மதிக்கத்தக்க ஒரு ஆள் இறங்கி வர, அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.
"யாரும்மா? என்ன விஷயமா என்னை பாக்க வந்துருக்கீங்க?" பவித்ராவிடம் கேள்வியை ஆரம்பித்து தான் வந்ததை கூட மதிக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த சத்யாவிடம் முடித்தான் கமலக்கண்ணன்.
"சார் நான் காருண்யா ஆஸ்ரமத்துல இருந்து வரேன். அந்த லேண்ட் பத்தி ..." என்னதான் தன்னை தானே தைரிய படுத்தி கொண்டு வந்திருந்தாலும் இங்கே அவளுக்கு அந்த தைரியம் வரவில்லை. "ஒ...அந்த ஆஸ்ரமத்துல வேலை செய்ற பொண்ணா நீ?" அந்த கமலக்கண்ணனின் கேள்வியில் என்ன பதில் சொல்வது என தெரியவில்லை அவளுக்கு, அந்த ஆஸ்ரமத்திற்கு அவள் யார்??
"ஷி இஸ் தி டைரக்டர் ஆப் காருண்யா ஹோம் " சத்யாவின் பதிலில் அதிர்ந்தது கமலக்கண்ணன் மட்டும் அல்ல. பவித்ராவும் தான். அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய, "டைரக்டரா?" இம்முறை குரல் உள்ளே போயிருந்தது கமலக்கண்ணனுக்கு.
"எஸ்... யு கேன் சீட் மிஸ் பவித்ரா"என்ற சத்யா, "கொஞ்சம் பேசலாமா மிஸ்டர் கமலக்கண்ணன்" என்றான் திமிரான குரலோடு.
கமலக்கண்ணனுக்கு அவனின் அந்த திமிர் பிடித்தமானதாக இல்லை. இங்க ஆஸ்ரமம் இப்போது பொறுப்பாளர்கள் யாரும் இல்லாமல் இருப்பதாக உறுதி செய்த பின் தான் அதற்கான போலி பாத்திரங்களை தயார் செய்திருந்தான். இப்போது டைரக்டர் என யாரோ ஒருத்தி வந்து நிற்கிறாளே என்று யோசித்தபடியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் கமலக்கண்ணன்.
"இந்த ஆஸ்ரமத்தின் டைரக்டர் நீ தான்னு நான் எப்படி நம்பறது? "பவித்ராவை பார்த்து கேட்டான் கமலக்கண்ணன்.
"உனக்கு வேணும்ங்கிற டாக்குமெண்ட்ஸ் இதோ" ஒரு பாத்திரத்தை எடுத்து அவனிடம் நீட்டிய சத்யாவை முறைத்தவன் "தம்பி மரியாதையா பேசு. நீ வா போன்னு எல்லாம் பேசாத. என்னை பத்தி உனக்கு தெரியாது" மிரட்டலோடு சொல்ல, "மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும். நீங்களும் மிஸ் பவித்ராவை நீ வா போ ன்னு பேசாமல் இருக்கிறது நல்லது." அவனின் மிரட்டலை எல்லாம் கண்டு பவித்ரா மிரண்டிருக்க, சத்யாவோ அதை எல்லாம் கடுகளவும் கண்டு கொள்ளவில்லை. அந்த பத்திரத்தை புரட்டி பார்த்த கமலக்கண்ணன் புருவம் சுருங்க ஏதோ யோசிக்க, இந்த பேப்பர் எல்லாம் எங்கிருந்து வந்தது, யார் இவனுக்கு கொடுத்தார்கள், நான் எப்படி இந்த ஆஸ்ரமத்தின் டைரக்டர் ஆனேன் என ஏராளமான கேள்விகள் சூழ குழம்பி கொண்டிருந்தாள் பவித்ரா.
சிறிது யோசித்த கமலக்கண்ணன் தன்னுடைய தடுமாற்றத்தை வெளியே காட்டாமல், "நல்லது.