காத்திருந்தாள்..
அவளுக்கான அந்த நாள்தான்… மே முதல் நாள். ஏற்கனவே துளசியின் மாமனார் சண்முகம் வட இந்தியாவிற்கு யாத்திரை கிளம்பி இருந்தார். சுந்தரம் தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு டவுனுக்கு கிளம்ப… கன்னியம்மா துளசியை பார்க்க சென்றாள்.
"வாங்க சித்தி. ஊரிலிருந்து எப்போ வந்தீங்க." என்று துளசி வரவேற்றாள்.
கையிலிருந்த லட்டு பாக்கெட்டை அவளிடம் நீட்டிய கன்னியம்மாள்…
"நேத்துதான் வந்தேன். எங்கே பிள்ளைகளை காணோம்" என்றாள்.
"அவங்க அப்பாகூட கடைக்கு போயிருக்குங்க."
"நான் அஞ்சலைக்காக லட்டு பிடிச்சேன். உனக்கு கொண்டு வந்தேன். சாப்பிடு."
"பசங்க வரட்டும் சித்தி."
"இதை நீ சாப்பிடு. சுவை எப்படின்னு சொல்லு. அதுங்களுக்கு முறுக்கும் கொண்டு வரேன். அஞ்சலை போட்டுட்டு இருக்கா" என்றவள் துளசியை சாப்பிட வைத்தாள்.
"ரொம்ப நல்லாருக்கு சித்தி. நான் உங்களுக்கு காபி போட்டு வரேன்"
"இருக்கட்டும் துளசி.. நான் அப்புறமா வரேன். லட்டும் முறுக்கும் எடுத்துட்டு வரேன். ம்… பத்து நிமிஷம் கழிச்சு நீயே வந்து எடுத்துக்கறியா?. எனக்கு கால் வலிக்குது." என்று சொல்ல.. துளசி தலையை அசைத்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து துளசிக்கு என்ன நடக்கும் என்பது கன்னியம்மாவிற்கு தெரியும். தள்ளாடியபடி துளசி தெருவில் நடந்தால் அவளுடைய திட்டம் நிறைவேறி விடும். போதை பழக்கம் உள்ளவள் என்று அசிங்கப்பட்டு நிற்பாள்.
இவ்வளவுதான் அவளுடைய திட்டம்… அதில் எதிர்பாராமல் வந்து சிக்கியவன்தான் க்ருபா!
இரண்டு நாட்களில் ஜெர்மனிக்கு செல்லவிருப்பதால் சுந்தரத்தின் மருத்துவமனைக்கு எதுவும் தேவையா என்று கேட்டு செல்ல வந்தான். அவன் வீட்டுக்கு வந்த நேரம் துளசி மட்டுமே இருந்தாள்.
"அவர் அபிதாவிற்கு பர்த்டே கேக் ஆர்டர் செய்ய டவுனுக்கு போயிருக்கார்." துளசி சொன்னாள். சுந்தரத்தின் நண்பனாக அவனை பாவித்து பேசுவாள். அவனை அண்ணா என்று சொன்னதில்லை க்ருபாவும் அவளை தங்கையாக அழைத்ததில்லை. அந்த குடும்பத்துடனான பழக்கம் உறவு என்று இல்லாமல் நட்பு என்று இருந்தது.
"நான் வந்ததா சொல்லும்மா. ஹாஸ்பிடலுக்கு தேவையான லிஸ்டை எழுதி வைக்க சொல்லுமா. நான் நாளைக்கு வரேன்" அவன் வெளியேற நினைத்து திரும்பினான்.