"என்னாச்சு பாட்டி???" பதற்றத்துடன் அவர் முன்னே வந்து நின்றவனை பார்த்த விசாலம் "உனக்கு இலக்கியாவை தெரியுமா?" என்றார் அவனை தீர்க்கமாக பார்த்தபடி.
"இல...இலக்கியா...என் காலேஜ்ல..." பரத் சொல்லிமுடிக்கும் முன் "உனக்கு இலக்கியாவை தெரியுமா???" என மீண்டும் அழுத்தமாகவும் கம்பீரமாகவும் ஒலித்தது விசாலத்தின் குரல்.
"தெரியும் பாட்டி..."பரத் தலை குனிந்தபடி சொல்ல, அவனின் குனிந்த தலை அவருக்கு உண்மையை உரைக்க அவனை பளாரென அறைந்திருந்தார் விசாலம்.
அவர் அடித்ததை எதிர்பார்த்திராத பரத் அதிர்ச்சியுடன் அவரை நோக்க, "இலக்கியா ரெண்டு மாசம் ப்ரெக்னென்ட்டா இருக்கா" என்றாள் தமிழ் அமைதியாக.
அவளுக்கு எப்படி அது தெரியும் என அவன் இன்னும் அதிர்ச்சியுடன் நோக்க, "செல்வியுடைய தங்கை தான் இலக்கியா" என்ற விசாலத்தின் பதிலில் அதிர்ந்து நின்றான் பரத்.
"இலக்கியாவுடைய அக்கா...அப்போ நீங்க தான் அந்த...." ஏதோ சொல்ல வந்தவன் பாதியுடன் நிறுத்தினான் விசாலம் இடைப்படவும்.
"செல்வி நீ கவலைப்படாதே. உன் தங்கை எங்க வீட்டு வாரிசை சுமக்கறா. நான் உனக்கு வாக்கு கொடுக்கறேன். அவ தான் எங்க வீட்டு மருமக. நீ பயப்படாம வீட்டுக்கு போ. நான் இந்த விஷயத்தை உடனடியா ராம் கிட்ட சொல்லி இன்னைக்கே உங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசறேன்" விசாலம் சொல்ல, "பாட்டி ரொம்ப தேங்க்ஸ் பாட்டி" என கண்களில் வழியும் கண்ணீரோடு அவரை அணைத்து கொண்டாள் தமிழ்செல்வி.
விசாலத்திடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினாள் தமிழ்செல்வி.
"அம்மா அம்மா...." என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்த தமிழ்செல்வியின் முகமே விஷயத்தை சொல்ல, கலைவாணிக்கு அதுவரை இருந்த வேதனை மறைந்து முகத்தில் சந்தோஷம் தோன்றியது.
"அம்மா, விசாலம் பாட்டி இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க. உங்ககிட்ட முறைப்படி பேசறேன்னு சொல்லிட்டாங்கம்மா. எனக்கு வாக்கு கொடுத்திருக்காங்க. இலக்கியா தான் அவங்க வீட்டு மருமகனு...."சந்தோசமாக கலைவாணியை கட்டிக்கொண்டாள் தமிழ்செல்வி.
"தமிழ் எல்லாம் உன்னால தாண்டா. அந்த கடவுள் கைவிடல" கலைவாணி சொல்ல, "அம்மா இலக்கியா கிட்ட சொல்லுங்க. ஈவினிங் அவங்க வரும்போது நல்லா மேக்கப் பண்ணி ரெடியா இருக்க சொல்லுங்கம்மா" என அவரை உள்ளே அனுப்பியவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.