“என் கணிப்புச் சரியானால் தற்போது அக்பரின் படைகள் உதய்பூர் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்”
தற்போது கிரண் தேவி, ப்ரித்விராஜ் இருவரும் திடுக்கிட்டார்கள்.
“காகூ. அவர்கள் நம்மைப் போல் நான்கு மடங்கு அதிகம் படை பலம் வைத்து இருக்கிறார்கள். அவர்களின் படை அமைப்புகள் அத்தனையும் இந்த சித்திரத்தில் வடித்து இருக்கிறேன்” என்று எடுத்துக் கொடுத்தாள் கிரண் தேவி.
“நான்கு மடங்கு அல்ல கிரண் . ஆறு மடங்கு படையுடன் புறப்பட்டு இருக்கிறார்கள்”
“மகாராஜ். நமக்கு மேலும் படைத் திரட்ட அவகாசம் இல்லையே”
“ஆம். அதைத்தான் அக்பர் செய்து இருக்கிறார். நம் படை பலம் தெரிந்து கொண்டு, அதோடு நம் வீரர்களின் பலத்தையும் அறிந்து கொண்டுள்ளார். அதனால் தான் ஆறு மடங்கு படையுடன் தன் தளபதியை அனுப்பி வைத்துள்ளார். “
“மகாராஜின் கணிப்பு முற்றிலும் சரியே. அதிலும் தற்போதைய அவரின் உத்தரவு ராணி கிரண் தேவி சர்வ நிச்சயமாக பிடித்து வர வேண்டும் என்பதே.” என்று கூறினான் ராம்சிங்.
ப்ரித்விராஜ் “உனக்கு எப்படித் தெரியும் ராம்சிங்” என்றுக் கேட்டான்.
“நாம் ஆம்பரில் இருந்துப் பிரிந்து வரும்போதே தங்கள் இருவரையும் தேடும் படலம் தொடங்கி விட்டது. மேலும் அக்பரின் அரசவையில் அவசரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் நடந்தன. உதய்பூர் வரும்போதே நம் ராணியின் அரண்மனைக்குப் படையெடுப்பு சம்பந்தப்பட்டச் செய்திகள் வந்துவிட்டன இளவரசே. “
“அரசே அவர்களை மலை மேலிருந்துத் தாக்குதல் நடத்தி இருக்கலாமே. நமக்கு அது மிகவும் அனுகூலமாக இருந்து இருக்குமே”
“இல்லை ப்ரிதிவிராஜ். அது தர்மமல்ல. யுத்தத்தில் இரு பக்கமும் சமமான நிலை இருக்க வேண்டும். அது நம் வீரத்துக்கும் அழகல்ல.”
ப்ரித்விராஜிற்கு இதில் அதிருப்தி என்றாலும் ராணாவின் முடிவை மாற்ற முடியாது என்பதால் அதற்கு மேல் அதைப் பற்றி வேறு எதுவும் பேசவில்லை.
“அரசே, நானும் பயிற்சிக்குச் செல்கிறேன். “ என்றவன் சற்றுத் தயங்கி கிரண் தேவியைப் பார்த்தான்.
ரானாவும் அவனின் பார்வையைக் கவனித்து விட்டு,
“கிரண் தேவி. நீ தற்போது உதய்பூர் செல்வது உத்தமமல்ல. அதனால் பிகானர் நோக்கிச் சென்று விடு. உனக்குத் துணையாக ராம்சிங் , காமினி இன்னும் சில வீரர்கள் வருவார்கள்”