ஜோதாவிடம் சற்று அதிகப் பிரியம். ஆனால் அவரின் பெண்ணாசை ஜோதாவோடு முடிவதில்லை. அந்தப்புர அழகிகள் தவிர, அவ்வப்போது அவருக்குப் பிடித்தப் பெண்களையும் தன் அடிமையாக்கி, அந்தப்புரத்தில் சேர்த்து விடுவார்.
ராஜபுத்திர பெண்கள் முஹலாயர்கள் போல் கருப்பு நிற புர்கா உடை அணியவில்ல என்றாலும், கெட்டியான துணிகளில் கண்ணாடி வேலைப்பாடு உடைய ஆடைகள் அணிவர். அதே போல் முகத்தை சிறு துணியால் மறைத்து தலைப் பின்னலில் இணைத்து விடுவர். காரணம் அவர்கள் வாழ்க்கை பாலைவனப் பிரதேசம் எனபதால் அடிக்கடி மணல் காற்று வீசும். மண் துகள் மூக்கில் நுழைந்தால் அது சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் துணியால் மூக்கைச் சுற்றியும், காதுகளை மூடியும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் உடை பாரம்பரிய முறைப் படி என்பதால், இந்தியப் பெண்களின் அழகை எடுத்துக் காட்டும்.
அக்பர் வரும் சமயங்களில் ஜோதா , கிரண் தேவியோடு சேர்ந்து வரைந்த ஓவியங்கள் , அவர்கள் இருவரின் மற்ற கலை ஆர்வங்கள் எல்லாம் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள். ஜோதாவிற்கும், அக்பருக்கும் வேண்டியதை எல்லாம் செய்ய கிரண் தேவியை ஈடுபடுத்தியதால் அவர் பார்வையில் பட்டாள் கிரண் தேவி.
ஏற்கனவே பெண்கள் மீது ஆர்வம் உள்ள அக்பருக்கு கிரண் தேவியின் மீது விருப்பம் ஏற்பட்டது. அதை வெளிப்படுத்த சமயம் பார்த்து இருந்தார்.
அக்பருக்கு ஜோதாவின் வீரத்தின் மீது தனிப் பிரியம். ஜோதாவும் முறையான வாள் பயிற்சி பெற்றவள். ஜோதா ராணியின் தந்தை அக்பர் மீதுள்ள பயத்தால் அவரை எதிர்க்காமல் , அவரை அரவணைத்தே செல்ல விரும்பி, ஜோதா ராணியை அக்பருக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் ராஜரீக விவாகம் என்பது பரவலாகக் காணப்பட்ட ஒன்றே. ஜோதா அரண்மனையைத் தாண்டிய விஷயங்களில் சற்று ஆர்வம் அதிகம் உள்ளவர். அதே போல் கடல் கடந்து வியாபாரம் செய்து வருபவர்களிடம் பல மொழிகள் கற்றுக் கொண்டவள். அதனால்தான் ஜோதா ராணியின் தந்தை அகப்ரை திருமணம் செய்யக் கேட்டப் போது சம்மதித்து இருந்தார்.
ஆனால் இத்திருமணத்தில் ரானாவிற்கும் அவரை ஆதரித்த மற்ற ராஜபுத்திரர்களுக்கும் விருப்பம் இல்லை. அவர்கள் எத்தனையோ மறுத்துச் சொல்லியும் ஜோதா ராணியின் தந்தை பிடிவாதமாக நடத்தி விடவே, அவர்களோடு உள்ள உறவு முறிந்து விட்டது. இந்த விவரங்கள் எல்லாம் அக்பர் காதுக்கும் சென்றது.