தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 13 - சாகம்பரி குமார்
எதிரே தெரிந்த மலைப்பாதை வளைந்து மறைந்து வளைந்து நீண்டு சென்றது. முடிவில் என்ன இருக்கிறது என்றே தெரியாத பனி மூட்டம் கண்ணை மறைந்தது. அதிரதன் அருகே நடந்து கொண்டிருந்த அதிதி பேசவில்லை. அவளுக்குள் சில கேள்விகள் இருந்தன?
அவர்களுக்கு நேரவிருந்த ஆபத்திற்கு யார் காரணம்? யாருடைய வாழ்க்கையை அழித்தாள்?
ஒருவேளை அந்த ஜெனிட்டா அல்லது அவனுடைய அத்தை காரணமோ? ஏனெனில் அவளுக்கு எதிரிகள் யாருமே கிடையாது. வாழ்க்கையை பறித்த பழி அவள் மீது இருந்தால் இந்த இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள்.
அப்புறம்…. அவர்களை காப்பாற்றியது அம்மாதானா… அவ்வாறெனில் அவர்கள் ஆத்மா ரூபமாக அவளுடன் இருக்கிறார்களா..இதுவரை கனவில் மட்டுமே அன்னையின் அருகாமையை உணர்ந்திருக்கிறாள். அவளுக்கு தெரிந்தவரையில் ஆத்மாவிற்கு அவ்வளவு பலம் இருக்குமா என்ன? ஒருவேளை அதிரதன் அவளிடம் எதையோ மறைக்கிறானா?
கடைசியாக அந்த பெரியவர்… அவர் யார்? ஏன் தனியாக வசித்து வருகிறார்? பெரிய பணக்காராக இருப்பார் போலிருக்கிறது.. பிறகு ஏன் தனிமையில் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் வசிக்கிறார்?
“என்ன அதிதி ரொம்பவும் அமைதியாக வருகிறாய்?” அதிரதன் கேட்டான்.
“எனக்கு நிறைய விளக்கம் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது அதுபற்றி பேச வேண்டாம். வீட்டிற்கு சென்றபின் பார்த்துக் கொள்ளலாம்.”
“சரி… இங்கு நடந்தவற்றைபற்றி என் அப்பாவிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். நீ ஒன்றும் சொல்லாதே. ஏனெனில் அவர் எதையாவது தவறாக புரிந்து கொண்டால் பதட்டப்பட ஆரம்பித்து விடுவார்”
“புரிகிறது. ஒரே செல்ல மகனுக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டது என்றால் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.”
“மகனுக்கு மட்டுமல்ல அவருடைய மருமகளுக்கும் ஆபத்து என்பதும் உண்மைதானே”
“ம்… இதுபற்றி அத்தைக்கு தெரிய வேண்டாம்.”
“கரெக்ட்.. அவர்களுக்கு உடல்நிலைவேறு சரியில்லை.”
“ரதன் நமக்கு எதிரின்னு யாராச்சும் இருக்கிறார்களா? கொலை செய்யும் அளவிற்கு…”
“உனக்கு இருக்கிறார்களா?”
“இல்லை…”
“எனக்கும் இல்லை”
“ஆனால் யாரோ அப்படி நடக்கணும்னு நினைக்கிறாங்க. அதாவது நான் செத்து போகணும்னு.