அவன் குழந்தைகளை தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேற… துளசி ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்க… சுந்தரத்தின் தவறான புரிதலால் க்ருபா செய்வதறியாது வெளியேறினான்.
ஏனெனில் சுந்தரத்திற்கு விளக்கம் தரும் நிலையில் அவன் இல்லை.. அங்கு என்ன நடந்தது என்பது புரிந்தால்தான் அவனால் தெளிவாக பேச முடியும்.
அதன்பின் அங்கு நடந்தது எதுவுமே சரியில்லை. சற்று பொறுத்து தெளிவான துளசி அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை மற்றவர்கள் சொல்லி புரிந்து கொண்டு அவமானம் தாங்காமல் ஊர் எல்லை புளிய மரத்தில் தூக்கு போட்டு இறந்து போனாள்.
மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டதாக நம்பிய சுந்தரம் குழந்தைகளுடன் மலை உச்சியிலிருந்து குதித்து செத்து போனான்.
இந்த செய்தியை கேள்விபட்ட அஞ்சலை இறந்து போன துளசியின் ஒழுக்கத்தை அசிங்கமாக சித்தரித்து பேசினாள்.
விஷயத்தை தெரிந்து கொண்ட கற்பகம் கதறினாள். க்ருபாதான் தவறு செய்தான் என்று அவள் நம்பி விட்டாள். அப்போதுதான் அவள் மனநிலை பாதிக்கப்பட்டது. 'அண்ணன் செத்துட்டான்.. அண்ணன் செத்துட்டான்.. ' என்று திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தாள்.
இதில் கன்னியம்மா ரொம்பவும் கலங்கி போனாள். அவளால் ஒரு குடும்பமே அழிந்து போய் விட்டது என்று பயந்து புலம்ப ஆரம்பித்தாள்.
ஒரு சில நாட்கள் கழித்து ஹோட்டல் அறையில் தங்கியிருந்த க்ருபாவை தேடி வந்து நடந்த உண்மையை சொல்லி அழுதாள். கன்னியம்மா பயன்படுத்திய மூலிகை ஹாலுசினேஸன் எனப்படும் மாய காட்சிகளை உருவாக்க கூடியது என்பதை புரிந்து கொண்டான். மனதின் ஏக்கத்தை மாய காட்சியாக காட்டி பேதலிக்க வைக்கும்.
இதை விளக்கி சொன்னால் துளசியின் குடும்பம் உயிர் பெற்று விடுமா… என்று வேதனை அடைந்தான். அவனிடம் பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு வந்த கன்னியம்மா வீட்டுக்கு சென்றபின் நெஞ்சு வலித்து இறந்து போனாள்.
இத்தனைக்கும்பின் க்ருபாவினால் நிம்மதியாக இருக்க முடியாமல் சுந்தரம் தற்கொலை செய்து கொண்ட மலையுச்சிக்கு சென்றான்.
தொடரும்