உறுதியாக நிற்க, "அதான் எனக்கு பிடிக்காதுன்னு சொல்றேன்ல. அப்பறமும் பதில் சொல்லு சொல்லுனா என்ன அர்த்தம்" இம்முறை பவித்ராவின் குரல் உயர கிச்சனுக்குள் இருந்த லக்ஷ்மியும் உமாவும் வெளியே வந்தனர்.
லக்ஷ்மியை கண்ட பவித்ரா, "அம்மா ப்ளீஸ் நீங்களாச்சும் சத்யாக்கு புரிய வையுங்க. கல்யாணம் எல்லாம் என் வாழ்க்கையில நடக்காத ஒண்ணுனு அவருகிட்ட சொல்லுங்க அம்மா " லக்ஷ்மியின் கையை பிடித்து கெஞ்சியவள், "ஏன் நடக்காது பவிம்மா...?" என்ற லக்ஷ்மியின் கேள்வியில் விக்கித்து நின்றாள்.
"அம்மா...என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீங்க...நீங்க எப்படி இப்படி???"கண்களில் கண்ணீர் நிறைந்தது பவித்ராவுக்கு.
"உன்னை பத்தி எனக்கு மட்டும் இல்லை பவிம்மா, சத்யாவுக்கும் தெரியும்" லட்சுமி சொல்ல, பவித்ரா பிடித்திருந்த லக்ஷ்மியின் கை அவளின் கையில் இருந்து நழுவ அவர் சொன்னதை கிரகித்து கொள்ளவே முடியவில்லை அவளால்.
"அம்மா...."அதிர்ச்சியுடன் லக்ஷ்மியின் முகம் பார்க்க, "நீயும் அம்மாவும் அன்னைக்கு பேசுனது எல்லாம் நான் கேட்டேன் பவி" என்று பதில் வந்தது சத்யாவிடம் இருந்து.
பவித்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதை துடைக்க கூட தோன்றவில்லை பவித்ராவுக்கு.
"பவி, நீ இப்போ எதுக்கு அழற? நீ இப்படி உன் வாழ்க்கையில உன்னையே தனிமை படுத்தி உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்கற அளவுக்கு என்ன தவறு செய்த?" சத்யா அவளின் அருகே வந்து நின்று அவளின் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டபடி கேட்டான்.
"எந்த தவறுமே செய்யாத நீ எதுக்காக வாழ்க்கை முழுதும் இப்படி கடமைக்காக வாழப்போற? உன் வாழ்க்கையில நடந்தது நீ நினைக்கிற மாதிரி ஒரு கறையாவோ இல்லை வாழவே உன்னை தகுதி இல்லாதவளா மாத்தறதாவோ எனக்கு தோணலை பவி. எந்த காயத்துக்கு மருந்து இருக்கு. ஆனா நான் மருந்து போடவே விடமாட்டேன் அப்படினு அதை மூடி மூடி வெச்சா அது புரையோடி போகுமே தவிர அந்த காயம் சரி ஆகாது பவி " அவளின் முகத்தை கையில் ஏந்தியபடி சொன்ன சத்யாவின் கைகளை விலக்கியவள், "என் வலியை கேட்ட உங்களுக்கு அதனுடைய பத்து பெர்சென்ட் தான் புரிந்திருக்கும். அனுபவிச்ச, இன்னும் அனுபவிச்சிட்டு இருக்கற எனக்கு தான் அது முழுதா புரியும். அட்வைஸ் பண்றது ரொம்ப சுலபம் சத்யா. ஆனா அதை கேக்கறவங்க நிலைல இருந்து பார்த்தா தான் அது நடைமுறை படுத்தறது எவ்ளோ கஷ்டம்னு தெரியும்.' என்றவள் அந்த இடத்தை விட்டு விலகி அவளின் அறையை நோக்கி சென்றாள்.