தான் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது ஆதியையும் மிகவும் புரட்டிப் போட்டிருந்தது.
மீண்டும் தேன்மொழியைக் காணும் நாளை ஆவலோடு எதிர்ப்பார்த்து வேண்டினான்.
தேன்மொழியின் புறக்கண்கள் உறக்கத்தை தழுவியிருந்தாலும் அகக்கண்களில் அழகிய காட்சிகள் விரிந்து கொண்டே இருந்தன.
சிறு வயதில் இருந்து அவள் கடலாடிய நினைவுகள் அனைத்தும் காட்சிகளாக ஒளிபாரப்பானது.
அந்த காட்சிகளில் லயித்துப் போயிருந்தவள் ஐம்புலன்களின் உணர்வை அறியவில்லை.
அவள் காதில் செந்தமிழ் என்ற ஓசை கேட்கும் வரை.
ஒரு சொல் தான்.
ஆனால் அந்தச் சொல்லின் வலிமையை தாத்தா அறிந்திருந்தார்.
அவரின் முயற்சியும் வீண்போகவில்லை.
அந்தச் சொல் தேன்மொழியின் தேகத்தில் ஓர் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பின் சிறிது சிறிதாக அதிர்வலைகளை உண்டாக்கியது. பின் மிகுந்த நடுக்கத்தில் அவள் உடல் தூக்கிப் போட்டது.
தாத்தா எழுப்பிய அபாய அறிவிப்பில் டாக்டர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்தனர்.
பரிசோதனைகள் அனைத்தும் நார்மல் என்றே காட்ட பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று சென்றுவிட்டனர்.
முதலில் சற்றே பயம் கொண்ட தாத்தா தேன்மொழியின் அருகில் அமர்ந்து அவளின் காதருகில் கதை சொல்ல ஆரம்பித்தார்.
செந்தமிழ் அவளை காப்பாற்றிய கதை, அவனை தேன்மொழி தேடிச் சென்ற கதை, செந்தமிழ் சேவ் தி ஸீ தொடங்கிய கதை என்று தாத்தா கூறக் கூற தேன்மொழியின் கண்மணிகள் அசைந்தாடின. இதழ்கள் மந்தகாச புன்னகையில் பூத்தன.
“அப்பா ஏதோ கதை சொல்றார். அதைக் கேட்டு கண்ணை அசைக்கிறா. லேசா சிரிக்கிறா. டாக்டர் அதே போல செய்யுங்க, நல்ல ரெஸ்பான்ஸ்ன்னு சொல்லிருக்கார்” கயல்விழி கணவனிடம் தெரிவித்தார்.
ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் தேன்மொழியிடம் முன்னேற்றம் இருந்தாலும் முழுவதுமாக அவள் விழிகள் திறக்கவில்லை.
அப்போது தான் ஆதியை வரவழைக்குமாறு தாத்தா இளங்கோவிடம் கூறினார்.
ஆதியின் பாட்டி உடல் நலம் தேறியிருக்க ஆதியை லண்டன் அனுப்ப அவர் சம்மதம் சொல்ல இளங்கோ ஆதியை வரவழைத்தான்.