“அவங்களுக்காகத்தானா…”
“ஆமாம். மற்றபடி நமக்குள்ள எதுவும் இல்லை.”
“அப்போ இந்த ஐந்து நாட்கள் வனவாசத்தை கம்ப்ளீட் பண்ணாமல் போவது சரியில்லையே”
“முதல்ல உயிரோட இருக்கணும். அப்புறம்தான் டைவர்ஸ் பற்றி கவலைபடணும். நமக்கு எதிரா யாரோ வேலை செய்றாங்க… அது யார்ணு தெரிஞ்சாகணும். நான் மாமாகிட்ட பேசுவேன்”
“எங்கப்பாட்ட நான் பேசிக்கறேன். நீ முதல்ல உன் சைட்ல இருக்கிற சந்தேக பட்டியலை ரெடி பண்ணு”
“எனக்கு யார் மீதும் சந்தேகம் கிடையாது.“
“இப்போ ஏன் கோபமாக பேசுகிறாய்…”
“என்னை டென்சன் செய்துட்டீங்க. வீட்டிற்கு போய் சேரும்வரை இப்படித்தான் கோபமாக இருப்பேன். எங்கிட்ட பேசாதீங்க” அவள் கடுகடுவென்று பேசினாள்.
“ஒரு வார்த்தைகூட பேசக் கூடாதா”
அவள் பதில் சொல்லாமல் விறுவிறுவென்று நடையின் வேகத்தை அதிகப்படுத்தினாள். அவள்கூடவே நடந்து வந்தவன், சற்று பொறுத்து
“ஆச்சரியமாக இருக்கு. கோபம் வந்தால் ஏலக்காய் பூமொட்டு போன்ற சின்ன மூக்கு குடைமிளகாய்போல பெரிசாக மாறி விடுமா என்ன?” தானாக பேசிக் கொண்டான்.
“யாருக்கு எனக்கா?” அவள் படக்கென்று கேட்டாள்.
“—“ … அவன் விழி சுருக்கி சிரித்தான். அவளை கேலி செய்திருக்கிறான் என்பது தெரிய வரவும்…
“போய்யா…” மெல்ல சப்தமில்லாமல் முணுமுணுத்தாள்.
“என்னது…” அவன் காற்றில் கையை ஓங்க,
“ஒன்றுமில்லை” என்றவள் நடையை ஓட்டமாக மாற்றினாள். ஏனெனில் அது சரிவான பாதையாக மாறி இருந்தது.
“அந்த பயம் இருக்கணும்” என்று கத்தினான்.
“யாருக்கு பயம்… நான்தான் அன்னிக்கே பார்த்தேனே… பச்சபிள்ளை… ரொம்பவும் பயந்துட்டீங்க” திரும்பி நின்று சொல்லி விட்டு சரிவில் இறங்கினாள்.
“ஆமாம் பேய் பிடிச்சா மாதிரி கத்திகிட்டு காபிகப்பை என்மேல வீசியடித்தால் சிரிக்கவா செய்ய முடியும்…?“
ஒருவழியாக சமதரைக்கு சென்றதும் அவளின் ஓட்டம் நின்றது. மூச்சு வாங்க நின்றாள்…