அன்றைக்கு ஜோதாவின் அரண்மனைக்குச் செல்லவும், பணிப்பெண்கள் அனைவரும் அக்பரை எதிர்ப்பார்க்கததால் . ஒதுங்கிக் கொண்டனர்.
ஜோதா ராணியிடம் அக்பர் தன் அரசியல் குறித்த சில விவரங்கள் பேசுவார். அதற்குக் காரணம் ராஜபுத்திரர்களின் தந்திரங்கள், போர் முறைகள் வரைக்கும் ஜோதாவிற்கும் தெரியும் என்பதால் அடிக்கடி ராஜ்யத்தைப் பற்றிய தன் கனவையும், அதன் விரிவாக்கம் தொடர்பான எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுவார்.
அப்படியான ஓர் நாளில், ஜோதா ராணியிடம் பேசிக் கொண்டிருந்தார் அக்பர்.
அப்போது தான் ஜோதா ராணி அழைத்ததால் உள்ளே வந்த கிரண் தேவியைப் பார்த்துக் கொண்டே
“ஜோதா, ராணா பிரதாப் என் மீது போர் தொடுக்க தயாராக உள்ளாராமே? கேள்விபட்டயா?”
என்றுக் கேட்டார்.
அதற்கு ஜோதாவின் மறுமொழி,
“நானும் கேள்விப்பட்டேன் சக்கரவர்த்தி. ரானாவும் அவரைச் சேர்ந்தவர்களும் வீரர்கள். அவர்களின் திட்டமிடல் சரியாக இருந்தால் நிச்சயம் வெற்றி அவர்கள் பக்கமே.“ என்று கூறினாள்.
“எங்கள் படை அளவு அறிந்த பின்னும் வெற்றி அவர்கள் பக்கம் என்றுக் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது ராணி”
“போரின் வெற்றியைத தீர்மானிக்கும் காரணிகளில் படை பலம் ஒன்று என்றாலும், சூழ்நிலையும் முக்கிய பங்கு வகிக்கும் சக்கரவர்த்தி”
“எப்படிச் சொல்கிறாய்?”
“தங்களைப் பொறுத்த வரை இது ராஜிய விஸ்தரிப்பு. ஆனால் ரானாவைப் பொறுத்தவரை இது அவர்களின் உரிமைப் போர். தங்கள் வீரர்களுக்கு உள்ளதை விட ஐந்து மடங்கு பலம் அதிகம் அவர்களின் எண்ணங்களுக்கு இருக்கும்”
“அப்படியானால் நம் படை பலம் அதிகம் இருப்பதுதான் வெற்றிக்கு வழி வகுக்கும்” என்று சிந்தித்தப்படிக் கூறினார் அக்பர்.
அவரின் முகத்தைப் பார்த்த ஜோதாவிற்கு கலக்கம் ஏற்பட்டது. இருவரின் திருமணம் நடந்த முறையில் சில முரண்கள் இருந்தாலும், ஜோதாவைப் பொறுத்த வரை தன் மனதளவில் அவள் ராஜபுத்திர பெண் தான். ஆனால் அக்பரிடம் அதைக் காண்பித்துக் கொள்ள மாட்டாள்.