தோன்றியது.
"தமிழ், எல்லாருமே அவங்களுக்குனு வர வரைக்கும் நல்லவங்க தான். இது தெரிஞ்சா அதே மாதிரி நல்லவங்களா இருப்பாங்கன்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?" கலைவாணி சொல்வதும் சரி தான் என பட்டது தமிழ்செல்விக்கு. அனுபவப்பட்டவர்களாயிற்றே...
"தமிழ், நாளைக்கு நம்ம ரெண்டு பெரும் போயி பேசி பாக்கலாமா?" கலைவாணி கேட்கவும் "வேண்டாம்மா" உடனடியாக மறுத்தாள் தமிழ்செல்வி.
விசாலம் நல்லவர் தான் ஆனால் ராம்??? அன்று தன்னை அவமதிக்க அப்படி எல்லாம் பேசியவன் அதே போல அம்மாவையும் பேசிவிட்டால்??? வேண்டாம். எதுவானாலும் அவர்கள் அவமானப்படக்கூடாது.
"நான் பேசறேன் மா. அதுக்கு அப்பறம் உங்களை கூட்டிட்டு போறேன்" கலைவாணி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காலையில் கிளம்பி விட்டாள்.
வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர் அவளை இறங்க சொல்லும் வரை எப்படி இந்த விஷயத்தை பேசுவது என்ற யோசனையுடன் வந்தவளுக்கு வீட்டு வாசலில் இறங்கியதும் இன்னும் பதற்றம் கூடியது. உள்ளே சென்றவள் முதலில் ராம் கிளம்பிவிட்டானா என்று தான் பார்த்தாள். எப்படியாயினும் அவன் அறிந்து தான் ஆகவேண்டும் ஆனால் பாட்டி மூலமாக அவன் அறிந்தால் பரவாயில்லை. நேரடியாக அவன் முன்னால் சென்று நின்று இதை சொல்லமுடியுமா என தெரியவில்லை.
அவள் உள்ளே வந்த போது பாக்கியம் தான் இருந்தார். அவரிடம் சென்றவள், "பாக்கியம் அம்மா, என்ன ஒரே அமைதியா இருக்கு?" ராம் இருக்கிறானா என தெரிந்து கொள்ள இந்த கேள்வியை கேட்டாள் தமிழ்செல்வி.
"பெரிய தம்பி ஆபீஸ் போயிட்டாங்க. பாட்டிம்மா இப்போ தான் சாப்டுட்டு ரூம்க்கு போனாங்க. நீங்க வந்தா வர சொன்னாங்க" அவர் சொல்லவும் ராம் இல்லை என்ற ஒரு சிறு நிம்மதி உண்டானது தமிழ்செல்விக்கு.
ஒருவாறு மனதிற்குள் என்ன பேச வேண்டும் என்று தன்னை தயார் படுத்தி கொண்ட படி பாட்டியின் அறைக்குள் சென்றாள் தமிழ்செல்வி.
"குட் மார்னிங் பாட்டி" என்றபடி உள்ளே நுழைந்தவளை பார்த்த பாட்டி "குட் மார்னிங் செல்வி. என்னாச்சு??? உடம்பு சரியில்லையா? முகமே ஒரு மாதிரி இருக்கே" என்றவுடன் "இவரால் எப்படி இப்படி முகத்தை படிக்க முடிகிறது!!!"என்ற ஆச்சர்யத்துடன் அவரை பார்த்தவள் "ஜூஸ் குடிச்சீங்களா பாட்டி?" என்றாள் அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல். அவர் கேட்டவுடன் விஷயத்தை பேச நினைத்தவளுக்கு தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கி கொண்டது.