அவள் அருகில் சென்றவன்,
“கேலியா செய்கிறாய்… பதிலுக்கு பதில் பழி வாங்குவேன்”
“ஐயோ எனக்கு இப்போவே பயமா இருக்கு… ஆனால் இன்னும் கொஞ்சம் கடுமையா சொன்னால் நல்லா இருக்கும்”
“நீ இவ்வளவு பெரிய வாயாடின்னு தெரியாமல் போயிடுச்சே” என்றவன் அவளுடைய காதை பிடித்து திருகினான்.
“ஆவ்… வலிக்குது சார்…. நான் வாயாடின்னு தெரிஞ்சிருந்தா என்ன செய்திருப்பீங்க”
“டைவர்ஸுக்கான காரணமாக அதை சேர்த்திருப்பேன். ஆஃப்டரால் அந்த ஜட்சுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும்ல. ஒரு மனைவி எப்படி எல்லாம் பேச முடியும்னு அவருக்கும் தெரிந்திருக்கும்ல…”
“ஆனால் நம்ம அளவுக்கு பேச முடியாது. இன்னும் இருக்கு பாருங்க.”
“ஏன் இந்த கொலைவெறி?”
“இப்போதைக்கு டைவர்ஸ்… கிடைக்காது. அட்லீஸ்ட் எனக்கு பயந்து ஊரைவிட்டு ஓடிப் போகணும்ல”
“அடுத்த திட்டமா? மை காட்” அவன் முகம் சுருக்கி பார்க்க, அவளுக்கு சிரிப்பு வந்தது. அவனை பார்த்துக் கொண்டே நடந்தாள்.
“என்னாச்சு ரெண்டு பேரும் துள்ளு நடையில வர்றீங்க?” அதிதியின் சித்திதான். உதடுகளில் சிரிப்பு இருந்தாலும் கண்களில் வெறுப்பு தெரிந்தது.
“சும்மாதான் சித்தி. நீங்க வெளியே போயிட்டு வர்றீங்களா?” அஞ்சலையின் கையில் இருந்த பையை பார்த்து அதிதி கேட்டாள்.
“வேண்டியவங்க யாருக்காவது உடல் நலமில்லாமல் போயிருக்கும். ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வர்றாங்க போலிருக்கு. கவலையா இருக்காங்க. அத்தை… செலவுக்கு ஏதாவது பணம் வேண்டுமா? அதிரதன் அழுத்தமாக கேட்டான்.
அஞ்சலை அவனை பார்த்த பார்வையில் ஒரு நொடி வெறுப்பு தோன்றி மறைந்தது. பின்னர் இயல்பாக பார்த்தபடி..
"பணம் தேவை இல்லை மாப்பிள்ளை. வேண்டாத எதுவோ நடக்கப்போகுதுன்னு கலக்கமா இருந்துச்சு. அதான் ஊர் கோவிலுக்கு போயிட்டு வரேன்."
"அதெப்படி சித்தி உங்களுக்கு.." என்று பேச ஆரம்பித்த அதிதியை தடுத்து,
"நாம வீட்டுக்கு போகலாம். அப்புறமா பேசிக்கோங்க." என்று கைபற்றி இழுக்காத குறையாக அதிதியை அழைத்து சென்றான்.