காப்பாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறாள் இந்தப் பெண் என்று நினைக்கும் போது தேன்மொழி அவன் முன் மிக உயர்ந்து நின்றாள்.
தேன்மொழியின் முயற்சியில் தன்னால் முடிந்த வகையில் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்தான்.
மறுநாள் அதை அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியவன் உறங்கச் சென்றான்.
சமுத்திர முத்து அல்டாப்ரா அடோல் வந்து சேர இருள் பிரிந்து வைகறை எழும் அவ்வேளையில் கேப்டன் செல்வாவின் அறைக் கதவை தட்டினான் ஆதி.
“கேப்டன், நானும் அக்காவும் கிளம்பறோம். இரண்டு நாட்களில் இங்கிருந்து நீங்க புறப்படும் முன் திரும்பி விடுவோம். யாரேனும் கேட்டால் இங்கிருக்கும் ரிசர்ச் ஸ்டேஷனில் ஒருவரை சந்திக்க சென்றிருக்கிறோம் என்று கூறிவிடுங்கள்” ஆதி கூற கேப்டன் செல்வா சம்மதித்தார்.
கடல் புறாவை நீரில் இறக்கிய ஆதி தேன்மொழி வர காத்திருந்தான்.
முழு டைவ் சூட் அணிந்திருந்தவள் வந்து சேர சத்தமில்லாமல் கடல்புறாவை நீரில் செலுத்தினான்.
முதலில் அவர்கள் சென்றது பவழப் பாறைகள் இருந்த பகுதிகளுக்கு.
அந்தப் பவழப் பாறை பகுதிகளில் மிகுந்த அளவில் ஆமைகள் காணப்படும்.
செந்தமிழ் எங்கேனும் தென்படுகிறானா என்று நீரில் அமிழ்ந்தும் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள் தேன்மொழி. ‘
அந்தப் பகுதியில் செந்தமிழை காணவில்லை என்றதும் அந்த ஆளில்லா தீவிற்கு போக முடிவு செய்தாள்.
“அக்கா நாளை மாலை எல்லாம் நாம் க்ரூஸ்க்கு திரும்பிடணும். இல்லைனா கேப்டன் செல்வா இளங்கோ அண்ணாவிற்கு தகவல் சொல்லிடுவார்” ஆதி தேன்மொழியிடம் கூற அவளோ அந்தத் தீவிற்கு செல்வதில் குறியாக இருந்தாள்.
எவ்வளவு விரைவாக சென்றும் தீவை அடைய இரவு ஆகிப் போனது.
ஆதி டென்ட் அமைக்க தேன்மொழி பாறை மீது ஏறி அமர்ந்து செந்தமிழின் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த தீவில் செந்தமிழ் வந்து போன சுவடுகள் ஏதும் தென்படவில்லை.
“என்னால தான் செந்தமிழ் அன்னிக்கு படகை நோக்கி வந்தான். நான் பாடியதால் தான். மிஸ் யூ ன்னு நான் சத்தமா சொன்னதால தான்” என்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் மருகினாள்.
“இந்தக் குரல் தான் அவனை ஆபத்திற்கு உள்ளாகியது” என்று தேன்மொழியின் ஆழ்மனதில் பதியவே அதுவே அவளை பேச்சிழக்க வைத்திருந்தது.