மாதங்களில் ரகுநந்தனுக்கு நடந்தது ஒரு விபத்து என நிரூபணம் ஆனது. ஹரிஷ் மீது எந்த தவறும் இல்லை என்பதும் ஊர்ஜிதம் ஆனது.
அதன் பின் துவக்கினார் ஷங்கர் மீதான தாக்குதலை. ஓட ஓட விரட்டினார் அவனை. கிட்டத்தட்ட ஒரு வருடம் அவனை பணி இடை நீக்கத்திலேயே வைத்திருந்தார். அதன் பின் அவரது மனைவியின் மரணம் அவரை கொஞ்சம் தளர்த்தி இருந்தது. ஷங்கர் மீதிருந்து அவரது பார்வை மெல்ல விலகியது.
என்னதான் இருந்தாலும் ஹரிஷ் மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் இருந்தது அவருக்கு மிகப்பெரிய அவமானம். ஏன் அவனுக்குமே. அதன் பின் கல்லூரியை விட்டும் அனுப்பபட்டான். கிரிக்கெட் ஒன்றே தனது பாதை என தீர்மானித்துக்கொண்டான்.
ஆனால் அதில் தந்தைக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. கிரிக்கெட் வேண்டவே வேண்டாம் என்றார். அதே நேரத்தில் அவரது தொழில்களில் இணைந்துக்கொள்ளவும் இவனுக்கு மனமில்லை. இருவருக்கும் நிறையவே கருத்து வேற்றுமைகள். சில நாட்கள் இருவருக்கும் இடையில் .பேச்சு வார்த்தைகள் இல்லாத நிலை
இதையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய அடையாளத்தை தனக்கென உருவாக்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கிறான் ஹரிஷ். இதோ அவனவள் அவனுக்காக அவனை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருகிறாள்.