ராமை கண்ட அசோக், கேட்க வந்ததை அப்படியே விட்டுவிட்டு அவனிடம் திரும்பினான்.
"பாட்டி எங்க?" என்ற ராமின் கேள்வியில் மறைந்திருந்த குத்தலை தமிழ்செல்வி உணர்ந்திருந்தாள்.
"பாட்டி ரெஸ்ட் ரூம் போயிருக்காங்கடா" அசோக் சொல்லவும் விசாலம் வரவும் சரியாக இருந்தது. ராம் நேரம் ஆகிவிட்டது என அவசரப்படுத்த அவர்கள் கிளம்பவேண்டி வந்ததால் அதற்க்கு மேல் அன்று அவளிடம் அசோக்கால் பேச இயலாமல் போனது.
வீட்டை அடைந்ததும் காரை நிறுத்தியவன் "பாட்டி எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு. இப்போவே லேட் ஆயிடுச்சு, நான் இப்படியே கிளம்பறேன்" எனவும் விசாலம் சரி என்றவர் மருத்துவமனைக்கு போய்விட்டு வந்து சற்றே அசதியாக இருக்கவும் உள்ளே செல்ல, காரில் இருந்த மருந்து மாத்திரைகள், எல்லாவற்றையும் எடுத்த தமிழ்செல்வி, ஒரு கையில் அசோக் கொடுத்த புத்தகங்களையும் எடுத்து கொள்ள, அப்போது தான் அந்த புத்தகங்களை கவனித்தான் ராம்.
"என்ன புக்ஸ் இதெல்லாம்?" ராமின் புருவங்கள் சுழித்திருக்க தமிழை பார்த்து கேட்டான்.
"இது...அசோக் கொடுத்தார். படிக்கறதுக்காக" என்றதும் அவள் கையில் இருந்த ஒரு புத்தகத்தை இழுத்தவன் "ஹ்ம்ம் கார்டியோ வாஸ்குலார் பத்தி படிச்சு மேடம் என்ன டாக்டர் ஆகா போறிங்களோ...நேரம் தான். உனக்கு என் பாட்டி மாதிரி ஒரு ஆள் கிடைச்சது நல்ல நேரம். எங்களுக்கு உன்னை மாதிரி ஒரு செர்வண்ட் கிடைச்சது கெட்ட நேரம்" என்றான் அந்த "செர்வண்ட்" டில் ஒரு அழுத்தம் கொடுத்து.
"ஹ்ம்ம் இந்தா. நல்ல்லா படி. உன் பிரியப்பட்ட...நண்பர் கொடுத்ததாச்சே" என்றவன் அங்கிருந்து காரை விருட்டென வேகமாக கிளப்பி கொண்டு செல்ல, தமிழுக்கு அய்யோடா என்று இருந்தது.
அவனுக்கு அவள் மேல் இருக்கும் வெறுப்பை எண்ணி மனம் நொந்தவாறு உள்ளே சென்றாள் தமிழ்செல்வி.
"அம்மா என்னாச்சு இலக்கியாக்கு? ரெண்டு நாளா நானும் பாக்கறேன். ரொம்ப டல்லா இருக்கா..." அன்று காலையில் சீக்கிரமே கிளம்பி கல்லூரிக்கு போன இலக்கியாவை எண்ணி கலைவாணியிடம் கேட்டாள் தமிழ்செல்வி.
"நானும் அதான் யோசிச்சுட்டு இருந்தேன் தமிழ். என்னடி ஆச்சுன்னு கேட்டா எரிஞ்சு விழறா. ஏதாவது உடம்புக்கு முடியலையா...ஹாஸ்பிடல் போலாமான்னு கேட்டா ஏதோ பைத்தியம் பிடிச்சவ மாதிரி கத்தறா" கலைவாணி கவலையோடு சொல்லவும் தமிழ் யோசனையானாள்.