மறுநாள் காலை அம்மாவிடம் சொல்லி விட்டு தனது ஸ்கூட்டியை கிளம்பிக் கொண்டு பறந்தாள். அப்படியும் வாகன நெரிசலில், ஆசிரமத்தை அடைய சிறிது தாமதமானது. அதற்குள் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் வந்திருந்தனர்.
“அம்மா” என்று அழைத்தபடி ஆசிரம தலைவியில் அறையில் நுழைந்த பொழுது, உள்ளே வயதான ஒரு தம்பதிகள், பணக்கார களையுடன், ஆசிரம தலைவி அணிமலருடன் பேசிக் கொண்டு இருந்தனர்.
“வா பூமி” என்றழைத்து அவர்களுக்கு பூமியை அறிமுகப் படுத்தி வைத்தார் அணிமலர். “இன்ஜினியரிங் படித்து விட்டு, வேலைக்குப் போகாமல் நமது ஆசிரம வேலைகளை பார்த்துக் கொள்கிறாள்.” என்று பெருமையாக கூறினார்.
“இவர்கள் தான் ஆதித்யா குருப் ஆஃப் கம்பெனியின் சேர்மன், மிஸ்டர் ஆதித்யா சங்கர். இவங்க அவரது மனைவி குழல்மொழி. இவர்கள் நிறுவனம் தான் நம் ஆசிரமத்தை தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.” எனக் கூறி முடித்தார்.
அவர்களைப் பார்த்தால் வயதானவர்கலாகத் தெரிந்தது. அப்படி என்றால் அந்த ஆதித்யா இவர்களின் பேரனாக இருக்கக் கூடும். இப்படி ஒரு தாத்தா, பாட்டிக்கு அப்படி ஒரு பேரனா? என்று யோசித்தவாறே அவர்களுக்கு வணக்கம் கூறினாள் பூமி.
அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறே, “ரொம்ப ரொம்ப நன்றி. இங்க உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் ஒரு நல்ல எதிர் காலம் வந்து விட்டதை நினைத்தால் ரொம்ப மகிழச்சியா இருக்கு, எல்லா புண்ணியமும் உங்களுக்குத் தான்” என்று ஆத்மார்த்தமாகக் கூறினாள் பூமி.
“எங்களது பேரனுக்குத் தான் எல்லா புண்ணியமும் போகும்மா. இது எல்லாம் அவனுடையா ஏற்ப்பாடு தான்.” என்று பேரனைப் பற்றி பெருமையாகக் கூறினார் குழல்மொழி.
அவருடன் இணைந்து சங்கரும், “இந்த காலத்தில் சிறியவர்கள் தான் எங்களுக்கு மேல் நல்ல காரியங்கள் செய்கிறீர்கள். உன்னைப் பற்றி இப்பொழுது தான் அணிமலர் பெருமையாக சொல்லிக் கொண்டு இருந்தார். நல்லா இரும்மா.” என்று மனதார வாழ்த்தினார்.
“வாங்க ஆசிரமத்தை சுற்றிப் பார்த்து வரலாம்.” என்று அழைத்தார் அணிமலர்.
அனைவரோடும் வெளியே வந்து வராண்டாவில் நடக்கும் பொழுது, அங்கு இருந்த மாற்றங்களை கவனித்தாள் பூமி. ஒரு படி இருக்கும் இடங்களில் எல்லாம் சரிவாக இருக்கும்படி பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை இந்த வயதானவர்கள் நடப்பதர்காகவா? பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் இவர்கள் மிக வயதானவர்களாகவும் தெரியவில்லை. நடப்பதும் இருவரும் விரைவாகவே நடக்கின்றனர். என்று யோசித்துக் கொண்டிருத்த பொழுதே......
“நம்ம ஆதியும் வந்து விட்டான்.” என்று மகிழ்ச்சியாகக் கூறினார் பாட்டி குழல்மொழி.
பூமிஜா திரும்பிப் பார்த்த பொழுது அங்கு, வீல் சேரில் ஆதித்யா விக்னேஷ் வந்து கொண்டிருந்தான். அதில் அவனைப் பார்த்ததும், ஒரு கணம் மனம் பாரமாகிப் போனது என்னவோ உண்மை தான். உதவிக்கு யாரும் இல்லாமல் அவனே அதனை இயக்கியபடி வந்து கொண்டிருந்தான். இதற்கு முன் பார்த்த இரு தினங்களிலும், அவனை டேபிளுக்கு பின்பாக பார்த்திருந்ததாலும், அவனது தன்னபிக்கையான பார்வை, மற்றும் பேச்சினாலும், அவனது குறை தெரியவே இல்லை பூமிக்கு.
ஆதி அருகில் வந்ததும், அணிமலர் தன்னை அவனுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டு, பூமியையும், அவனுக்கு அறிமுகப் படுத்தினார். அவனும் அவருக்கு ஒரு புன்னைகையை அளித்தபடி, பூமியை யோசனையுடன் நோக்கினான்.
அனைவரும் ஒன்றாக ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர். ஆசிரமம் பெரிய இடமாகவே இருந்தது. அதிக கட்டிடங்களாக இல்லாமல், மரங்கள், செடிகள் என நிறைந்து இருந்தது. அதிலும் வழிகளின் இரு ஓரத்தில் மட்டும் பூச் செடிகலாகவும், உட்புறம் அமைந்து இருந்த செடிகள் எல்லாம் காய்கறி செடிகளாகவும் இருந்தது.
செடிகளைப் பார்த்ததும் ஆதியின் முகத்தில் தோன்றிய புன்னகையைப் பார்த்து, “எல்லாம் நம் பூமியின் ஏற்ப்பாடு தான் தம்பி. பிள்ளைகளையும் நன்கு பழக்கி இருக்கிறாள். அவர்களே தினமும் காலையில் தோட்டத்தில் ஒரு மணி நேரம் வேலை செய்வார்கள்.” என்று பெருமை பொங்க கூறினார் அணிமலர்.
“அவங்க தான் நல்லா தண்ணி ஊத்துவாங்களே” என்றான் ஆதி. அன்று தன் மீது ஓட்டலில், அவள் தண்ணீர் ஊற்றிச் சென்றதை நினைவு கூர்ந்து.
“என்ன” என்று மற்ற மூவரும் புரியாமல் பார்க்க.... பூமிக்கு மட்டும் புரிந்தது அவன் என்ன கூறுகிறான் என்று.
“செடிகளைப் பார்த்தாலே தெரிகிறது. நீர் நல்லா ஊற்றி இருக்காங்கன்னு. அதைத் தான் அப்படி கூறினேன்” என்று சமாளித்தான் ஆதி.
அதன் பின் வேலைகள் மடமடவென்று நடந்தது. அவனது கம்பெனி வக்கீலும், ஆடிட்டரும் வந்து எல்லா பேப்பர்களிலும் கையெழுத்து இடும் வேலை முடிந்தது. பிள்ளைகள் படிப்பிற்கு ஆசிரியார்கள் அங்கே வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அணிமலர் மிக நிம்மதி அடைந்தார்.