சாளரத்தின் திரைச் சீலைகளுக்குப் பின் நின்று கொண்டவள் மெதுவாய் வெளியே எட்டிப் பார்த்தாள்.நான்கைந்து காவலாளிகள் முகத்தை மறைத்தவாறு யார் கண்ணிலும் படாமல் இருப்பதை உறுதி செய்தவாறே அவளது அறையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.
ஏனோ சிவகங்காவதிக்கு இதை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியாமல் போனது.சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தவளாய் மெதுவாய் அறையிலிருந்து வெளியே வந்தவள் அவர்கள் சென்ற திசையில் பின் தொடர ஆரம்பித்திருந்தாள்.
செல்லும் வழியில் கேடயத்தோடு கூடிய வாள் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்க தனது பாதுகாப்பிற்காய் அதை எடுத்துக் கொண்டாள்.எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்தவள் ஓரிடத்தில் ஒரு அறையின் வாயிலில் நால்வரும் நிற்பதைக் கண்டு அப்படியே மறைந்து நின்றாள்.
தங்களுக்குள் அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க அதற்குள் மறுபுறமாய் அந்த அறையை நெருங்கியவள் உள்ளே எட்டிப் பார்க்க ஒருநொடி அதிர்ந்து நின்றாள்.அங்கு உறங்கிக் கொண்டிருந்தது சிற்றரசர்களின் தலைவனாய் விளங்கும் இஷான் நஸீம்.
சூழ்நிலையை சுதாரித்திருந்தவள் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டாள்.அதற்குள் அங்கு நஸீமை நெருங்கியிருந்தவர்கள் அவனது படுக்கையைச் சுற்றி நின்றனர்.
நால்வரில் ஒருவன் தன் கையிலிருந்த கத்தியை ஓங்கிய நேரம்,”இஷான்!!”,என்று கூக்குரலிட்டவாறே சாளரத்தின் வழியே அறைக்குள் குதித்திருந்தாள் சிவகங்காவதி.
அவளின் சத்தத்தில் விழித்தவன் நிலையுணர்ந்து தன் வாளை எடுப்பதற்குள் ஒருவனின் கத்தி அவனின் இடது தோள்பட்டையை பதம் பார்த்திருந்தது.அதை கண்ட சிவகங்காவதி அந்த வீரனை தன் கையிலிருந்த வாள் கொண்டு வெட்டி வீழ்த்தியிருந்தாள்.
அவனின் கத்தியையும் தன் கையில் எடுத்துக் கொண்டவள் அடுத்தவனை நோக்கி தன் குறியை நகர்த்த நஸீமும் மற்ற இருவரையும் தாக்க ஆரம்பித்திருந்தான்.
சில நிமிடங்களில் மூவர் மடிந்திருக்க ஒருவனை மட்டும் தன் கத்தி முனையில் நிறுத்தியிருந்தாள் சிவகங்காவதி.நஸீம் அவன் கைகளை முறுக்கியவாறு அவன் வந்ததன் நோக்கத்தையும் அவனை அனுப்பியவர்களின் விவரங்களையும் பெற்றுக் கொண்டு அடுத்த நொடி அவனைக் கொன்று விட்டிருந்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
சிவகங்காவதி அயர்வாய் அப்படியே சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்து கொள்ள அவளருகில் காலை மடக்கியவாறு அமர்ந்தவன்,
“உனக்கேதும் காயமில்லையே?”
“இல்லை.உங்களுக்கு காயம்பட்ட இடத்தில் முதலில் மருந்து இட வேண்டும்.வாருங்கள் பாட்டியை எழுப்புகிறேன்.”
“இருக்கட்டும் ஒன்றும் பெரிதாய் இல்லை.நீ எப்படி இங்கு?”
“காலை முழுவதும் உறங்கிவிட்டதால் உறக்கம் வராமல் அமர்ந்திருந்தேன்.இவர்கள் நானிருந்த அறையை கடந்து வந்த நேரம் கேட்ட சத்தத்தில் மனம் உறுத்தவே அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
இது தங்களின் அறையென எண்ணவில்லை.யாரோ இருப்பார்கள் என்று எண்ணி உள்ளே பார்த்தால் தாங்கள் இருந்தீர்கள்.நிலைமையை உகிக்க முடிந்தது.இவர்கள் உங்களின் காவலர்கள் அல்ல.காவலர்கள் அடையாளத்தில் இருக்கும் அந்நிய தேசத்து ஒற்றர்கள் என்று.
அவர்கள் தங்களை கொல்ல வந்ததர்க்கான நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கொல்ல வந்த முறை தவறு.யாரையுமே முதுகில் குத்துவதென்பது நியாயமான வெற்றி ஆகாதல்லவா?!”
“உன் உதவிக்கு மிக்க நன்றி.நீ கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை.இன்னும் சில தினங்களில் எங்களின் பேரரசர் என்னை இப்பதியத்தின் ஆளுநராக அறிவிக்கவிருக்கிறார்.
இது முக்கியமான சில நபர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது.இவன் இப்போது கூறிய சிற்றரசனும் அதில் அடக்கம்.என் கதையை முடித்துவிட்டால் ஆளுநர் பதவி எந்தவித மறுயோசனையுமின்றி அவன் கரத்திற்குச் சென்றுவிடும்.”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“ஓ!!பணமும் பதவியும் தரும் மோகம் வாழ்வில் நியாய தர்மங்களையும் மனித உயிரின் மதிப்பையும் மறக்க வைத்துத்தான் விடுகிறது.”
“கேட்க வேண்டாம் என்று நினைத்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.நீ நினைத்திருந்தால் என்னை காப்பாற்றாமல் விட்டிருக்கலாம்.ஆனாலும்?”
மெதுவாய் மென்னகைத்தவள்,”தங்களின் மனவோட்டம் புரிகிறது.ஆனால் நான் உங்களை காப்பாற்றியதற்கு நிச்சயம் வலுவான காரணம் ஒன்று இருக்கிறது.தங்களால் எத்தனையோ இன்னல்களை அனுபவித்திருக்கிறேன் தான்,ஆனாலும் ஒரு நொடி கூட என் பெண்மையை பாதுகாக்க வேண்டிய கட்டாயமோ சிறு பயமோ எனக்கு எழுந்ததில்லை.
ஒரு பெண்ணாய் அந்நிய தேசத்தில் தனித்து இருப்பது என்பது ஒன்றும் அத்துனை எளிதல்லவே.யாராய் இருப்பினும் ஒரு பெண்ணின் மன வலிமையை குலைக்க வேண்டுமெனில் அவளது மானத்தையே ஆயுதமாய் பயன்படுத்தவர். அவ்வளவு ஏன் இந்த நொடி நான் எனது பாளையத்திற்கு சென்றால் கூட யாரும் நான் உத்தமி என்று கூறினால் நம்புவார்களா என்று தெரியவில்லை.
எங்கள் கடவுளான ராமபிரானே சீதாதேவியை மற்றவர்களுக்காக எனினும் புனிதத்தை நிருபிக்க நெருப்பில் இறங்க வைத்த பூமி தான் நம்முடையது.அப்படியிருக்க எந்த ஒரு சூழலிலும் என் மீது தவறான சிறு பார்வைகூட படாமல் பாதுகாப்பாய் உணர வைத்த ஒரு காரணம் போதுமே உங்களின் உயிரை நான் காப்பாற்றியதற்கு.”
அவள் கூறிய அனைத்தையும் கேட்டிருந்தவனோ பதில் கூறவேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் சிலையென அமர்ந்திருந்தான்.
தொடரும்...
Go to Sivagangavathi story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.