"ஏன்டி குளிக்கிறேன்னு பேர் பண்ணிக்கிட்டு போய் உடம்பில் தண்ணியைத் தெளிச்சுக்கிட்டு காக்கா குளியல் போட்டுட்டு வந்துட்டு என்னைக் கேள்வி கேட்கறியா?" என்று அவளை கேலி செய்தாள்.
"கேலி செய்தது போதும். என்ன சொன்னாங்க சொல்லு."
தோழியிடம் எதையும் மறைத்திராத மகாலட்சுமியும் தன் குடும்பத்தினர் பேசியதை அவளிடம் கூறினாள்.
"ஓ. அப்ப சீக்கிரமே டும் டும் டும்தானா? அதான் அம்மணி கனவுல மிதந்துக்கிட்டு இருக்கீங்களா? ஆமா மாப்பிள்ளை எப்படி இருக்கார்?"
"என்னைப் பத்தி உனக்குத் தெரியாதது போலவே பேசுவே. எந்தக் கழுதையா இருந்தாலும் கழுத்தை நீட்டறேன்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டேன். போட்டோவெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன்."
"நீ பார்க்க வேண்டாம் சரி. இந்தத் தேவதையைக் கட்டிக்கப் போற அந்த ஆணழகன் யாருன்னு நாங்க பார்க்கலாம்ல. நான் வேணா அம்மாக்கிட்ட கேட்டுப்பார்க்கவா?" என்று கேட்டுத் தோழியிடம் மொத்து வாங்கினாள்.
"ஆகா. இன்னிக்கு சாந்தாம்மா காலையில் பூரிதானே செய்யறேன்னு சொன்னாங்க. குருமா வாசம் வருது பாரேன்." எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் நாக்கைச் சுழட்டும் தோழியைக் கண்டு மகாலட்சுமிக்கு சிரிப்பு வந்தது.
"போ. போய் மொக்கிட்டு வா."
"ரொம்ப நன்றி தோழி. நீ உனக்கு வரப்போற இளவரசன் எப்படியிருப்பான்னு கற்பனை கண்டுக்கிட்டு இருக்கே. அதனால் உனக்குப் பசிக்காது. நானெல்லாம் அப்படியில்லப்பா. என்னோட அக்கா கல்யாணம் ஆன பிறகுதான் என்னைப் பற்றி யோசிக்க முடியும். அதனால் நான் இப்போது பூரியைக் கவனிக்கப் போகிறேன்." என்று அவளுக்குத் தேவையான தனிமையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
"உனக்கு வரப்போற இளவரசன் எப்படியிருப்பான்னு யோசி." என்று தோழி கூறிவிட்டுச் சென்றுவிட்டாலும் அவள் அதைப் பற்றி நினைக்கவில்லை.
அவள் நினைப்பு வேறாக இருந்தது.
இப்போது அவள் வரப்போகும் மாப்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும், ஆனால் அந்த திமிர் பிடித்தவன் மாதிரி மட்டும் இருந்துவிடக்கூடாது என்று நினைத்தாள்.
அனைவருக்கும் வணக்கம்.
"உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்" என்று மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கனவு போல் இருக்கிறது. நேற்றுதான் எழுத ஆரம்பித்தது போல்