இருவருக்கும் இடையில் மலர்ந்த நேசமானது உதய்பூரில் மொட்டவிழ்ந்தது.
உதய்பூருக்கு இயற்கை அரணாக நிறைந்த அந்த ஏரியின் மறு கரையில் தங்கியிருந்த இருவரும் தங்களை மறந்து அமர்ந்து இருந்தனர்.
இருள் பிரிந்து, சூரிய உதயமாகும் நேரத்தில் ப்ரித்விராஜ்
“இதோ ஓர் அழகான உதயம். கூடிய விரைவில் நம் மேவார் சாம்ராஜ்யமும் மஹாராணாவின் முயற்சியால் மிகப் பெரிய உதயம் காணும். அந்த நாள் சரித்திரத்தில் இடம் பெறும்.” என்றுப் ப்ரித்விக் கூறக் கேட்டிருந்த கிரண் தேவிக்கும் மனதில் மகிழ்ச்சியே. அதன் பின்பே தன் நினைவு திரும்பியவன்,
“மன்னித்துக் கொள் தேவி. மேவார் சுதந்திரமே என் மூச்சு. நம் அந்தரங்க நேரங்களில் கூட என்னால் அதை மறக்க இயலவில்லை. “
“மன்னிப்பு எதற்கு இளவரசே? நம் ராணாவின் கனவான மேவார் உரிமைப் போர் தான் நம் லட்சியப் பாதை. அது நம் உயிர், உணர்வு அனைத்திலும் கலந்தே இருக்கும். “
“உண்மைதான் தேவி. இனித்தான் நமக்கு வேலைகள் இருக்கின்றன. ஏரியைச் சுற்றி அரண்மனைக்குச் செல்ல குறைந்த பட்சம் இரண்டு நாழிகையாவது ஆகும். மற்ற அனைவரும் எழுந்து வருமுன், நீ சென்று சற்று நேரம் உறங்கி எழு. “
“தாங்கள் உறங்கவில்லையா இளவரசே”
“இல்லை தேவி. அடுத்த திட்டத்தைப் பற்றிச் சற்று நேரம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. மற்றவர்கள் எழுமுன் அதை நான் திட்டமிட்டு விட்டால், பின் வேகமாக வேலைகள் நடைபெறும். “
“சரி இளவரசே. நான் குடிலுக்குச் செல்கிறேன்” என்றுக் கூறிவிட்டு கிரண் தேவிக் கிளம்பவும், தன் பக்கம் திருப்பிய இளவரசன், அவள் முகத்தைக் கையில் ஏந்தி, நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். வெட்கத்துடன் கிரண் தேவியும் அதை ஏற்றுக் கொண்டாள்.
இதற்கு மேலும் தாமதித்தால் சிக்கலே என்று உணர்ந்த ப்ரித்வி , அவள் கன்னம் தட்டி விடை கொடுத்தான்.
பின் வீரர்கள் ஆயத்தமாகி வர, மேவார் பெண்களும் தயார் ஆகி இருந்தனர். மீண்டும் பயணத்தைத் தொடர்ந்த ப்ரித்விராஜ், தன்னோடு இளவரசியும் புரவியில் வருவதை உணர்ந்து,
“இளவரசி, உதய்ப்பூர் நெருங்கி விட்டோமே. தாங்கள் பல்லாக்கில் வரவில்லையா?” என்றுக் கேட்டான்.