தொடர்கதை - அன்பின் அழகே - 15 - ஸ்ரீ
“வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்
அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள்
பொய்யாய் போனதிங்கே
ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு”
அபினவ் கூறிச் சென்றது மண்டைக்குள் வண்டாய் குடைந்து கொண்டிருக்க அப்படியே படுத்தவள் தன்னை அறியாமல் உறங்கியும் போனாள்.
மாலை எழுந்தவளுக்கு அவனே காபியை எடுத்து வந்து கொடுத்து அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்திருந்தான்.
“இப்போ போலாமா முடியுமா இல்ல டயர்டா இருக்கா?”
“இவன் சொன்ன விஷயத்துக்கு டயர்டா இருந்தா மட்டும் படுத்து ரெஸ்ட் எடுத்துட முடியுமா?எத்தனை பெரிய விஷயத்தை சொல்லிட்டு இப்படி ஹாயா கேக்குறான்.எங்க போக போறோம் அந்த குழந்தை யாரா இருக்கும்?!!”,இப்படி ஆயிரம் கேள்விகள் தன்னுள் போட்டி போட முகத்தில் ஒன்றையும் காட்டாமல் எழுந்து தயாராகச் சென்றாள்.
இருவரும் அறையிலிருந்து வெளியே வந்த நேரம் சாரதா கவலையாய் சோபாவில் அமர்ந்திருந்தவர் அவர்களிடம் திரும்பி,
“டேய் அபினா வேண்டாம் டா கொஞ்சம் பொறுமையா இரேன்.அவ இருக்குற நிலைமைக்கு ஏன் அவளை மேல மேல குழப்புற..”
“ம்மா தெளிவா இருக்குறவங்கள தான் குழப்ப முடியும் இவ குழப்பத்துக்குள்ளேயே முங்கி நீச்சல் அடிச்சுட்டு இருக்கா..அப்படி இருக்கும் போது நா சொல்றதை கேட்டு தெளிவு ஆகுறதுக்கு தான் வாய்ப்பு அதிகம் வரேன் மா..”,என்றவன் காருக்குச் செல்ல அமைதியாய் அவனை பின் தொடர்ந்தாள்.
அரைமணி நேரப் பயணம் கார் சென்று அந்த ஆசிரமத்து வாசலில் நின்றது.திஷானிக்கோ மனம் தாறுமாறாய் எகிறிக் கொண்டிருந்தது.காரை விட்டு இறங்கியவன் அவளை கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.
அங்கு புல்வெளியின் மேல் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமரச் செய்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனைப் பார்த்து சிரித்தவாறே நடுத்தர வயது பெண் ஒருவர் வந்தார்.
“வாங்க சார்..எப்படியிருக்கீங்க.ரொம்ப நாள் ஆச்சே வந்து..இவங்க தான் உங்க வைஃப்பா லட்சணமா இருக்காங்க..”
“அக்கா கொஞ்சம் மூச்சு விட்டுக் கோங்க..நீங்களே இவ்ளோ பேசினா அந்த வாண்டு என்னை ஒரு வழி ஆக்கிடுவாளே..எங்க இருக்கா கூட்டிட்டு வரீங்களா?”
“ம்ம் இதோ வரேன் தம்பி..”,என்றவர் நகர அவளருகில் அமர்ந்தவன் ஒன்றும் பேசாமல் எங்கோ இலக்கின்றி வெறித்தான்.
அவளுமே மனம் ஒரு நிலையிலில்லாமல் சுற்றும் முற்றும் நடப்பது மறந்து அமர்ந்திருக்க,”அப்பா!!”என்ற அழைப்பில் இருவருமே நினைவிற்கு வந்தனர்.
குரல் வந்த திசையில் பார்த்த திஷானியோ கண்ணிமைக்க மறந்து அமர்ந்திருந்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
5-6 வயது மதிக்கதக்க பெண் குழந்தை வீல் சேரில் அமர்ந்திருக்க அந்த பெண்மணி அவளை அழைத்து வந்தார்.
திஷானிக்கு சட்டென கண்களில் நீர்கோர்த்துக் கொள்ள அபினவ் மெதுவாய் அதட்டினான்.
“திஷாம்மா அவ முன்னாடி அழாத..ப்ளீஸ்”,என்றவன் எழுந்து சென்று குழந்தையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.
“ஹலோ அகல்யா பேபி..எப்படியிருக்கீங்க?”
“போ ப்பா நா பேச மாட்டேன் உன்கூட..என்னை பாக்க வரவேயில்லை..என்ன மறந்துட்ட தான?”
“என் செல்ல பேபியை நா எப்படி டா மறப்பேன்.அப்பா தான் சொன்னேன்ல அம்மாவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரபோறேன்.கொஞ்ச நாள் வர முடியாதுனு..இப்போ பாரு அம்மாவும் உன்னை பார்க்க ஓடி வந்துட்டாங்க..”,என திரும்பி திஷானியை கண் ஜாடை காட்டி அழைக்க அவள் மெதுவாய் எழுந்து வந்தாள்.
அவளை பார்த்த அந்த பிஞ்சு முகத்தில் அத்தனை சந்தோஷம்.அவளை நோக்கி தன் பிஞ்சு கரங்களை நீட்ட மெதுவாய் தன் கையை இணைத்துக் கொண்டாள்.
“ம்மா எப்படியிருக்கீங்க..அப்பா உங்களை பத்தி சொல்லிருக்காரு..ரொம்ப ரொம்ப அழகா இருக்க தெரியுமா..இனி அப்பா விட்டு எங்கேயும் போகாத சரியா..அப்பா பாவம் தான நானும் இங்க இருக்கேன் நீயும் வீட்டுக்கு வரலனா அப்பா தனியா இருப்பாங்க தான..சரியா..”