" இல்லையே! ஏன் கேட்கறீங்க?"
" சுவாமிதான், எங்க குடும்பத்துக்கு வழிகாட்டி! கண்கண்ட தெய்வம்! அவர் போட்ட பிச்சைதான், இன்று நாங்க மூன்றுபேரும் உயிரோடிருப்பதும், தைரியமாக வாழ்வதும்!"
" அப்படியா!"
" ஐயா! இந்த காபியை குடிச்சிட்டு, குளிக்க ரெடியாயிடுங்க!" என்று மகள் காயத்ரி, சொல்லிச் சென்றாள்.
" ஐயா! காபி சரியா இருக்கா? இனிப்பு போதுமா?"
" நான் காபி குடித்து, பல வருஷமாயிடுத்து! சிறையிலே காபி தரமாட்டாங்க!"
" சாப்பாடு நல்லா இருந்ததா?"
சகாதேவன் சிரித்தார்.
" ஏன், ஏதாவது தப்பா கேட்டுவிட்டேனா?"
" பசி, ருசி, எல்லாம் மறக்கத்தான் சிறைதண்டனை! சரி, கடந்த காலத்தை மறந்து, இந்த வினாடியில் வாழ்வோமே!"
" சுவாமியும் இதையேதான் சொல்வார்! 'சென்றதை மற! வருவதைப் பற்றி கனவு காணாதே! எப்போதும், நிகழ்காலத்தில் இரு!' என்பார்!
"சரியா சொல்லியிருக்காரு!"
" நீங்க குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்!"
சகாதேவன் கைப்பையிலிருந்த மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு, குளியலறைக்குள் நுழைந்தார்.
" அம்மா! ஐயா அதிகம் பேசலையே, கவனிச்சியா?"
" காயத்ரி! பாவம்டீ, அவர்! ஒண்ணா, ரெண்டா, பதினெட்டு வருஷம்! சிறையிலே கடுங்காவல் தண்டனை! வெளியிலே வந்தா, பெற்றவங்களோ, கூடப் பிறந்தவங்களோ, ஒருத்தரும் வரவேற்கலே! முகத்தையே காட்டலே! மனசு வெதும்பிப் போய், கசந்திருக்கும்!"
" நானும் மாதவியும் பிறக்குமுன்பே, ஐயா சிறைக்குப் போயிட்டாரே, சொல்லும்மா! அவரை ஏன் சிறையில் அடைச்சாங்க?"
" எல்லாம் இந்தப் பாவியை காப்பாத்தினதாலேதான்!"
" விவரமா சொல்லும்மா!"
" அம்மா! நானும் வரேன், இரு!"
மாதவியும் சேர்ந்தவுடன், இருவருக்கும் தாய் கடந்ததை விவரித்தாள்!