யாழிசை சிறுவயதில்இருந்து அவர்களின் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் வெள்ளையம்மாளுடன் சென்றிருந்தபோது அங்கு ஆடி தேரோட்டத்தை முன்னிட்டு அதன் முதல்நாள் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்தவள் மறுநாள் வெள்ளையம்மாளிடம் அங்கு தான் கண்ட பரதத்தை அபிநயம் பிடித்து காண்பித்தாள். அவளின் நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தை பார்த்த வெள்ளையம்மா வீட்டிற்கே ஆசிரியரை கூட்டிக்கொண்டுவந்து அவளை பரதம் பயில வைத்தாள்.
அருகில் உள்ள பால்வாடியில் கணேசப்பிள்ளை தனது மகளை சேர்த்துவிட்டார். ஆனால் சீருடை அணிந்து ஸ்கூல் பஸ்ஸில் செல்பவர்களை பார்த்து அதுபோல் தானும் போகணும் என்ற மகளை கணேசப்பிள்ளை அதற்கெல்லாம் நிறைய பணம் கட்டனும் நீ இங்கேயே படி. படிகின்ற பிள்ளை எங்கு படித்தாலும் நன்றாக படிக்கும் என்று கூறிவிட்டார்
அய்யாவின் வீட்டிற்கு போயிருந்த யாழியின் வருத்தம் தோய்ந்த முகத்தை பார்த்து ஏன் இன்னைக்கு ரோஜாப்பூ முகம் வாடியிருக்கு என்று கேட்ட வானவராயரிடம் தனது ஆசையை யாழிசை கூறினாள். கணேசப்பிள்ளையை கூப்பிட்டவர் அவளின் படிப்பு செலவை தான் ஏற்பதாக தெரிவித்தார். யாழிசையை அவள் ஆசைப்பட்ட பள்ளியில் உடனே சேர்த்துவிடும் படி கூறிவிட்டார்.
அதிலிருந்து இன்றுவரை யாழிசைக்கு எது நல்லது கெட்டது என்றாலும் முன் நின்று வானவராயர் செய்தார். அதேபோல் தனது அய்யாவின் வார்த்தையை தட்டாமல் அவரது குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவு யாழிசையும் அய்யா குடும்பத்தின்மேல் அன்புகொண்டவளாக வளர்ந்து நிற்கிறாள்..
அன்று காலையில் எழுந்ததில் இருந்து யாழிசை அவளது பாட்டி ருக்மணி சொல்வதையெல்லாம் எந்த மறுப்பும் இல்லாமல் செய்துகொண்டிருந்தால் என்னைக்கும் இல்லாத அதிசயமாய் இன்றைக்கு அவரின் பேத்தி யாழிசை தன்னை வம்பிழுத்து கோபப்பட வைக்காமல் சமத்துபெண்ணை போல வேஷம் கட்டிய யாழிசையை யோசனையுடனே பார்த்துக்கொண்டே உளுந்தங்களியை பரிமாறினாள். தனது பாட்டி தான் போடும் வேஷத்தை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதை உணர்ந்தவள் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி ஈ.....என்று சிரித்துவைத்தாள்.
என்ன பாப்பா இப்படி அசட்டு சிரிப்பு சிரிச்சு வைக்கிற பொட்டபுள்ள இப்படியா சிரிக்கிறது? என்றார்.
உடனே கப்பென்று இளிப்பை நிறுத்தியவள் சரிபாட்டி என்றாள்.
அதற்குமேல் அவளின் நடிப்பை பொருத்துக்கொள்ள முடியாத ருக்மணி பாட்டி , ஆத்தீ உன் இந்த பம்மாத்தை எல்லாம் நான் நம்பிடமாட்டேன் பாப்பா .என்ன சோலி என்னால உனக்கு ஆகணும் அதை முதலில் சொல்லு என்றார்..
ருக்மணி பாட்டி அவ்வாறு சொன்னதும் கண்டுபுடுச்சுடுவியே நீ பெரிய சி ஐ டி ஆகவேண்டியவ தாத்தாவ கட்டிகிட்டதுனால உன்ன வீட்டோடையே இருக்கவச்சுட்டாரு என்றாள். உடனே அவள் பாட்டி கோபமாக வாய்திறக்கும் முன்பே, ஓகே.. ஓகே.... உன் புருஷனை நான் எதுவும் சொல்லல இப்போ என்னோட தேவையை கேளு என்றவள்,
இன்னைக்கு ஞாயிற்றுகிழமை தானே , நான் ஞாயிற்று கிழமை அதுவுமா ஆறுமணிக்கே எழுந்து குளிச்சு சாமிகும்பிட்டுட்டு உனக்கு சமையலில் உதவிசெய்ய வந்து நீ என்னை எப்பவும் போல் பாப்பா என்று கூப்பிடுவதற்கு கோபம் வந்தாலும் பொறுத்துட்டு உன் கொண்டையை தட்டிவிட்டு அவிழ்க்காமல் எப்படி சமத்துப்பிள்ளயாக இருக்கிறேன் அதே போல் நீயும் சமத்துப் பாட்டியா இன்னைக்கு மதியம் என் பிரண்டு சந்தியா அவள் வீட்டுக்கு என்னை கூப்பிட வரும்போது அப்பாட்ட என்னை அவள் கூட விடச்சொல்லி நீ ரெகமென்ட் பண்ணனும் சரியா பாட்டி என்றாள் யாழிசை.
அவள் கூறியதும் ருக்மணி பாட்டி ,இது என்ன பாப்பா புதுப்பழக்கம், சிநேகிதபுள்ள வீட்டிற்கெல்லாம் போகுறேனு கேக்குறது. அதுவும் நீ சொல்ற அந்த சந்தியான்ற புள்ளயோட அப்பா அமைச்சருன்னு என்கிட்டே சொல்லியிருக்கியே, அரசியல்வாதிங்க வீட்டுக்கெல்லாம் பொட்டபிள்ளையை எப்படி அனுப்புறது? வேனாண்டியம்மா... நீ எங்கயும் போகவேண்டாம். உன் அப்பாக்கும் வானவராயரு அய்யா வீட்டுக்கும் நான்தான் எதுனாலும் பதில் சொல்லனும். அதுவும் இல்லாம நீ வருகிற வரை என்னால நிம்மதியா வீட்டில இருக்க முடியாதுடியம்மா. காலேஜுக்கு போனோமா படிச்சோமான்னு இருக்கணும். இப்படி ஊர் சுத்துற நினைப்பு எல்லாம் உனக்கு வரக்கூடாது பாப்பா என்றார் ருக்மணி பாட்டி.
தனது பாட்டி கூறியதை கேட்ட யாழிசை முகம் சுருங்கிப்போனது. பாட்டி நான் இதுவரை வானவராயர் அய்யா வீட்டைத்தவிர இப்படி எங்கயாவது போறேன்னு உன்கிட்ட கேட்டிருக்கேனா? சந்தியா அம்மா எவ்வளவு நல்லவங்க தெரியுமா? ஒவ்வொரு தடவையும் அவங்க காலேஜ் ஆனுவல்டேக்கு வந்துடுவாங்க நான் பரதநாட்டியம் ஆடுறதை எவ்வளவு ரசிச்சு பார்ப்பாங்க தெரியுமா? நிறைய தடவை சந்தியா அவங்க அம்மா என்னை அவங்க வீட்டிற்கு கூப்பிட்டுக்கொண்டு வரச்சொல்லி சொன்னதா கூப்பிடுவா. நான்தான் ஏதாவது காரணத்தை சொல்லி போகாமல் இருந்துடுவேன்.