தனது கேர் ப்ரீ வாழ்க்கைப் பற்றியும் அவனது கொள்கை பற்றியும் சொன்னவன்
“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக்கெடும்”
என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்ட சுருக் என்று ஹரிணியின் மனதில் தைத்தது.
நீண்ட நேரம் சிந்தனையில் இருந்தாள் அவள்.
அனைவரும் உணவு உண்டு உறங்கச் சென்ற பின் “ஹரி ரஞ்சனி நம்பர் குடேன்” என அவள் கேட்கவும் அவனுக்கோ ஆச்சரியம்.
அவனே ரஞ்சனிக்கு டயல் செய்து ஹரிணியிடம் தந்தான்.
எதிர்முனையில் “ஹலோ பிரின்ஸ் சொல்லு” என ரஞ்சனி சொல்ல
“ரஞ்சனி, ஹரிணி பேசறேன்” என்றதும் சிறிது நேரம் மௌனமாக இருந்தவள் விசும்பினாள்.
“காலேஜ் சேர்ந்த போது தான் அழுமூஞ்சியா இருந்த. இப்போவுமா. சும்மா தான் போன் செய்தேன், முரளி எப்படி இருக்கான்” என்று பொதுவாக நலம் விசாரித்தாள்.
“ஐ ஆம் சாரி ரஞ்சனி. நீ அப்போ செய்தது சரியானது இல்ல தான், இருந்தாலும் தவறை நீ உணர்ந்து மன்னிப்பு கேட்ட பின்பும் அதை நான் அலட்சியம் செய்தது என் தவறு” அவள் மன்னிப்புக் கேட்கவும் ஹர்ஷா முகத்தில் சந்தோஷம்.
“ரகுக்கு தாங்க்ஸ் சொல்லணும் ஹரி, ஹி ஓபன்ட் மை ஐஸ்” அவள் சொல்லிவிட்டு செல்ல ஹர்ஷாவின் மனதில் தீவிர சிந்தனைகள்.
மறுநாள் அனைவரும் ஊருக்குக் கிளம்ப தயாராகினர்.
“நான் எல்லோரையும் ஏர்போர்ட்ல டிராப் செய்துட்டு அப்படியே கோடை போறேன். அம்மா அப்பாவை பார்த்தும் நாளாச்சு” ஆர்சி சொல்ல பூர்வியும் ஸ்வாதியும் அவர்களின் பெட்டிகளை தயார் செய்து எடுத்து வரச் சென்றனர்.
ஹர்ஷா சாரதாவிடம் உரையாடிக் கொண்டிருக்க, வாசல் நிலைப்படியில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் ஹரிணி.
“வைதேகி” கீழ் படியில் நின்று கொண்டு அவளை மெல்ல அழைத்தான் ஆர்சி.
அவள் திடுக்கிட்டு அவனை நோக்கிக் குனிந்தாள். அவளை வைதேகி என்று யாருமே அழைத்தது இல்லை.
“கிளம்பறேன்”
“ம்ம்” என தலையாட்டியவள், “உங்க அம்மா அப்பாவோட நலம் விசாரிச்சேன்னு சொல்லுங்க” என்றாள் மரியாதை நிமித்தமாக.
அவனது விழிகள் மின்னலாய் பளிச்சிட்டதையும், அவன் மனதில் குளிர் சாரல் வீசியதையும் அறியாதவள் நிலைப்படியில் சாய்ந்தவாறே நின்றிருக்க,
ஒரு படி மேலே ஏறி அவளது முகத்திற்கு நேராக வந்து நின்றவன்,
“உன்னோட பேஷன்ட்டா இருந்த அந்த சில நிமிடங்கள் என் லைப்லேயே ரொம்ப அழகான தருணம். தாங்க்ஸ் வைதேகி” மனதாரச் சொன்னான்.
அவனது ஆழ்ந்த குரலில் விழிகள் விரிய, லேசான புன்னகை இதழ்களில் பூக்க அவனையே பார்த்திருந்தாள்.
ஒரு நொடி அவள் விழிகளுக்குள் தனது பார்வையால் ஊடுருவியவன் வாய் வார்த்தையாக வேறேதும் சொல்லாமல் பெரியப் புன்னகையுடன் கையசைத்து விடை பெற்றான்.
மற்றவர் அனைவரும் விடைபெற கையசைத்தவள், “என்னவோ சொல்லிச் சென்றானே அவன், என்ன அது” என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
நாளடைவில் தனது பணியில் அவள் மூழ்கி விட்டிருந்த போதும் ஹர்ஷா அவனைப் பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் அந்தப் பார்வையும் அதில் புதிராய் பொதிந்திருந்த செய்தியும் அவள் எண்ணத்தில் மீண்டும் குடி புகுந்து கொள்வதும், தற்காலிகமாக அவள் அதை ஒதுக்கி வைப்பதும் வாடிக்கையாகிப் போனது. புதிருக்கான விடையை எப்போது அவள் தெரிந்து கொள்வாள் என்று காலம் தான் சொல்ல வேண்டும்.
அன்று சென்னையில் வானம் சற்று மேகமூட்டமாய் இருந்தது. மழை வருமா என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.
“செர்ரி, பிரவீன் பிரணவ்க்கு உதவியாக நான் ஹாஸ்பிடலைப் பார்த்துக் கொள்கிறேன். அர்ஷுவும் பாப்பாவும் மாமா கூட டைம் ஸ்பென்ட் செய்த மாதிரியும் இருக்கும். நீங்க ஒன் வீக் ப்ரேக் எடுத்துட்டு உங்க இனிமையான நினைவுகளை ரீவைண்ட் செய்ங்க”
இவர்களின் மருத்துவமனைக்கு நிறைய நன்கொடைகள் அளித்து உதவிகள் செய்த ஈஸ்வர் என்ற பெரியவர் தான் வர்ஷினியின் தந்தை என தெரிய வர பல வருட பிரிவிற்குப் பின் மகளும் தந்தையும் ஒன்றிணைந்திருந்தனர்.
கணேஷ் பொறுப்பேற்றுக் கொள்வதாய் சொல்லவும் சந்தோஷமாக ஒப்புக் கொண்ட ஹரிணியும் ஹர்ஷாவும் கல்லூரி வைர விழாவில் கலந்து கொள்ள ஒரு வாரம் முன்பே சென்னை வந்தடைந்தனர்.
ஹரிணியின் பெற்றோர் சுகீர்த்தியின் வீட்டிற்கு லண்டன் சென்றிருக்க, கல்யாணியை அவரது சொந்த ஊரில் சந்தித்து வந்தனர்.
டாக்டர் துரை, மீனலோசினி இருவரிடமும் ஆசி பெற்று முரளியையும் ரஞ்சனியையும் சந்திந்தனர். அவர்களும் வைர விழாவிற்கு வருவதாக கூறினர்.