"ஐ லவ் யூ !" 'ஐயோ இது உண்மையில் காதலை வெளிப்படுத்தும் வார்த்தை தான் போல' என எண்ணிய அமேலியா அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்தாள்.
காபியை அருந்தியபடி வசந்த் முன்னே செல்ல அமேலியா பின் தொடர்ந்தாள். அமேலியா ஐ லவ் யூ சொன்னதை எண்ணி எண்ணி சிரித்தான் வசந்த்.
அமேலியாவின் எண்ணமோ வேறு மாதிரியாக இருந்தது. 'வசந்தை எதற்கு அந்த வயதானவள் காதல் செய்ய வேண்டும். எதற்காக வசந்த் நம்மிடம் லவ் யூ சொல்ல வேண்டும். ஐயோ!' என தலையை பிடித்துக்கொண்டாள் அமேலியா.
"அமேலியா இங்க வா"
வசந்த் புல் தரையில் அமர்ந்தான். அமேலியா அவனோடு சேர்ந்து அமர கூச்சப்பட்டாள்.
"உட்காரு"
அமேலியா அமர்ந்தாள்.
"எனக்கு உன் உதவி வேணும்"
அமேலியா விழித்தாள்.
தான் கொண்டு வந்த நோட்டு புத்தகத்தையும் எழுதுகோலையும் அவளிடம் கொடுத்தான். அமேலியா தயாரானாள்.
"அதோ ஒரு சின்ன பையன் ஓடுறான் பாரு. அவனைப் போலவே ஒரு உருவத்தை வரை".
அமேலியா வரையத் தொடங்கினாள். ரொம்ப சிரமப்படாமல் மேலோட்டமாக வரைந்தாள். ஆனாலும் ஓவியம் அற்புதமாக இருந்தது.
"நீ ஓவியத்துல வரைஞ்ச இந்த பையனுக்கு சாக்லேட்னா உயிர்" .என சாக்லேட்டையும் ஓவியத்தையும் மாறி மாறி காட்டினான் வசந்த்.
அமேலியா புரிந்து கொண்டாள். பின்னர், தன் கற்பனையை அமேலியாவிற்கு புரியும்படி மிகவும் சிரமப்பட்டு சொல்ல, அமேலியா ஓவியமாக வரைந்தாள். இறுதியாக ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டது.
ஓவியங்களை ஒருமுறை புரட்டிய வசந்த் மகிழ்ச்சியடைந்தான், "சபாஷ் அமேலியா! சபாஷ்! அட்டகாசமா வரைஞ்சிருக்க. இது போதும்" என சந்தோசம் தாங்க முடியாமல் அவளது கன்னங்களை கிள்ளி, "ஐ லவ் யூ சோ மச்" என்றான்.
அமேலியா அதிர்ச்சியடைந்து ஆத்திரமும் அழுகையுமாக அங்கிருந்து எழுந்து சென்றாள். தான் தவறு செய்துவிட்டதாக வசந்த் நொந்துகொண்டான்.
காலை சிற்றுண்டி முடித்து எல்லோரும் சினிமா சென்றனர். பெரிய திரையில் இருளில் படத்தைக் கண்டது அமேலியாவிற்கு புதுமையாக இருந்தாலும் ஏனோ அவள் மகிழ்ச்சியடையவில்லை.
வசந்தும் அமேலியாவும் விலகியே இருந்தனர். அதன் பின் சில இடங்கள் சென்றுவிட்டு மாலையில் ரிஸார்ட் வந்து சேர்ந்தனர்.
"காலையில கிளம்பணும்" என்றான் ஜான்.
"இப்போவே போகலாம்" என்றான் வசந்த்.
"இப்போவா? இதென்ன பக்கத்துக்கு தெருவுக்கு போய்ட்டு வர சமாச்சாரமா? உடம்பெல்லாம் வலிக்குது. கொஞ்சம் ரெஸ்ட் தேவை"
"எனக்கு நாளைக்கு முக்கியமான வேலையிருக்கு ஜான்"
"இதை முன்னாடியே சொல்லியிருந்தா இந்த திட்டத்தையே கான்செல் பண்ணிருக்கலாமே"
அமேலியா தனிமையில் அமர்ந்து ஓவியம் வரைந்துகொண்டிருந்தாள்.
"நீங்க கிளம்புறீங்களா இல்லையா?"
"சரி சரி போகலாம்" என்றாள் ஜெஸிகா.
துணிமணிகள் பெட்டியினுள் அடுக்கி வைக்கப்பட்டு பயணத்தை துவங்கினர்.
ஜெஸிகாவின் மேல் தூங்கி தூங்கி விழுந்தான் ஜான்.
"டேய்! நீ அடி வாங்க போற" என சகட்டு மேனிக்கு திட்டினாள் ஜெஸிகா.
சரியாக நள்ளிரவை தாண்டி ஜானின் இருப்பிடத்திற்கு சற்று அருகில் வண்டி நின்றது. ஜான் இறங்கினான், "இனி இது போன்ற வாய்ப்பு எப்போ வரும்னு தெரியல. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அது உங்களால தான் ஜெஸிகா. கோபப்படுத்திருந்தா சாரி"
"இட்ஸ் ஓகே"
வண்டி புறப்பட்டது. அமேலியா சாலையையே வெறித்துக்கொண்டிருந்தாள்.
"வசந்த்"
"சொல்லு ஜெஸ்ஸி"
"நீ இவளை லவ் பண்ணுறியா"
வசந்த் மௌனமாக இருந்தான்.
"ஏன் பேசாம அமைதியா இருக்க?"
"என்ன சொல்லுறதுனு தெரியல"
"இந்த காதல் நிறைவேறும்னு நீ நினைக்குறியா?"
வசந்த் அமேலியாவை நோக்கினான். அவளும் விழியால் சந்தித்தாள்.
"எப்படி போகுதோ அப்படி போகட்டும்"
"நான் என்ன சொல்லுறேன்னா..."
"இதுக்கு மேல இந்த விஷயத்தை பேச வேணா"
ஜெஸிகா அமைதியானாள். ஜெஸிகாவின் இருப்பிடம் வந்ததும் இறங்கினாள்.
"வசந்த் ஒண்ணு மட்டும் சொல்லிடுறேன். நாம நினைக்குற மாதிரி வாழ்க்கை அமையாது" என்று கூறிவிட்டு வேகமாய் நடந்தாள்.
தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் வசந்த். அமேலியா உறங்கி விட்டிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த புத்தகம் கீழே விழுந்தது. வசந்த் காரை ஓட்டிக்கொண்டே புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்த்தான்.
வேகமாக சென்ற கார் நிலைதடுமாறி கோர சத்தத்துடன் நின்றது.
நடுத்தர வயதுடைய ஆணிற்கு அருகில் மணக்கோலத்தில் அமேலியா நின்று கொண்டிருந்தாள். அமேலியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா!!!
தொடரும்...
{kunena_discuss:983}