அப்போ டைரக்டர் கிட்டயே நேரா பேசிட வேண்டியது தான். இங்க பாரும்மா, இது என் தாத்தாவுடைய நிலம். சட்டப்படி அது பேரனுக்கு தான் சொந்தம். ஆனா என் தாத்தா கிட்ட இருந்து போலி பாத்திரம் மூலமா இந்த இடத்தை யாரோ உங்க ஆஸ்ரமத்துக்கு கொடுத்திருக்காங்க. சட்டப்படி இது என் நிலம். இப்போவே கேஸ் அது இதுனு போன கண்டிப்பா நான் தான் ஜெயிப்பேன். என்கிட்டே அதுக்கான ஆதாரம் எல்லாம் இருக்கு. ஆனா ஏதோ ஆஸ்ரமம் வெச்சு நடத்தறீங்க. உங்கள கோர்ட் கேஸுன்னு அலைய விட மனசு இல்லை. அதே சமயம் இன்னைய தேதிக்கு கிட்டத்தட்ட அஞ்சு கோடி ரூபா போற இடத்தை அப்படியே தூக்கி கொடுக்கற அளவுக்கு நான் பெரிய மனசுக்காரனும் இல்லை. அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்" என்றவன் ஏதோ யோசிப்பதை போல தாடையை தடவியபடி பவித்ராவின் முகத்தை பார்த்தான். அவளோ பாவமாக சத்யாவை பார்க்க, அவனோ இங்கு நடக்கும் நாடகத்தை எல்லாம் ஒரு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்.
"நீயே சொல்லும்மா என்ன பண்ணலாம்னு " கேள்வியை அவளை நோக்கி திருப்ப, இங்கு என்ன தான் நடக்கிறது என்ற பார்வையுடன் சத்யாவை பார்த்தாள் பவித்ரா.
"சார், உங்களுக்கு என்ன கேக்கணுமோ அதை என் கிட்ட கேளுங்க. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் மேடம தொந்தரவு பண்ணாதீங்க" சத்யாவின் பதிலில் பவித்ராவுக்கு என்னவோ போல இருந்தது. ஒரு வேளை இவன் என்னை கிண்டல் செய்கிறானோ என்று அவன் முகத்தை பார்க்க அவனோ தீவிரமாக பேசி கொண்டிருந்தான் கமலக்கண்ணனிடம்.
"தம்பி, நானே ஒரு வழி சொல்றேன். அந்த இடத்தை நீங்களே ஆஸ்ரமம் நடத்த வெச்சுக்கோங்க" கமலக்கண்ணன் ஒரு நிமிட இடைவெளி விட்டு பவித்ராவை பார்க்க, அவள் முகம் சந்தோசத்தில் விசுகசித்தது.
"ஆனா எனக்கு அதுக்கு பதிலா ஒரு அம்பது லட்சம் பணமா கொடுத்துருங்க" அவன் சர்வ சாதாரணமாக சொல்ல, பவித்ரா வாயடைத்து போனாள் . "ஏதோ என்னால இவ்ளோ தான்மா செய்ய முடியும்" என்று முடித்தான் கமலக்கண்ணன்.
"ஓஒ சூப்பர் சார். நீங்க இந்த அளவுக்கு இறங்கி வருவீங்கன்னு நான் நினைக்கலை. ரொம்ப தாராள மனசு சார் உங்களுக்கு.ஆனா என்ன பண்றது உங்களுடைய இந்த பெரியமனசை ஏத்துக்கமுடியாத சூழ்நிலைல நாங்க இருக்கோம்." எழுந்து நின்று பாக்கெட்டில் கை விட்டு கொண்டே சத்யா சொன்ன தோரணையில் "தம்பி என்ன கிண்டலா?" கமலக்கண்ணனின் குரல் இறுகியது.
"சே சே...அப்படி எல்லாம் இல்லை சார். நீங்க பாவம் இந்த ஆஸ்ரமத்துக்கு யாரும் டைரக்டர்ஸ் இல்லை. இந்த ஆஸ்ரமத்துக்கு 1985க்கு முன்னாடி உள்ள பேரெண்ட்