தகவல் கேட்ட மொத்தக் குடும்பமும் ஸ்தம்பித்துப் போனது.
கயல்விழியும் முத்துக்குமரனும் விரைந்து மாஹே வந்து சேர தாத்தாவின் உடல் நிலை காரணமாக வானதியும் இளமாறனும் சென்னையிலேயே தங்கி விட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் முழுவதும் கோமா நிலையிலேயே தேன்மொழி நீடிக்க மேற்கொண்டு சிகிச்சைக்கு சென்னை கூட்டிச் செல்லலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கெவின் லண்டனின் பிரபல மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவரை சேனல் நிறுவனம் தேன்மொழிக்காக ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் கூறினான்.
அவர்கள் புரிந்த தவறினால் நிகழ்ந்தது என்பதால் செலவு முழுவதையும் சேனல் நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக கூறினான்.
“லண்டன் போவது தான் சரின்னு தோணுது. சென்னைக்குப் போனா அனாவசியமா மீடியாக்கு பதில் சொல்ல வேண்டி வரும்” இளங்கோ சொல்ல கயல்விழியும் முத்துக்குமரனும் ஒத்துக் கொண்டனர்.
லண்டனில் மருத்துவர்கள் தேன்மொழியை முழுவதுமாக பரிசோதனை செய்தனர்.
“மயக்க மருந்தின் வீரியம் அதிகம் என்ற போதும் உடனடியாக சிகிச்சை பெற்றதன் மூலம் அதன் விளைவுகள் பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் இத்தனை நாள் கோமா நீடித்துக் கொண்டிருப்பதன் காரணம் புரியவில்லை. எல்லா டெஸ்ட்களும் நார்மலாகவே இருக்கின்றன” தலைமை மருத்துவர் தேன்மொழியின் குடும்பத்தினரிடம் கூறினார்.
“அப்போ சீக்கிரமே நினைவு திரும்பி விடுமா டாக்டர்” முத்துக்குமரன் முற்றிலும் உடைந்தார்.
“நாங்களும் அப்படித் தான் நம்புகிறோம்” என்று மருத்துவர் கூறும் போது இரு வாரங்கள் கடந்து விட்டிருந்தன.
தேன்மொழி கோமாவில் இருக்க கயல் ப்ரொடக்ஷன்ஸ், கயல் ஆடை வடிமைப்பு நிறுவனம் என அனைத்துமே அவளோடு உறக்கத்தில் அமிழ்ந்தது.
தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தாத்தா விமானத்தில் பயணம் செய்து லண்டன் வந்து சேர்ந்தார்.
மற்றவர்களுக்குத் தான் புரியாத புதிர். அவருக்கு அல்லவே.
“என்னவோ நெருப்பு மீன் கடல்ல மிதந்து வந்ததை சுடப் போனாங்களாம். பாப்பா குறுக்க விழுந்துட்டாளாம்” இளங்கோ கூற அதை கேட்டவருக்கு நெருப்பு மீன் உண்மையில் செந்தமிழ் என்று தெரியாமலா போகும்.
ஆதியை தொடர்பு கொண்டு அனைத்தையும் கேட்டறிந்தார்.